ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புதிய ஆப்பு... ஒற்றை சார்ஜில் 120 கிமீ போகும்... EeVe Soul இந்தியாவில் அறிமுகம்!
மின்வாகன தயாரிப்பு நிறுவனமான ஈவீ (EeVe) இந்தியா, அதன் புதுமுக மின்சார ஸ்கூட்டர் மாடலான சோல் (EeVe Soul)-ஐ நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இந்த மின்சார ஸ்கூட்டர் பற்றிய முக்கிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஈவீ (EeVe) இந்தியா நிறுவனம் புதுமுக மின்சார ஸ்கூட்டர் ஒன்றை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஈவீ சோல் (EeVe Soul) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே நிறுவனம் நாட்டில் அறிமுகப்படுத்தி இருக்கின்றது. எக்கச்சக்க சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் கொண்ட முதன்மையான இருசக்கர வாகனமாக மின்சார ஸ்கூட்டரை நிறுவனம் நாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றது.

அதிகபட்ச தொழில்நுட்ப வசதிகள் காரணமாக இதன் விலையும் சற்று அதிகமானதாக காணப்படுகின்றது. ரூ. 1.40 லட்சம் என்ற உச்சபட்ச விலையே சோல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஐஓடி, திருட்டை தவிர்க்கும் பூட்டுதல் தொழில்நுட்பம், ஜிபிஎஸ் நேவிகேஷன், யுஎஸ்பி போர்ட் (செல்போன் மற்றும் பிற கேட்ஜெட்களை சார்ஜ் செய்து கொள்ள முடியும்), சாவியில்லா இயக்கம் வசதி, ரிவர்ஸ் மோட், சென்ட்ரல் பிரேக்கிங் சிஸ்டம், ஜியோ ஃபென்சிங் மற்றும் ஜியோ டேக்கிங் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப அம்சங்கள் சோல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுமட்டுமின்றி இரு லித்தியம் ஃபெர்ரோஸ் பாஸ்பேட் (Lithium Ferrous Phosphate) பேட்டரிகள் இதில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இவையிரண்டும் இருக்கைக்கு அடியில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும். இந்த இரு பேட்டரிகளும் இணைந்து 120 கிமீ தூரம் வரை பயணிப்பதற்கான ரேஞ்ஜ் திறனை வழங்கும். ஈகோ மோடில் வைத்து இயக்கும் போது மட்டுமே இந்த உச்சபட்ச ரேஞ்ஜை அது வழங்கும்.

ஈகோ மோடில் பயணிக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 40 கிமீ வேகத்தில் மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஸ்கூட்டரின் உச்சபட்ச வேகமே மணிக்கு 60 கிமீ என கூறப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக மூன்று மோட்கள் சோல் மின்சார ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. மூன்றுமே வெவ்வேறு விதமான வேக வரம்பைக் கொண்டிருக்கும். சோல் மின்சார ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 3 முதல் 4 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும்.

இப்பேட்டரிகளை தனியாக கழட்டி சென்றும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்கேற்ப ஸ்வாப்பபிள் வசதிக் கொண்ட எல்எஃப்பி (Lithium Ferrous Phosphate) பேட்டரியே ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஈவீ நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மூன்று ஆண்டுகள் வழக்கமான வாரண்டியை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி இதுவரை எந்த மின்சார ஸ்கூட்டரும் பெற்றிராத வகையில் மின் விளக்கு அலங்காரம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

எக்ஸ் வடிவத்தை இரண்டாக பிரித்ததைப் போன்ற வடிவமைப்பு மின் விளக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மிகவும் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த மின் விளக்கிற்கு இடையிலேயே ஹெட்லேம்ப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இவையிரண்டும் சேர்ந்து சோல் இ-ஸ்கூட்டருக்கு தனித்துவமான லுக்கை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட மின்சார ஸ்கூட்டரையே ஈவீ நிறுவனம் இந்தியாவில் தற்போது மிக அதிகபட்ச விலைக்கு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இந்த ஸ்கூட்டரின் தனித்துவமான தோற்றம் இந்திய மின் வாகன பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் என நம்பப்படுகின்றது. அண்மைக் காலங்களாக் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இதற்கு அரசு வழங்கும் மானியம் மட்டுமின்றி இந்தியாவில் எரிபொருளின் விலை உயர்ந்து வருவதும் மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது.

இதன் விளைவாக கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சூடுபிடித்துக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்று வருகின்றது. அதேநேரத்தில் பெட்ரோலால் இயங்கும் இருசக்கர வாகனங்களின் விற்பனை கணிசமாக குறைந்திருப்பதாகவும் கடந்த மாத டூ-வீலர் விற்பனை தரவுகள் நமக்கு தெரிவிக்கின்றன.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஈவீ சோல் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் அறிமுகம் குறித்து ஈவீ இந்தியா நிறுவனத்தின் இணை நிறுவனரும், இயக்குனருமான ஹர்ஷ் வர்தன் தித்வானியா கூறியதாவது, "ஈவீ இந்தியா நிறுவனம், இந்தியாவில் மின்சார இயக்கம் அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக உழைத்து வருகின்றது. இது அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னைக்கு தீர்வு காண உதவும். எதிர்காலத்தை தூய்மையானதாகவும், பாதுகாப்பானதாகவும் மற்றும் நிலையானதாகவும் வைத்திருக்க, சிறந்த மற்றும் நிலையான தீர்வுகளுடன் மின்சார ஸ்கூட்டர்களைக் கொண்டு வர இருக்கின்றோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் "எங்களின் சமீபத்திய ஈவீ சோல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், அதிக வேகம், ஸ்டைலானது மற்றும் கார்பன் வெளியேற்றம் இல்லாத இருசக்கர வாகனம். இது அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளின் சுமையில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும்" என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








