25,000 எலெக்ட்ரிக் டூ-வீலர்களை வாங்கும் நமது அண்டை மாநிலம்! எதற்காக தெரிஞ்சா ரொம்ப பொறாமைப்படுவீங்க!
நமது அண்டை மாநிலம் ஒன்று 25 ஆயிரம் எலெக்ட்ரிக் டூ-வீலர்களை வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

அரசு பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 25 ஆயிரம் மின்சார இருசக்கர வாகனங்களை தென்னிந்தியாவைச் சேர்ந்த ஓர் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. நமது அண்டை மாநிலமான ஆந்திராவிலேயே இத்திட்டம் போடப்பட்டிருக்கின்றது. இதற்காக ஒன்றிய அரசின் நிறுவனம் ஒன்றுடன் ஆந்திர அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

மாநிலத்தில் மின் வாகன பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் வகையிலும், மக்களை மின் வாகனங்களை நோக்கி நகர்த்துகின்ற வகையிலும் இந்த நடவடிக்கையை ஜகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு மேற்கொண்டிருக்கின்றது.

பெட்ரோலிய எரிபொருளில் இயங்கும் வாகனங்களால் காற்று மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றது. ஆகையால், பெட்ரோல்-டீசல் வாகன பயன்பாட்டை குறைத்து மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் இந்தியாவில் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஃபேம் 2 திட்டத்தின்கீழ் மானியம் வழங்குதல், வரி சலுகைகள் உள்ளட்டவற்றை ஒன்றியம் மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையிலேயே ஆந்திர அரசு தங்கள் மக்களின் மனதில் நம்பிக்கையை விதைக்கும் விதமாக அரசு பணியாளர்களுக்கு மின்சார இருசக்கர வாகனத்தை திட்டமிட்டுள்ளது.

இதற்காக, ஆந்திராவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகம் (NREDCAP) மற்றும் கன்வர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் (CESL) இரண்டும் தற்போது இணைந்திருக்கின்றன. இவற்றின் இணைவின்கீழே அரசுக்கு தேவையான மின் வாகனங்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன.

வாகனங்கள் அனைத்தும் மாத குத்தகை திட்டத்தின்கீழ் வழங்கப்பட இருக்கின்றன. மேலும், தன்னார்வம் உள்ள அரசு ஊழியர்களை இந்த வாகனத்தை இஎம்ஐ திட்டத்தின்கீழ் வாங்கிக் கொள்ளலாம். மாத சம்பளத்தில் இது கழித்துக் கொள்ளப்படும். இதன் கீழே விரிவான காப்பீடு உள்ளிட்டவையும் வழங்கப்பட இருக்கின்றன.

60 ஆயிரம் கிமீ அல்லது மூன்று வருடங்கள் என்ற உத்தரவாதத்துடன் மின்சார இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இதுகுறித்து ஆந்திராவின் எரிசக்தி துறை அமைச்சர் பலினேனி சீனிவாச ரெட்டி கூறியதாவது, "இந்த நடவடிக்கையை மாநிலத்தை மின்சார இயக்கத்தின் பாதையில் கொண்டு செல்ல உதவும்" என்றார்.

மேலும், "நாங்கள் மலிவு மற்றும் தூய்மையான சக்தியை திறம்பட வழங்கி வருகிறோம். அரசு ஊழியர்களுக்கான மின்சார 2 சக்கர வாகனங்கள் ஆற்றல் மற்றும் நிதி சேமிப்பை அதிகரிக்கும். அரசு பணியாளர்களைத் தொடர்ந்து அதிகப்படியான மக்களும் மின் வாகனங்களை ஏற்க தொடங்குவர்" என நம்பிக்கைத் தெரிவித்தார்.
குறிப்பு: செய்தியில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து படங்களும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








