ஏப்ரலில் இருந்து யமஹா ஆர்3 பைக் விற்பனைக்கு கிடைக்காது... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
பிஎஸ்6 வெர்சன் பைக்கை சந்தையில் அறிமுகப்படுத்தும்வரை ஆர்3 பிஎஸ்4 மாடலின் விற்பனையை வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நிறுத்தவுள்ளதாக யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் யமஹா ஆர்3 பைக் அடுத்த மாதத்தில் இருந்து டீலர் ஷோரூம்களில் விற்பனை செய்யப்படாது.

ஆர்3 பைக்கில் 321சிசி, லிக்யூடு-கூல்டு, இணையான-இரட்டை என்ஜினை யமஹா நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த பிஎஸ்4 என்ஜினை இந்நிறுவனம் இதுவரை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யவில்லை. இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவான மார்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே ஆர்3 பைக் சந்தையில் கிடைக்கும்.

யமஹா ஆர்3 மாடலின் தற்போதைய தலைமுறை பைக் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் ட்வின்-பேட் ஹெட்லேம்ப் மற்றும் சவுகரியமான ரைடிங் பொசிஷன் உடன் உள்ளது. எல்லா விதமான சாலைகளுக்கும் ஏற்ற மோட்டார்சைக்கிளான ஆர்3-ஐ அன்றாட பயன்பாடு முதல் தொலைத்தூர பயணம் மற்றும் மலைப்பிரதேச பயணங்களுக்கும் பயன்படுத்தலாம்.

இதில் உள்ள 321சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 10,750 ஆர்பிஎம்-ல் 41 பிஎச்பி பவரையும், 9,000 ஆர்பிஎம்-ல் 29.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

டைமண்ட் ஃப்ரேம்-ஆல் தயாரிக்கப்பட்டுள்ள யமஹா ஆர்3 பைக்கில் பேலன்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்பாக முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸும், பின்புறத்தில் மோனோ-ஷாக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

ப்ரேக்கிங் பணியை ஆர்3-ல் 298மிமீ டிஸ்க் மற்றும் 220மிமீ டிஸ்க் முறையே முன்புறம் மற்றும் பின்புறத்தில் கவனிக்கின்றன. இவற்றுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டமும் நிலையாக உள்ளது. இதன் 17-இன்ச் அலாய் சக்கரங்களில் மெட்ஸ்லெர் ஸ்போர்டெக் எம்5 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

தற்போதைய தலைமுறை யமஹா ஆர்3 பைக்கில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்க செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஆர்3 மாடலில் தலைக்கீழான ஃபோர்க் உள்பட பல வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய சந்தையில் யமஹா ஆர்3 பைக் மிகவும் ப்ரீமியம் மோட்டார்சைக்கிளாக கருதப்படுகிறது.

எனவே இந்தியாவில் வெளியாகும் ஆர்3 மாடலின் அடுத்த தலைமுறை பைக்கை முற்றிலும் புதுமையான டிசைனில் எதிர்பார்க்கலாம். நமக்கு தெரிந்தவரை இந்த புதிய பைக்கில் ஸ்மோர்ட்போன் இணைப்பு தொழிற்நுட்பம் வழங்கப்படும் என தெரிகிறது. இதையெல்லாம் விட முக்கியமான அப்கிரேட்டாக அடுத்த தலைமுறை ஆர்-3 சில எலக்ட்ரானிக் ரைடர் உபகரணங்களை பெறவுள்ளது.

யமஹா ஆர்3 பைக்கின் விற்பனை அடுத்த மாதத்தில் இருந்து நிறுத்தப்படவுள்ளதால், எண்ட்ரீ-லெவல் ஸ்போர்ட் மாடல் பைக்கை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 அல்லது கேடிஎம் ஆர்சி390 என்ற இரண்டில் இருந்து ஒன்றை தான் தேர்ந்தெடுக்க முடியும்.

ஆர்3 பைக்கின் விற்பனை நிறுத்தம் நிச்சயம் யமஹா நிறுவனத்திற்கு இந்திய சந்தையில் மிக பெரிய பின்னடைவாக அமையும். ஏனெனில் கேடிஎம் 390 மாடலுடன் என்ஜின் மற்றும் ஆக்ஸலரேஷன் தரத்தில் போட்டியிட ஆர்3 பைக் மட்டும் தான் தற்போதைக்கு உள்ளது. யமஹா ஆர்3 பைக்கின் பிஎஸ்6 மாடல் அடுத்த ஆண்டில் தான் இந்திய சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








