சொன்னபடியே நாளை அறிமுகமாகிறது Bounce Infinity இ-ஸ்கூட்டர்... என்ன விலையில் இதனை எதிர்பார்க்கலாம்?
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பவுன்ஸ் இன்ஃபினிட்டி (Bounce Infinity) இ-ஸ்கூட்டர் நாளை அறிமுகமாக இருக்கின்றது. என்ன விலையில் இதனை எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய தகவலை கீழே காணலாம், வாங்க.

இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் மின்சார இருசக்கர வாகன மாடல்களில் பவுன்ஸ் நிறுவனத்தின் இன்ஃபினிட்டி ஸ்கூட்டரும் ஒன்று. இந்த ஸ்கூட்டர் நாளை விற்பனைக்கான அறிமுகத்தை இந்தியாவில் பெற இருக்கின்றது. டிசம்பர் 2ம் தேதி இதன் அறிமுகம் அரங்கேற இருப்பதாக நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

பவுன்ஸ் இன்ஃபினிட்டி மின்சார ஸ்கூட்டருக்கு தற்போது ரூ. 499 என்ற முன் தொகையில் புக்கிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதே குறைவான முன் தொகையிலேயே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் முன் பதிவுகள் செய்யப்பட்டன. பவுன்ஸ் நிறுவனம் இன்ஃபினிட்டி மின்சார ஸ்கூட்டரை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வருகின்றது.

ஓலா நிறுவனம் ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ என இரு வித தேர்வுகளில் அதன் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ. 99,999 என்ற ஆரம்ப விலையில் இருந்து இது விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இவற்றிற்கே கடுமையான போட்டியை வழங்கும் முயற்சியில் பவுன்ஸ் இறங்கியிருக்கின்றது.இதனடிப்படையில் சில தனித்துவமான நடவடிக்கைகளை நிறுவனம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், பவுன்ஸ் நிறுவனம் இன்ஃபினிட்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பேட்டரி இல்லா நிலையிலும் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

பேட்டரியை தனியாக கழட்டி மாட்டும் வசதியுடன் மின்சார வாகனம் உருவாக்கப்பட்டிருப்பதால் இது சாத்தியம். மேலும், பேட்டரி இல்லா நிலையில் இ-ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்குவதனால் கணிசமான அளவில் இ-ஸ்கூட்டரின் விலையைக் குறைக்க முடியும்.

அதே நேரத்தில் ஸ்வாப்பபிள் பேட்டரி மையங்கள் வாயிலாக பேட்டரி இல்லாமல் இருசக்கர வாகனங்களை வாங்குவோர்க்கு பேட்டரியை வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 'பேட்டரி சேவை' (Battery as a service) எனும் திட்டத்தின் வாயிலாக இந்த பணியை நிறுவனம் மேற்கொள்ள இருக்கின்றது. குறைவான கட்டணத்தின்கீழ் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை வழங்குவதே இந்த சேவையின் திட்டமாகும்.

இதன் வாயிலாக பேட்டரியைப் பெற்று பயன்படுத்தினால் 40 சதவீதம் வரை கூடுதல் லாபத்தைப் பெற முடியும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஆகையால், இன்ஃபினிட்டி வாடிக்கையாளர்களால் இரட்டை வழிகளில் கூடுதல் பலனைப் பெற முடியும் என தெரிகின்றது. பேட்டரியுடன் கிடைக்கும் இன்ஃபினிட்டி ரூ. 92 ஆயிரம் விலையிலும், பேட்டரி இல்லா நிலையில் கிடைக்கும் இன்ஃபினிட்டி இ-ஸ்கூட்டர் ரூ. 60 ஆயிரம் விலையிலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இதன் விலை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. நாளைய அறிமுகத்தைத் தொடர்ந்து இதுகுறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், அறிமுகத்தை அடுத்து இன்னும் சில வாரங்களில் மின்சார ஸ்கூட்டரின் டெலிவரி பணிகளும் தொடங்கிவிடும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், இதன் துள்ளியமான தேதி பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. பவுன்ஸ் இன்ஃபினிட்டி மின்சார ஸ்கூட்டரில் பேட்டரி கழட்டி மாட்டும் வசதிக் கொடுத்திருப்பதனால், அப்பேட்டரியை எங்கு வேண்டுமானாலும் கழட்டிச் சென்று சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதுமட்டுமின்றி, வாகனத்துடன் வைத்து சார்ஜ் செய்துகொள்ளும் வசதியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்துடன், ஓலா மின்சார ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இன்ஃபினிட்டி இந்தியாவில் களம் காண இருப்பதால் அந்த ஸ்கூட்டர்களுக்கு போட்டியளிக்கும் வகையில் பன்முக சிறப்பு தொழில்நுட்பங்களையும் தாங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், அதிக ரேஞ்ஜ், இணைப்பு வசதி, நேவிகஷன் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

ராஜஸ்தான் மாநிலத்தின் பிவாடி பகுதியை மையமாகக் கொண்டு இயங்கும் பவுன்ஸ் நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்நிறுவனம், மிக சமீபத்தில் 22மோட்டார்ஸ் (22Motors) நிறுவனத்தின் முழு பங்கையும் கையகப்படுத்தியது. 7 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் மதிப்பில் இந்த கொள்முதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்தே, மிக தீவிரமாகன மின் வாகன உற்பத்தி நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நாளை அதன் முதல் மின்சார இருசக்கர வாகனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. முன்னதாக இருசக்கர வாகன மொபிலிட்டி சேவையில் ஈடுபட்டு வந்த இந்நிறுவனம் 22மோட்டார்ஸ் கையகப்படுத்தலை அடுத்தே மின் வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








