உலகிலேயே மிகவும் மலிவான எலக்ட்ரிக் வாகனம்... டீடெல் ஈஸி ப்ளஸ்!! ஏப்ரலில் அறிமுகமாகிறது!
டீடெல் ஈஸி ப்ளஸ் எலக்ட்ரிக் மொபெட் பொது வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிமுகம் பற்றிய தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டீடெல் நிறுவனம் அதன் ஈஸி ப்ளஸ் எலக்ட்ரிக் மொபெட் என்ற இரு சக்கர வாகனத்தை 2021 இந்தியா ஆட்டோ கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த மொபெட்டை உலகின் மிகவும் மலிவான எலக்ட்ரிக் வாகனமாக வருகிற ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020ல் டீடெல் ஈஸி என்ற மொபெட்டின் மூலம் எலக்ட்ரிக் வாகன துறையில் தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட டீடெல் நிறுவனம் தற்போது ஈஸி ப்ளஸ் எலக்ட்ரிக் மொபெட்டை சிறு மற்றும் குறு நகர போக்குவரத்தை டார்க்கெட் செய்து கொண்டுவருகிறது.
மஞ்சள், சிவப்பு, நீலம் மற்றும் ராயல் நீலம் என்ற நான்கு விதமான நிறங்களில் விற்பனை செய்யப்படவுள்ள இந்த எலக்ட்ரிக் மொபெட், எலக்ட்ரிக் வாகனங்களின் மீது தற்போது மெல்ல மெல்ல கவனத்தை செலுத்திவரும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஏற்றதாக விளங்கும் என்று தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

டீடெல் மட்டுமின்றி இவ்வாறான குறைவான முதலீட்டுடன் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
ஏனெனில் எரிபொருள் என்ஜின் ஸ்கூட்டர்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியிருப்பதால் இப்போது வணிகத்தை ஆரம்பித்தால் தான் சந்தையில் நிலையான இடத்தை பிடிக்க முடியும் என்பதை புதியதாக வந்துள்ள நிறுவனங்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளன.

எலக்ட்ரிக் வாகன பயன்பாடு மட்டுமின்றி, முக்கிய நகரங்களில் வாடகை ஸ்கூட்டர் வணிகத்திற்காகவும் இவ்வாறான எலக்ட்ரிக் மொபெட்களின் தேவை அதிகரித்து வருகிறது. இவற்றின் எடை மிகவும் குறைவு என்பதால் இவற்றில் அதிக எடையை ஏற்ற முடியாது. இது ஒன்றுதான் இத்தகைய மொபெட்களின் ஒரே மைனஸ் ஆகும்.

மற்றப்படி இவை இயங்குவதற்கு பெரிய அளவில் மின்சாரம் தேவைப்படாது, இதனால் சார்ஜிங் அதிக நேரம் செலுத்த வேண்டியிருக்காது. அது மட்டுமில்லாமல் பொருட்களை டெலிவிரி செய்வது உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக வாடிக்கையாளர்களோ அல்லது ஒரு நிறுவனமோ இவ்வாறான மொபெட்களை தங்களுக்கு ஏற்றப்படி எவ்வாறு வேண்டுமென்றாலும் கஸ்டமைஸ்ட் செய்து கொள்ளலாம்.

2021 இந்தியா ஆட்டோ கண்காட்சியில் டீடெல் ஈஸி ப்ளஸ் எலக்ட்ரிக் மொபெட்டை காட்சிப்படுத்திவிட்டு பேசிய டீடெல் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர். யோகேஷ் பாட்டியா, "இந்தியாவில் மின்சார வாகனப் புரட்சியைத் தூண்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
இந்த ஆட்டோ கண்காட்சி, டீடெலின் படைப்புகளைக் காண்பிப்பதற்கான சிறந்த மேடையாக எங்களுக்கு அமைந்துள்ளது. ஸ்விட்ச் டெல்லி பிரச்சாரத்தில் தில்லி அரசாங்கத்தின் முன்முயற்சியை ஆதரிப்பதன் மூலம், இவி வாகனங்களை வாங்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒரு படி முன்னோக்கி வந்துள்ளோம்" என கூறினார்.


Click it and Unblock the Notifications








