ஆக்டிவா ஸ்கூட்டருக்குள் புகுந்த நாக பாம்பு... ஊரடங்கால் கிளம்பும் புதிய பிரச்னை...
ஊரடங்கு உத்தரவால் மக்கள் ஏற்கனவே பல விதமான பிரச்னைகளை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், இதனால் புதிய பிரச்னையும் மக்களுக்கு உருவாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வளர்ந்து வரும் மக்கள் தொகை காரணமாக காடுகள் அழிக்கப்பட்டு மனிதர்களின் இருப்பிடமாக அவை மாற்றப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக மனிதன்-விலங்குகள் மோதல் அவ்வப்போது அரங்கேறிய வண்ணம் உள்ளது. இதற்கு, விலங்குகளின் வசிப்பிடம் பறிக்கப்படுவதே முதன்மையான காரணமாகும். மேலும், அவை நகரத்தை நோக்கி நகர உந்துகோளாகவும் அமைகின்றது.
ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

அந்தவகையில், மனிதர்களின் இருப்பிடத்தை நோக்கி அதிகம் நகரும் விலங்குகளில் யானை முதல் இடத்தில் இருக்கின்றது. ஆனால், இதைவிட அதிகம் மக்கள் வாழ் பகுதிக்குள் நுழையும் ஒன்றாக பாம்புகள் இருக்கின்றன. இவை பொதுவாக நீர் மற்றும் நிலத்தில் வாழும் தன்மைக் கொண்டவை.

அதாவது, இரவில் கதகதப்பான சூழ்நிலையிலும், பகலில் குளிர்ச்சியான சூழ்நிலையிலும் வாழ விரும்பும். எனவேதான் இரவு நேரங்களில் வீட்டின் கதகதப்பான பகுதிகளுக்குள் அவை புகுந்துவிடுகின்றன. அதுமட்டுமின்றி, சில நேரங்களில் வாகனங்களுக்குள்ளும் புகுந்துவிடுகின்றன.

அந்தவகையிலான ஓர் சம்பவம்தான் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அரங்கேறியிருக்கின்றது. தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்றது. இதனால் வாகனங்கள் அனைத்தும் இயக்கமற்று, நிறுத்தப்பட்ட இடத்திலேயே அனாதையாக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில்தான் கொடிய விஷமுடைய நாக பாம்பு ஒன்று ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் ஹெட்லேம்ப் பகுதிக்குள் புகுந்திருக்கின்றது.
அதிர்ஷ்டவசமாக அந்த பாம்பு யாரையும் தாக்குவதற்கு முன்பாகவே, அதை கண்டறிந்த ஸ்கூட்டரின் உரிமையாளர், பாம்புபிடி வல்லுநர்களுடன் இணைந்து பாதுகாப்பாக அகற்றியுள்ளார்.

இதுபோன்ற வாகனத்திற்குள் பாம்புகள் நுழைந்துவிடுவது முதல் முறையல்ல இதற்கு முன்பாகவும் இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெற்றிக்கின்றது. குறிப்பாக, அடர்ந்த வனப்பகுதிக்கு அருகில் இருக்கும் கிராமங்களில் இது வழக்கமான சம்பவமாகவே மாறியிருக்கின்றது.

ஆனால், தற்போது நிகழ்ந்திருக்கும் இந்த சம்பவமானது ஹைதராபாத்தின் நகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரங்கேறியிருக்கின்றது. மேலும், புதுவிதமாக அந்த பாம்பைக் கையாண்டு, அவர்கள் ஸ்கூட்டரில் இருந்து வெளியேற்றிருக்கின்றனர்.

இதற்காக தண்ணீர் கேன் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்கூட்டரின் ஹெட்லேம்ப் கவுலை பாதுகாப்பாக கழட்டிய பாம்பு பிடி இளைஞர்கள், பல முறை சீறிய பாம்பை சில மணி போராட்டத்திற்கு பின் கேனுக்குள் வரவழைத்தனர்.
பின்னர், அந்த பாம்பை அருகில் இருந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டனர்.

ஏற்கனவே இந்த தேசிய ஊரடங்கு உத்தரவு மக்களை பல வழிகளில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, வறுமை என்னும் கொடிய நோயில் சிக்க வைத்துள்ளது. இந்நிலையில், தனித்துவிடப்பட்டிருக்கும் வாகனங்கள்மூலமாகவும் புதிய வகையில் ஆபத்துகள் கிளம்பியிருக்கின்றன.
இந்த சம்பவம், நீண்ட நாட்களாக வாகனங்களைப் பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்திருக்கும் வாகன உரிமையாளர்களுக்கு ஓர் பாடமாக அமைந்துள்ளது. அதாவது, வெகுநாட்கள் கழித்து வாகனத்தை பயன்படுத்துபவாரானால், சிறிது நேரம் செலவு செய்து, வாகனத்தை அலசி ஆராய்ந்த பின்னர் பயன்படுத்த வேண்டும் என்பதே இச்சம்பவத்தின் பாடமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








