கிளாசிக் ரக பைக் பிரியர்களே செய்தி தெரியுமா?.. மீண்டும் களமிறங்குகிறது BSA Motorcycles! இதோ முழு விபரம்!
அண்மையில் யெஸ்டி நிறுவனம் மீண்டும் வாகன உற்பத்தியில் களமிறங்குவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்கள் (BSA Motorcycles) நிறுவனம், தாங்களும் மீண்டும் வாகன உற்பத்தியைத் தொடங்க இருப்பதாகா தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாம் தற்போது பார்க்க இருக்கும் இந்த செய்தி கிளாசிக் ரக மோட்டார்சைக்கிள் வாகன பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம். மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழுமத்திற்கு (Mahindra & Mahindra Group) சொந்தமான கிளாசிக் லெஜன்ட்ஸ் (Classic Legends) நிறுவனம், அதன் பிரிட்டன் - பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் (BSA Motorcycles) நிறுவனத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.

பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்கள் நிறுவனம் 1972ம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே நிறுவனம் மீண்டும் செயல்பாட்டைத் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகையால், பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்களின் உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டு மத்தியில் பிரித்தானியாவில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த திட்டத்திற்கு, கிளாசிக் லெஜண்ட் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை வைத்திருக்கும் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழுமம் முதல் ஆளாக ஒப்புதல் வழங்கியிருக்கின்றது. பங்குதாரர்கள் அனைவரின் ஒப்புதலைத் தொடர்ந்து தற்போது நிறுவனம் மீண்டும் தொடங்கப்பட இருப்பது பற்றிய தகவல்கள் வெளி வர தொடங்கியுள்ளன.

மேலும், புதிய சின்னத்துடன் (லோகோ உடன்) நிறுவனம் மீண்டும் இயங்க இருப்பதாக பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. டீசருடன் இதுகுறித்த தகவலை நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.

கிளாசிக் லெஜண்ட்ஸ் முதலில் ஆக்ஸ்ஃபோர்டுஷையர், பான்பரியில் முதலில் தொழில்நுட்பம் மற்றும் டிசைன் மையத்தைத் தொடங்க இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, நிறுவனம் அங்கு பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் உற்பத்தி பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பிஎஸ்ஏ நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் முழு மறைப்புகளுடன் இந்திய சாலைகளில் காட்சியளிக்கத் தொடங்கிவிட்டன.

ஆகையால், இதன் வருகை நிச்சயம் இந்தியாவில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில்கூட பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்கள் புனேவில் காட்சியளித்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனம் மீண்டும் உலகில் கால் தடம் பதிக்க இருப்பதை முன்னிட்டு சமூக வலைதளங்களில் தனக்கான அதிகாரப்பூர்வ கணக்குகளை உருவாக்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

இங்கிலாந்து அரசாங்கம் ஏற்கனவே கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்திற்கு 4.6 மில்லியன் (இந்திய மதிப்பில் தோராயமாக 45.2 கோடி ரூபாய்) மானியமாக வழங்கியுள்ளது. நிறுவனம் புதியதாக பான்பரியில் அமைக்க இருக்கும் உற்பத்தி ஆலைக்கு இந்த தொகை பயன்படுத்தப்பட இருக்கின்றது. அரசு வழங்கியிருக்கும் மானியமானது நிறுவனம் புதிய ஆலையை அமைக்க செலவழிக்க இருக்கும் மொத்த தொகையில் பாதி ஆகும்.

இந்த புதிய ஆலையின் வாயிலாக நிறுவனம் புதிதாக 255 பணியிடங்களை ஏற்படுத்திக் கொடுக்க இருக்கின்றது. இந்த ஆலையில் மிக முக்கியமாக மின்சார மோட்டாரால் இயங்கக் கூடிய வாகனங்களின் உற்பத்தி மேற்கொள்ளப்பட இருக்கின்றது. ஆகையால், பிஎஸ்ஏ நிறுவனத்தின்கீழ் விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்களும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பர்மிங்காம் ஸ்மால் ஆர்ம் (Birmingham Small Arms) என்பதன் சுருக்கமே பிஎஸ்ஏ. இந்நிறுவனம் முதல் முறையாக 1861ம் ஆண்டிலேயே இந்த உலகில் கால் தடம் பதித்தது. ஆரம்பத்தில் சிறிய ரக ஆயதங்களை மட்டுமே நிறுவனம் உற்பத்தி செய்தது. இதைத்தொடர்ந்து முதல் முறையாக 1910ம் ஆண்டில் மோட்டார்சைக்கிள் உற்பத்தியில் நிறுவனம் களமிறங்கியது.

1960ம் ஆண்டு வரை நல்ல விற்பனையை இந்நிறுவனம் சந்தையில் பெற்றது. இந்த காலக்கட்டத்திற்கு பின்னர் ஜப்பானிய நிறுவனங்கள் தலைக்காட்ட தொடங்கின. இவை பிஎஸ்ஏ நிறுவனத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிக கவர்ச்சியான மற்றும் தொழில்நுட்ப வசதிக் கொண்ட வாகனங்களைக் களமிறக்கின.

இதன் விளைவாக பிஎஸ்ஏ நிறுவனத்தின் தயாரிப்புகளின் விற்பனை மந்தமடையத் தொடங்கியது. இதன் விளைவாக நிறுவனம் சந்தையை விட்டு 1972ம் ஆண்டில் வெளியேறியது. தற்போது உலக அளவில் கிளாசிக் ரக வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. ஆகையால், இந்நிறுவனம் மீண்டும் வெற்றிநடை போடும் முயற்சியில் களமிறங்க இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








