ஓசூரில் இரண்டாவது தொழிற்சாலையை திறக்கும் ஏத்தர் எனர்ஜி!! வருடத்திற்கு 4 லட்ச இ-ஸ்கூட்டர்களை இனி தயாரிக்கலாம்!
ஹீரோ-மோட்டோகார்பின் உதவியுடன் செயல்பட்டுவரும் ஏத்தர் எனர்ஜி ஓசூரில் அதன் இரண்டாவது தொழிற்சாலையை நிறுவவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்தும், இந்த புதிய ஏத்தர் தொழிற்சாலை குறித்தும் இனி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை பெரிய அளவில் முன்னேறி இருப்பதற்கு காரணங்களுள் ஏத்தர் எனர்ஜி நிறுவனமும் ஒன்றாகும். மிகவும் ஸ்டைலிஷான, அதேநேரம் அதிசெயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துவரும் இந்த நிறுவனம் அடுத்த 2022இல் ஓசூரில் அதன் இரண்டாவது தொழிற்சாலையை உருவாக்க உள்ளது.

இந்த புதிய தொழிற்சாலையின் மூலம் ஏத்தர் எனர்ஜியின் ஆண்டு தயாரிப்பு திறன் 1.20 லட்சத்தில் இருந்து 4 லட்சமாக உயரவுள்ளது. இதனை இந்த நிறுவனம் அதன் அறிக்கையில் உறுதிப்படுத்தி உள்ளது. தமிழகத்திலேயே ஓசூரின் இரண்டாவது தொழிற்சாலையான இதில் ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் 450 ப்ளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன.

ஏத்தர் எனர்ஜி ஓசூரில் அதன் முதல் தொழிற்சாலையை இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் தான் நிறுவியது. விரைவில் திறக்கப்பட உள்ள புதிய தொழிற்சாலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி, லித்தியம்-இரும்பு பேட்டரிகளும் தயாரிக்கப்பட உள்ளன. ஏனெனில் இ-ஸ்கூட்டர்களுக்கான பேட்டரிகளை தயாரிப்பதிலும் ஏத்தர் எனர்ஜி முதன்மையானதாக விளங்குகிறது.

இதுகுறித்து ஏத்தர் என்ர்ஜியின் துனை நிறுவனரும், சிஇஓ-வுமான தருண் மெஹ்தா கருத்து தெரிவிக்கையில், 2022ஆம் ஆண்டில் தயாராக இருக்கும் இரண்டாவது ஆலையை நாங்கள் திறக்கவுள்ளோம். இந்த திறன் விரிவாக்கத்தின் மூலம் அடுத்த ஆண்டிற்குள் நாட்டின் மிக பெரிய இவி தயாரிப்பாளராக ஆவதற்கு ஏத்தர் எனர்ஜி தயாராகி வருகிறது என்றார்.

இதுவரையில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த அக்டோபரில் 12 மடக்கு அதிக வளர்ச்சியை விற்பனையில் கண்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க, ஏத்தர் எனர்ஜியின் வருவாய் 100 மில்லியன் அமெரிக்கன் டாலர்களுக்கு அதிகரித்தது. இதன் மூலமாக தாங்கள் இந்தியாவிலேயே அதிக மதிப்பு கொண்ட இவி நிறுவனமாக உருவெடுத்துள்ளதாகவும் ஏத்தர் எனர்ஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெஹ்தா பேசுகையில், எங்களது வாடிக்கையாளர் அனுபவ மையங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. மேலும் வரும் காலாண்டில் எங்கள் சில்லறை வர்த்தகம் ஆறு மடங்கு வளர்ச்சி அடையும். எனவே புதிய தொழிற்சாலையை திறந்த பத்து மாதங்களில் நாங்கள் முழு திறனுடன் செயல்படுவதை காண்கிறோம் என்றார்.

இந்திய இருசக்கர இவி பிரிவில் தனது வலிமையை வெளிக்காட்டி வரும் ஏத்தர் எனர்ஜி, 2020 நவம்பர் மாதத்தில் இருந்து 20 சதவீத வளர்ச்சியை மாதம்-மாதம் ஒப்பிடுகையில் கண்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விரும்புபவர்களின் எண்ணிக்கையும், இந்த ஸ்கூட்டர்கள் குறித்து இணையத்தில் தேடுவோரின் எண்ணிக்கையும், 3 மடங்கு அதிகரித்துள்ளதை இந்த இடத்தில் கூறியே ஆக வேண்டும்.

அதேநேரம் வாகன முன்பதிவுகள் 4 மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஏத்தர் பிராண்டில் 450எக்ஸ் பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்குகிறது. ஏத்தர் 450எக்ஸ் கிட்டத்தட்ட 90% இந்தியாவிலேயே கிடைக்கும் பாகங்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. 450எக்ஸ் மாடல் மட்டுமின்றி, 450 ப்ளஸ் ஸ்கூட்டரும் பெரும்பான்மையாக இந்தியாவில் தயாரிக்கப்படும் பாகங்களை கொண்டே உருவாக்கப்படுகிறது.

இவ்வளவு ஏன், ஸ்கூட்டரில் பொருத்தப்படும் பேட்டரிகளை கூட ஏத்தர் எனர்ஜி நிறுவனமே தயாரிப்பதாக முன்பே கூறியிருந்தோம். ஏத்தர் ஸ்கூட்டர்களுக்கு அதிகரித்துவரும் தேவையை பொறுத்து செயல்திறன் மற்றும் தயாரிப்பு திறனை மேம்படுத்த அடுத்த ஐந்து வருடங்களில் சுமார் ரூ.650 கோடியை முதலீடு செய்ய ஏத்தர் திட்டமிட்டுள்ளது.

மேலும், புதிய புதிய நகரங்களில் வணிகத்தை துவங்குவதின் மூலம் இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தை விரிவுப்படுத்த ஏத்தர் தயாராகி வருகிறது. 2023 மார்ச் மாதத்திற்குள் 100 நகரங்களில் நாடு முழுவதும் 150 வாடிக்கையாளர்கள் அனுபவ மையங்களை கூடுதலாக உருவாக்க பணியாற்றிவரும் ஏத்தர், சார்ஜிங் உள்கட்டமைப்பிலும் அதிக தொகையினை முதலீடு செய்துள்ளது.

ஓசூரில் தொழிற்சாலைகளை அமைத்து வந்தாலும், பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏத்தர் எனர்ஜி முன்பு கட்டணத்தின்கீழ் வழங்கி வரும் இணைப்பு சேவைகளை கட்டணமின்றி வழங்கவுள்ளதாக சமீபத்தில் அதிரடி அறிவிப்பு ஒன்றினை அறிவித்திருந்தது. கனெக்ட் ப்ரோ மற்றும் கனெக்ட் லைட் என்கிற இரு விதமான சந்தா தேர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு ஏத்தர் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








