பரபரப்பாக நடந்து முடிந்தது 2021 ரெட் புல் ஏஸ் பந்தய போட்டி!! கேரளாவை சேர்ந்த ரைடர் முதலிடம்..!
மண் மற்றும் புழுதி மிகுந்த ஆஃப்-ரோடில் நடத்தப்பட்ட 2021 ரெட் புல் ஏஸ் இருசக்கர வாகன பந்தயம் சமீபத்தில் நிறைவு பெற்றுள்ளது. இந்த பந்தயத்தின் முடிவுகளை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த மார்ச் 18 மற்றும் 19 என இரு நாட்களாக கர்நாடகாவில் உள்ள பிக் ராக் டர்ட்பார்க் என்ற களத்தில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் கேரளாவை சேர்ந்த வி.எம்.மகேஷ் என்ற ரைடர் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ரெட் புல் ஏஸ் பந்தயத்தின் இரண்டாவது எடிசனான இதில் டெக்ராடூன், எர்ணாக்குளம், மைசூர், கௌகாத்தி, மணலி, அஸ்ஸாம், ஹிமாச்சல பிரதேசம், ஜெய்பூர், சிக்மாகலூர் மற்றும் பெங்களூர் என இந்தியாவின் வெவ்வேறான பகுதிகளில் இருந்து மொத்தம் 30 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

பிக் ராக் டர்ட்பார்க்கில் ட்ராக்கை பற்றி கூற வேண்டுமென்றால், வெயிட் பாலம், பிளிப்பரின் லாக், பீப்பாய், பாறை, கற்களுடன் அதிகளவில் மண், பெரிய அளவிலான குழாய்கள், மரக்கட்டைகள் உள்ளிட்டவற்றுடன் கடினமான ஆஃப்-ரோடு பாதையாக உருவாக்கப்பட்டு இருந்தது.

இதனால் ஏர்-டைம் எனப்படும் காற்றில் சில வினாடிகள் பைக்குடன் பறப்பது இந்த பந்தயந்தில் அதிகமாகவே இருந்தது. போட்டியின் முதல் நாளான மார்ச் 18ஆம் தேதி காலையில் போட்டியாளர்கள் பயிற்சியை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

அதன்பின் போட்டிக்கு தேவையான உடற்தகுதியை நிரூபிக்க போட்டியாளர்கள் பிசியோ நிபுணர் ஒருவரிடம் அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்பின் போட்டியாளர்கள் தங்களது மோட்டார்சைக்கிள் மற்றும் கியரை பந்தயத்தின் ஆய்வாளர்களிடம் வழங்குவதோடு முதல் நாள் நிறைவுக்கு வந்தது.

இரண்டாவது நாள், சைட்டிங் லேப் எனப்படும் பந்தய களத்தை மோட்டார்சைக்கிள் உடன் போட்டியாளர்கள் பார்வையிடும் லேப்-இல் இருந்து துவங்கியது. இந்த லேப் கிட்டத்தட்ட வார்ம் அப் போன்றது. அதன்பின் இரு லேப்கள் மேற்கொள்ளப்பட்டன.

நான்கு பேர் அடங்கிய ஒரு தொகுப்பில் இருந்து இரு நபர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதிக்கு பெறும் வகையில் போட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது. இதில் தகுதி பெற்றவர்கள் ஹீட் ரேஸில் ஒருவரையொருவர் எதிர் கொண்டனர்.

இதில் ஒவ்வொரு ஹீட் ரேஸிலும் வெற்றி பெற்றவர் மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்தவர்கள் என 4 தொகுப்பாக 16 ரைடர்கள் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர். ஹீட் ரேஸில் பின்பற்றப்பட்ட அதே விதிமுறைகளுடன் 3 லேப்களில் கால் இறுதி போட்டிகள் நடத்தப்பட்டன.

கால் இறுதிகளின் மூலம் ரைடர்களின் எண்ணிக்கை 8 ஆக குறைந்தது. அரையிறுதி போட்டிகள் 4 லேப்களாக நடத்தப்பட்டன. இதன் முடிவில் இறுதி போட்டி வி.எம்.மகேஷ் (வெற்றியாளர்), ஏ.சத்தியராஜ் (முதல் ரன்னர்), டி.சச்சின் (இரண்டாவது ரன்னர்), பி.கிடியோன் (மூன்றாவது ரன்னர்) என்ற நான்கு ரைடர்களுக்கு இடையே நடந்தது.

வெற்றியாளர் மகேஷின் லேப் நேரம் 20 நிமிடங்கள் & 29 வினாடிகளாகும். இவருக்கு அடுத்து 39 வினாடிகள் தாமதமாக சத்யராஜும், 3 நிமிடங்கள் & 50 வினாடிகள் தாமதமாக சச்சினும், 5 நிமிடங்கள் & 52 வினாடிகள் தாமதமாக பி.கிடியோனும் நிர்ணயிக்கப்பட்ட லேப்களை நிறைவு செய்தனர்.

இந்த பந்தயந்தில் வெற்றி பெற்றதன் மூலம் வாழ்நாள் முழுவதும் பிரபல ஏஸ் மோட்டார்சைக்கிள் ரைடரான சிஎஸ்.சந்தோஷிடம் பயிற்சி பெறும் வாய்ப்பினையும், ஹீரோவின் புதிய எக்ஸ்பல்ஸ் 200 பைக்கையும் கேரளாவை சேர்ந்த விஎம்.மகேஷ் பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications








