இரண்டாவது மின்சார வாகனத்தை களமிறக்க தயாராகும் பஜாஜ்! வர்த்தக பதிவையே செஞ்சிட்டாங்க! அட என்னா ஃபாஸ்டு!
பஜாஜ் நிறுவனம் அதன் இரண்டாவது மின்சார தயாரிப்பைக் களமிறக்க தயாராகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில இன்னும் முதல் மின்சார வாகனத்தையே அறிமுகம் செய்யாமல் இருக்கின்ற நிலையில், பஜாஜ் நிறுவனம் அதன் இரண்டாவது மின்சார தயாரிப்பை இந்தியாவில் களமிறக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஜாஜ் நிறுவனத்தின் முதல் மின்சார தயாரிப்பாக சேத்தக் மின்சார ஸ்கூட்டர் இருக்கின்றது. நிறுவனம் வெகு நீண்ட ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் களமிறக்கிய முதல் ஸ்கூட்டரும் இதுவே ஆகும். இந்த மின்சார ஸ்கூட்டருக்கு இந்தியாவில் தற்போது நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

இருப்பினும் நாட்டின் குறிப்பிட்ட சில முக்கிய நகரங்களில் மட்டுமே சேத்தக் மின்சார ஸ்கூட்டரினை நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது. இந்நிலையில், மீண்டும் ஒரு புதுமுக மின்சார வாகனத்தால் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையை அலங்கரிக்க நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் பஜாஜ் நிறுவனம், புதிதாக ஃப்ரீ ரைடர் எனும் இருசக்கர வாகனம் ஒன்றிற்கான வர்த்தக பதிவை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனை வகுப்பு 12ன் கீழ் நிறுவனம் பதிவு செய்திருக்கின்றது. இதை வைத்தே இது மின்சார தயாரிப்பாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கூடவே, இது மின்சார தயாரிப்பிற்கான வர்த்தக பதிவு என்றே தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. ஆகையால், இந்தியாவில் பஜாஜ் நிறுவனம் அதன் இரண்டாம் மின்சார தயாரிப்பை களமிறக்க தயாராகி வருவது உறுதியாகியுள்ளது. இந்த பைக்கை உருவாக்க பஜாஜ் நிறுவனம் ஹஸ்குவர்னா நிறுவனத்தின் இ-பிளென் பைக் உருவாக்கப்பட்டு வரும் அதே தளத்தை பயன்படுத்த இருக்கின்றது.

ஆகையால், இரு பைக்குகளிலும் ஃப்ரேம், உதிரிபாகங்கள் மற்றும் சில அம்சங்கள் ஒரே மாதிரியாக பயன்படுத்தப்பட இருக்கின்றன. ஹஸ்குவர்னா இ-பிளென் 2022ம் ஆண்டிற்குள் அறிமுகமாகி விடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த பிரீமியம் தர இ-பைக்கை, நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே கான்செப்ட் மாடலாக அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

தற்போது இதன் உற்பத்தி பணியில் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே இப்பைக்கின் டிசைன் தாத்பரியங்களைக் கொண்டு பஜாஜ் புதிய பைக்கை தயாரிக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. ஆனால், இந்த வாகனத்தில் என்ன மாதிரியான பேட்டரி பேக் பயன்படுத்தப்பட இருக்கிறது, அது என்ன விலையில் விற்பனைக்கு வரும் என்பது போன்ற முக்கிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

மிக விரைவில் அதுகுறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, 8கிலோவாட் திறனை வெளிப்படுத்தக் கூடிய மின் மோட்டாரும், 100கிமீ ரேஞ்ஜை வழங்கக் கூடிய பேட்டரி பேக்கும் இப்பைக்கில் இடம் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








