ஏத்தர் ஷோரூம் திறக்கப்பட்டதால் திருச்சி மக்கள் உற்சாகம்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை எவ்ளோனு தெரியுமா?
திருச்சியில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெங்களூர் நகரை சேர்ந்த எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஏத்தர் எனர்ஜி தனது 11வது ஷோரூமை இன்று (ஜூலை 7) திறந்துள்ளது. ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஷோரூம்கள் ஏத்தர் ஸ்பேஸ் (Ather Space) என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. 11வது ஏத்தர் ஸ்பேஸ் திருச்சி தில்லை நகர் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.

வேலா ஆட்டோமொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்த ஷோரூமை திறந்துள்ளது. இங்கு ஏத்தர் 450எக்ஸ் (Ather 450X) மற்றும் ஏத்தர் 450 ப்ளஸ் (Ather 450 Plus) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெஸ்ட் ரைடு செய்வதற்கும், விற்பனைக்கும் கிடைக்கும் என ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியான ரவ்னீத் போக்லா கூறுகையில், ''சந்தையில் எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் மாதங்களில் டெலிவரி பணிகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். திருச்சி நகரில் செயல்திறன் மிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வரவேற்பு காணப்படுகிறது.

இந்த சூழலில் சமீபத்திய விலை குறைப்பு காரணமாக, செயல்திறன் மிக்க எங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மலிவானதாக மாறியுள்ளன. அத்துடன் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது தவிர்க்க முடியாதது'' என்றார். இந்தியாவில் தற்போது எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இது தொடர்பாக வேலா ஆட்டோமொபைல்ஸ் இயக்குனர் மணிவண்ணன் கூறுகையில், ''ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு திருச்சியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. ஏத்தர் ஸ்பேஸ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வெகு சிறப்பான அனுபவத்தை வழங்க உறுதி எடுத்துள்ளோம்'' என்றார். ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் வருகை திருச்சி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக திருச்சியின் 5 இடங்களில் ஏத்தர் க்ரிட் ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணாமலை நகர், சிங்காரம் நகர், கண்டோன்மெண்ட், சாலை ரோடு மற்றும் திருவானைக்கோயில் ஆகிய 5 இடங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''திருச்சி நகரில் மேலும் 8 முதல் 10 சார்ஜிங் பாயிண்ட்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டிலேயே சார்ஜிங் பாயிண்ட் வசதியை ஏற்படுத்தி கொள்வதற்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உதவும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2 ஆண்டுகளில் சென்னை நகரில் 450 அப்பார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸ் மற்றும் கட்டிடங்களில், ஹோம் சார்ஜர்களை பொருத்தியுள்ளதாகவும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கூறியுள்ளது. ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் முதல் ஏத்தர் ஸ்பேஸ் ஷோரூம் பெங்களூரில் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் சென்னைக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

அத்துடன் மும்பை, புனே, ஐதராபாத், கொச்சி, ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களிலும் ஏத்தர் எனர்ஜி நடப்பாண்டு காலடி பதித்தது. தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னைக்கு அடுத்தபடியாக இது 2வது ஏத்தர் ஸ்பேஸ் ஷோரூம் ஆகும். அதே நேரத்தில் கோவை நகரிலும் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அங்கு ஏத்தர் ஸ்பேஸ் ஷோரூம் விரைவில் திறக்கப்படவுள்ளது.

திருச்சியில் ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை 1,46,296 ரூபாய் ஆகவும், ஏத்தர் 450 ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை 1,27,286 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஃபேம் இந்தியா-2 திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகான எக்ஸ் ஷோரூம் விலையாகும். விலை சற்று அதிகம் என்றாலும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்புகளாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








