Honda Activa-வை விட குறைவான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... உறுதியளித்த பிரபல நிறுவனத்தின் முக்கிய அதிகாரி!
மிக குறைவான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக பிரபல நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அது தற்போது விற்பனையில் இருக்கும் Honda Activa-வை விட குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த மேலும் பல முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக, எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களை, முன்னணி நிறுவனங்கள் தொடங்கி, புதுமுக மின் வாகன உற்பத்தி நிறுவனங்கள் வரை அறிமுகப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் ஏற்கனவே இந்தியாவில் மின் வாகன சந்தையில் மிக ஆழமாக காலூன்றி இருக்கும் Ather Energy (ஏத்தர் எனர்ஜி) நிறுவனம், இந்த நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஓர் புதுமுக தயாரிப்பை களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம், விரைவில் மிக குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை புதிதாக விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆட்டோகார்ப்ரோ தளம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, நிறுவனம் ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இது தற்போது விற்பனையில் இருக்கும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரைக் காட்டிலும் குறைவான விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக கூடுதலாக வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் தற்போது இரு விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. 450 ப்ளஸ் மற்றும் 450 எக்ஸ் எனும் இரு தேர்வு மின்சார ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதில், 450 ப்ளஸ் தேர்வின் விலை ரூ. 1.13 லட்சம் ஆகும். 450 எக்ஸ் தேர்வின் விலை ரூ. 1.32 லட்சம் ஆகும். இவையிரண்டும் சற்று அதிக விலைக் கொண்ட மின்சார வாகனமாக விற்பனையில் இருக்கின்றன.

எனவேதான் இதைக்காட்டிலும் குறைவான விலைக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைக் களமிறக்கும் முயற்சியில் ஏத்தர் தற்போது களமிறங்கியிருக்கின்றது. பட்ஜெட் ரக எலெக்ட்ரிக் வாகன பிரியர்களைக் கவரும் நோக்கில் இந்த செயலில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

மிக சமீபத்தில் சிம்பிள் நிறுவனம் அதன் சிம்பிள் ஒன் எனும் பெயர் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் ஆரம்ப நிலை மாடலின் விலை ரூ. 1.10 லட்சம் ஆகும். இதைவிட குறைந்த விலையில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியிருக்கின்றன.

நிறுவனத்தின் எஸ்1 வேரியண்ட் ரூ. 99.99 என்ற விலையிலும், எஸ்1 ப்ரோ 1.29 லட்ச ரூபா என்ற விலையிலும் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இவை அனைத்தைக் காட்டிலும் மிகக் குறைவான விலையிலேயே தனது புதிய தயாரிப்பை ஏத்தர் எனெர்ஜி தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசின் மானியம் போன்ற சலுகைகளுக்கு உட்பட்டு அந்த எலெக்ட்ரிக் வாகனம் ரூ. 70 ஆயிரம் அல்லது ரூ. 80 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய விலை குறைவிற்காக தற்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைக் காட்டிலும் குறைவான அம்சங்களை புதிய தயாரிப்பில் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

ஆம், சிறப்பம்சங்களின் குறைப்பின் வாயிலாகவே குறைந்த விலையிலான புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வர ஏத்தர் திட்டமிட்டுள்ளது. அதேவேலையில், தனது புகழ்மிக்க மாடலான 450 வரிசையை தழுவியே புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்க இருப்பதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரி ரவ்நீத் போகேலே கூறியுள்ளார்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் இன்னும் 18 முதல் 24 மாதங்களுக்கு உள்ளாக அரங்கேறிவிடும் என்றும் அவர் கூறியிருக்கின்றார். ஆகையால், 2023ம் ஆண்டிற்குள் மலிவு விலை ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் பலரின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








