சும்மாவா சொன்னாங்க தாயை சிறந்ததொரு கோவில் இல்லைனு! மகனுக்காக தனியொரு ஆளாக 1,400 கிமீ பயணித்த பெண்..
தாய் பாசத்திற்கு நிகர் இந்த உலகில் வேறெதுவும் இல்லை. இதனாலயே ஔவ்வை பாட்டி முதல் பல அறிஞர்கள் வரை தாய்மையைப் போற்றி பாடலை இயற்றியிருக்கின்றனர். இந்நிலையில், தாய் பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் ஓர் சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் தற்போது தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்றது. இந்த தடை உத்தரவு வருகின்ற 14ம் தேதி வரை நீடிக்கும் என முன்னதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். ஆனால், கொரோனா வைரசின் தாக்கம் அதி தீவிரமாக இருப்பதால் இந்த தடை உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. இதையேதான் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் வலியுறுத்தியும் வருகின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் நாளையே (ஏப்ரல் 11) அறிவிக்கப்பட இருக்கின்றது.

நாளை பிரதமர் மோடி அனைத்து மாநிலத்தின் முதலமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றார். அவர்களிடத்தில் அந்தந்த மாநிலத்தின் கள நிலவரங்களைப் பற்றி கேட்டறிந்த பின்னரே, ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு பற்றிய தகவலை அரசு அறிவிக்க இருக்கின்றது. இருப்பினும், சுகாதாரத்துறை மற்றும் சில ஆராய்ச்சி நிறுவனங்கள் ஊரடங்கு உத்தரவை ஜூன் மாதம் வரை நீட்டிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன.

இதற்காக, மக்களை இப்போவே தயார்படுத்துமாறு அவை கூறியுள்ளன. முன்னதாக இந்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியபோது அரசு திடீரென அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் பொது போக்குவரத்தை தடை செய்வதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்த திடீர் அறிவிப்புகளால் பலர் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

குறிப்பாக, புலம் பெயர்ந்த தினக் கூலி தொழிலாளர்களே இந்த திடீர் அறிவிப்புகளால் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
போதிய அளவு பணம் கையிருப்பில் இல்லாதது மற்றும் அரசு வாகனங்கள் (ரயில் மற்றும் பேருந்து) ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் பல ஆயிரம் கிமீ-கள் கடந்துசென்று பணியாற்றியவர்கள் அனைவரும் வேற்று மாநிலங்களிலேயே அகதிகளாக தங்கும் நிலை உருவானது.

அந்தவகையில் 700 கிமீ தொலைவில் சிக்கிய மகனை திரும்பி அழைத்து வருவதற்காக தனியொரு ஆளாக புறப்பட்டுச் சென்று, அவரை திரும்பி அழைத்தும் வந்துள்ளார் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் பெண்.
தாய் பாசத்திற்கு நிகரானது இவ்வுலகில் எதுவும் இல்லை என்று கூறுவதை நாம் கேட்டிருப்போம். அதை உணர்த்தும் வகையில் 48 வயதான ரசியா பேகம், இந்த இக்கட்டான (கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கும்) சூழ்நிலையில் தனது உயிரைப் பற்றி துளியும் கவலைப்படாமல் செயல்பட்டுள்ளார்.

இதற்காக அவர் பயன்படுத்திய வாகனம் நம்மை இன்னும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் வகையில் உள்ளது. ஆம், சுமார் 1,400-க்கும் அதிகமான கிமீ தூரம் சென்று வர ரசியா பேகம் ஹோண்டா கிரேசியா ஸ்கூட்டரைப் பயன்படுத்தியுள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ரசியா பேகம், தற்போது நிஜாமாபாத் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு ஓர் மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் பொறியியல் பட்டதாரி ஆவார். மகன் தற்போது நாராயணா மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சார்ந்த படிப்பை மேற்கொண்டார்.

இந்த இளைஞர்தான் ஆந்திர மாநிலத்தின் நெல்லூரில் ஊரடங்கு உத்தரவு காரணமாக சிக்கிக் கொண்டார். வீடு திரும்ப பொது போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால், யாரும் இல்லாத அந்த ஊரிலேயே தங்க நேரிட்டுள்ளது. ரசியா பேகம் கணவனை இழந்து வாழும் ஓர் பெண் ஆவார். ஆகையால், சூமார் 700 கிமீ தொலைவில் தனியாக சிக்கியிருக்கும் மகனை மீட்டுவர அவரே களமிறங்கியிருக்கின்றார்.

தற்போது, 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் மற்றவர் வெளியே செல்லுவது நல்ல பலனை அளிக்காது என்று நினைத்த ரசியா, அவரே களத்தில் இறங்கி போலீஸிடம் உரிய அனுமதி பெற்று நெல்லூர் புறப்பட்டுள்ளார். பலர், ரசியாவின் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போடும்விதமாக தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால், தாய் பாசம் அவரது கண்களை மறைத்து விட்டது. அதற்கேற்ப அவரது மகனை தற்போது வீட்டிற்கும் கொண்டு வந்துவிட்டார்.

ஒட்டுமொத்தமாக 1,400 கிமீ சென்று வர ஹோண்டா கிரேசியா பைக்கை மட்டுமே அவர் நம்பிச் சென்றுள்ளார். உடன் பசியாற்றிக் கொள்வதற்காக சில ரொட்டிகளையும் எடுத்துச் சென்றார். கடந்த திங்கள் அன்று ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்ட ரசியா, புதன்கிழமை அன்று வீடு சேர்ந்ததாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம்குறித்த தகவல் போலீஸார் வாயிலாக ஊடகத்துறைக்கு தெரியவந்ததையடுத்து ரசியாக பேகமிற்கு பாராட்டு மழை குவிந்து வருகின்றது.
தனி ஆளாக நின்று வெறும் இருசக்கர வாகனத்தை மட்டுமே நம்பி, தற்போது நிலவும் ஆபத்தைப் பற்றி சற்றும் கவலைக் கொள்ளாமல் ரசியா பேகம் செய்திருக்கும் இந்த சாதனை ஒட்டுமொத்த தாய் குலத்திற்கு பாராட்டை அளிக்கும் விஷயமாக உள்ளது.
சும்மாவா சொன்னங்க நம்ம ஔவ்வை பாட்டி, தாயைச் சிறந்ததொரு கோவில் இல்லை என்று... தாய் பாசத்திற்கு நிகர் இந்த உலகில் எதுவும் இல்லை என்பதற்கே இந்த சம்பவமே சான்று...


Click it and Unblock the Notifications








