மலிவான ஜி310 பைக்குகளினால், விற்பனையில் 5 ஆயிரத்தை கடந்துள்ள பிஎம்டபிள்யூ மோட்டார்ராட்- விற்பனை 95% அதிகரிப்பு
2021ஆம் வருடத்தின் கடைசி மாதத்தில் இருக்கிறோம். இந்த ஆண்டு விற்பனையில் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்திற்கு சிறப்பானதாகவே இருந்துள்ளது. பிரீமியம் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான இது இந்த 2021-இல் இந்திய சந்தையில் மொத்தமாக 5 ஆயிரம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

அதுவே கடந்த 2020இல் 2,563 இருசக்கர வாகனங்களையே பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்திருந்தது. இதற்கு முந்தைய 2019இல் 2,403 யூனிட்கள், 2018இல் 2,187 இருசக்கர வாகனங்கள் என பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் விற்பனை இந்திய சந்தையில் ஆண்டிற்கு ஆண்டு பெருகி கொண்டுதான் வந்துள்ளது.

அதிலும் குறிப்பாக நடப்பு 2021ஆம் ஆண்டில் ஒரேடியாக 5 ஆயிரம் என்கிற மைல்கல்லை தொட்டுள்ளது. 5 ஆயிரம் என்பது தோராயமான எண்ணிக்கையே ஆகும். அதாவது இன்னும் டிசம்பர் மாதம் நிறைவடையவில்லை. இந்த மாதம் நிறைவடைந்தால் தான் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் துல்லியமான 2-வீலர்ஸ் விற்பனை எண்ணிக்கையை கூற முடியும்.

எப்படியிருந்தாலும், 2020ஐ காட்டிலும் பிஎம்டபிள்யூவின் இருசக்கர வாகனங்கள் விற்பனை 2021இல் 100% அதிகமாக, அதாவது இரண்டு மடங்காக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த நிறுவனத்தின் விற்பனை, அப்டேட் செய்யப்பட்ட ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள்களின் அறிமுகத்திற்கு பிறகே அதிகரிக்க துவங்கியது. புதிய ஜி310 பைக்குகளை அறிமுகப்படுத்தும் வரையில், அதாவது 2017இல் மொத்தமாகவே 252 இருசக்கர வாகனங்களையே பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

தற்போதைக்கு மலிவான பிஎம்டபிள்யூ பைக்குகளாக விளங்கும் ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் தான் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 90% உள்ளன. மற்ற பிரபலமான பிஎம்டபிள்யூ பைக்குகள் என்று பார்த்தால், சி400 ஜிடி, ஆர் 1250 ஜிஎஸ்/ ஜிஎஸ்ஏ, ஆர்18 கிளாசிக், எஸ்1000 ஆர் மற்றும் எம்1000 ஆர்ஆர் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

விற்பனையில் இத்தகைய வளர்ச்சியை பதிவு செய்திருப்பது குறித்து பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பவா கூறுகையில், தொடக்கத்தில் இருந்தே பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் ஆனது அதன் மாறும் தயாரிப்பு வரம்பு மற்றும் பெஸ்போக் ரைடிங் அனுபவங்களுடன் இந்தியாவில் பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவை மறுவரையறை செய்துள்ளது. இந்தியாவில் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்திற்கு 2021 ஒரு அற்புதமான ஆண்டாகும்.

இருசக்கர வாகன துறையில் சில தடைகளும், பிரச்சனைகளும் இருந்தாலும், நாங்கள் சிறப்பாக செயல்பட்டு அதிவேக வளர்ச்சியை அடைந்துள்ளோம். மோட்டார்ராட் உலகிற்குள் நுழைய விரும்பும் பிராண்ட் ரசிகர்களின் புதிய தளத்தின் தேவைகளை நிறைவேற்றும் அதேவேளையில், மாசு இல்லா போக்குவரத்தை விரும்புவோரின் தேவைகளையும் நாங்கள் தொடர்ந்து பூர்த்தி செய்வோம்.

‘வாழ்க்கையை ஒரு சவாரி செய்யுங்கள்' என்ற எங்களின் குறிக்கோளை பிரதிபலிக்கும் புதிய அறிமுகங்கள் மற்றும் காணொலி அனுபவங்கள் மூலம் சவாரி ஆர்வலர்களை உற்சாகப்படுத்தும் எங்கள் முயற்சியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார். செயல்திறன்மிக்கவைகளாக மட்டுமில்லாமல், அதன் பிரிவுகளிலேயே சிறந்த தோற்றத்தையும், தொழிற்நுட்பங்களையும் கொண்டிருப்பதுதான் பிஎம்டபிள்யூ தயாரிப்புகளின் பலமாகும்.

இதனால் தான் 5 ஆயிரம் என்கிற மைல்கல்லை இந்திய சந்தையில் அறிமுகமாகி சில வருடங்களிலேயே பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தால் அடைய முடிந்துள்ளது. இந்த பயணத்தில் பிஎம்டபிள்யூ நிதி சேவைகள் இந்தியா நிறுவனத்தின் பங்கும் அபரிதமானது. ஏனெனில், வளைந்து கொடுக்கக்கூடிய பொருளாதார தீர்வுகள் இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன.

கடந்த 2021 அக்டோபரில், 310 இரட்டை பைக்குகளின் தயாரிப்பில் 1 லட்சம் என்கிற மைல்கல்லை அடைந்துள்ளதாக பிஎம்டபிள்யூ அறிவித்திருந்தது. இதில் பெரும்பான்மையானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவைதான் என்றாலும், இந்த ஆரம்ப நிலை பிரீமியம் தர பைக்குகள் தயாரிக்கப்படுவது நமது இந்தியாவில்தான். தற்சமயம் இந்திய சந்தையில் மொத்தம் 13 மாடல்களை பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் விற்பனை செய்து வருகிறது.

இதில் 5 ஸ்ட்ரீட் பைக்குகள், 1 க்ரூஸர் பைக் உள்ளிட்டவையும் அடங்குகின்றன. தற்போதைக்கு விலை குறைவான பிஎம்டபிள்யூ இருசக்கர வாகனம் என்றால் அது, ஜி310 ஆர் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.50 லட்சம் என்கிற அளவில் உள்ளது. இதன் அட்வென்ச்சர் வெர்சனான ஜி310 ஜிஎஸ் மாடலின் விலை இதனை காட்டிலும் சற்று அதிகமாக ரூ.2.90 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது. இந்தியாவில் ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டாரின் தொழிற்சாலையை பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








