எதிர்பார்த்த இ-ஸ்கூட்டரின் உற்பத்தியை தொடங்கியது பிரபல நிறுவனம்... இந்த கொழு கொழு பையன் இந்தியா வருமா?
பிரபல பிரீமியம் தர இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ மோட்டாராட், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகளைத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்ன ஸ்கூட்டர், அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பது பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஆடம்பர ரக இருசக்கர வாகன வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrad), சிஇ-04 (BMW CE-04) எனும் ஓர் கான்செப்ட் மாடலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்சிப்படுத்தி இருந்தது. முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் உருவாக்கப்பட்டிருந்த அது ஓர் மின்சார இருசக்கர வாகனம் ஆகும். தனது முதல் தோன்றலிலேயே பெருமளவிலான ரசிகர்களை இந்த இருசக்கர வாகனம் குவித்துவிட்டது.

ஆகையால், இதன் உற்பத்தி பணிகளை மிக விரைவில் தொடங்க இருப்பதாக நிறுவனம் மிக சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில், நிறுவனம் தற்போது பிஎம்டபிள்யூ சிஇ-04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி பணியைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அறிவியல் புனைகதை (Science Fiction) திரைப்படங்களில் வரும் வாகனங்களைப் போன்ற முற்றிலும் வித்தியாசமான உருவம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தினாலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மீதான ஆர்வம் மின் வாகன பிரியர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகின்றது.

தற்போது விற்பனையில் இருக்கும் பிஎம்டபிள்யூ சி400 (BMW C400) மற்றும் யமஹா எக்ஸ்மேக் (Yamaha XMAX) உள்ளிட்ட ஸ்கூட்டர் மாடல்களைப் போன்ற தோற்றம் சிஇ-40க்கு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது மற்ற வாகனங்களிடம் இருந்து தனித்துவமானதாக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக சில ஸ்பெஷல் அலங்காரப் பணிகளை நிறுவனம் செய்திருக்கின்றது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் நிறுவனம் 42 எச்பி திறனை வெளியேற்றக் கூடிய மின் மோட்டாரை பயன்படுத்த இருப்பதாக தெரிவித்திருக்கின்றது. இந்த மின் மோட்டார் மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. மேலும், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 50 எனும் வேகத்தை 3 செகண்டுகளுக்கும் கீழாகவே தொட்டுவிடும். சிஇ 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 8.9kWh பேட்டரி பயன்படுத்தப்பட உள்ளது.

இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் மற்றும் 20 நிமிடங்கள் போதுமானது. எளிதில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் கட்டுமஸ்தான உடல் பேனல்கள், எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர மின்விளக்கு, முழு டிஜிட்டல் தர இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், உள்ளிட்டவை இந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இணைப்பு தொழில்நுட்ப வசதியைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இதன் வாயிலாக செல்போனையும், இருசக்கர வாகனத்தையும் இணைக்கும் பட்சத்தில் பன்முக முக்கிய தகவல்களை செல்போன் திரை வாயிலாகவே பெற்றுக் கொள்ள முடியும். இதேபோல், செல்போனுக்கு வரும் குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகள் பற்றிய தகவலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் திரையின் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.

இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய வாகனமாக பிஎம்டபிள்யூ சிஇ-04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உலக சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது. தானயிங்கி ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (Automatic Stability Control), டைனமிக் டிராக்சன் கன்ட்ரோல் (Dynamic Traction Control) மற்றும் ரிவர்ஸ் செய்யும் வசதி உள்ளிட்டவை இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இது ஓர் பிரீமியம் தர இருசக்கர வாகனம் என்பதால் இதுபோன்ற இன்னும் பல எக்கசக்க சிறப்பு அம்சங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கின்றன. தற்போது இதன் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டிருப்பதால் உலக சந்தையில் வரும் 2022ம் ஆண்டிற்குள் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மின்சார வாகனத்தை முதன் முறையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியிலேயே நிறுவனம் முதல் முறையாக கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.

அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 11,795 டாலர்களுக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இது அதிகாரப்பூர்வ விலை அல்ல. இதேபோல், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருவது பற்றிய தகவலும் வெளியிடப்படவில்லை. ஆகையால், இதன் இந்திய வருகை சற்று சந்தேகமே.


Click it and Unblock the Notifications








