நீண்டதூர பைக் பயணங்களில் 'கிங்'... ரிச்சர்டு சீனிவாசன் விபத்தில் மரணம்!
நீண்ட தூர சாகசப் பயணங்களை மேற்கொள்வதில் மிகவும் பிரபலமானவரும், தொழிலதிபருமான கிங் ரிச்சர்டு சீனிவாசன் பைக் விபத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 45.

பெங்களூரை சேர்ந்த கிங் ரிச்சர்டு சீனிவாசன் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதில் அலாதி பிரியம் கொண்டவர். இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு பைக் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற வேட்கையுடன் இருந்து வந்தவர்.
கடந்த 2018ம் ஆண்டு பெங்களூரில் இருந்து லண்டனுக்கு தனது மோட்டார்சைக்கிளிலேயே பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக நிறைவு செய்தார். இதைத்தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவில் பல்வேறு இடங்களுக்கும் நீண்ட தூர பயணங்களை மேற்கொண்டு அசத்தியவர். இதுவரை 5 கண்டங்களில் 37 நாடுகளுக்கு பைக் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 7ந் தேதி பெங்களூரிலிருந்து காஷ்மீர் வரை பயணிப்பதற்கான திட்டத்துடன் சாகசப் பயணம் மேற்கொண்டிருந்தார். வரும் 23ந் தேதி பயணத்தை நிறைவு செய்து பெங்களூர் திரும்புவதற்கு முடிவு செய்திருந்தார்.
கடந்த புதன்கிழமை ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் மாவட்டத்தில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் குறுக்கே திடீரென வந்த ஒட்டகத்தின் மீது அவரது பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில், படுகாயமடைந்த அவர் மரணத்தை தழுவினார்.
பெங்களூரிலிருந்து ஆசிய, ஐரோப்பா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 5 கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு தனது ட்ரையம்ஃப் டைகர் 800 பைக்கில்தான் பயணித்து வந்தார். இந்த நிலையில், தற்போது பிஎம்டபிள்யூ ஜிஎஸ் சாகசப் பைக்கில் அவர் பயணித்தார்.
அப்போதுதான் அவர் விபத்தில் சிக்கி மரணமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அவரது திடீர் மரணம், நீண்ட தூர பயண விரும்பிகள் மற்றும் அவரது நண்பர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications








