இது சூப்பரான முடிவு... பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி உயர போகுது... எப்படினு தெரியுமா?
பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி உயரவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புனேவின் அக்ருடி பகுதியில் புதிய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்காக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 300 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளது. இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன.

இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை உயர்ந்து வருகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு பல்வேறு நிறுவனங்களும் முயற்சி செய்து வருகின்றன. இதில், பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் ஒன்று. பஜாஜ் நிறுவனத்தின் உண்மையான சேத்தக் ஸ்கூட்டர் இதே தொழிற்சாலையில்தான் உற்பத்தி செய்யப்பட்டது.

பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர் ஒரு காலத்தில் எவ்வளவு பிரபலமாக இருந்தது? என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பஜாஜ் நிறுவனத்தின் பெயரை இந்தியாவின் இல்லம்தோறும் கொண்டு சென்று சேர்த்த பெருமை சேத்தக் ஸ்கூட்டருக்கு உண்டு. இந்த தொழிற்சாலை சுமார் அரை மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.

இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 800 பேர் வேலை வாய்ப்பு பெறவுள்ளனர். இந்த தொழிற்சாலையில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ரோபோடிக் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகளை இந்த தொழிற்சாலை பெற்றிருக்கும்.

இந்த தொழிற்சாலையில் இருந்து முதல் வாகனம் வரும் 2022ம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் வாகன தொழிற்சாலையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமும் அமையப்பெற்றிருக்கும். உற்பத்தி ஆலை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவை ஒரே இடத்தில் அமையவுள்ளதால், எலெக்ட்ரிக் வாகனங்களை வேகமாக மேம்படுத்த முடியும் என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கருதுகிறது.

தற்போதைய நிலையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. பழைய சேத்தக் ஸ்கூட்டரின் பெயர்தான், தற்போதைய புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆனால் இதன் உற்பத்தி மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. எனவே தேவைக்கு ஏற்ற உற்பத்தியை உடனடியாக அதிகரித்தாக வேண்டிய தேவை உள்ளது. உற்பத்தியில் உள்ள பிரச்னைகளை களைவதற்கு இந்த எலெக்ட்ரிக் வாகன தொழிற்சாலை உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு அதிக தேவை உள்ளது.

குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பலரும் விரும்புகின்றனர். இந்த தேவையை பூர்த்தி செய்வதற்கு இந்த தொழிற்சாலை உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 95 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே நல்ல ரேஞ்ச் என்பதில் சந்தேகமில்லை.

இந்த பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 25 சதவீதம் வரை சார்ஜ் செய்வதற்கு 1 மணி நேரம் வரை ஆகும். அதே நேரத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 5 மணி நேரம் வரை ஆகும். அர்பன் மற்றும் பிரீமியம் என மொத்தம் 2 வேரியண்ட்களில் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








