இவ்ளோ குண்டான டயரில் எலெக்ட்ரிக் வாகனமா!! அசத்தலா இருக்கே... பதின் பருவ வாலிபர்களுக்கான பிரத்யேக இ-வாகனம்!
பதின் பருவ வாலிபர்களுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் வாகனத்தை இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் கோர்ரிட் எலெக்ட்ரிக் (Corrit Electric) நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. இவ்வாகனம்குறித்த முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

வெளிநாடு தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் உலக தரம் வாய்ந்த எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய நிறுவனங்கள் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்தவகையில், நமது நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கோர்ரிட் எலெக்ட்ரிக் (Corrit Electric) எனும் ஆரம்ப நிலை மின் வாகன உற்பத்தி நிறுவனம் மிக விரைவில் அதிக சிறப்புகள் இரு எலெக்ட்ரிக் வாகனங்களைக் களமிறக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிறுவனம், வழக்கமான தோற்றம் உடைய எலெக்ட்ரிக் பைக் மற்றும் குண்டான டயர்கள் கொண்ட எலெக்ட்ரிக் பைக், ஆகிய இரு மாடல் இ-வாகனங்களை இந்தியாவில் களமிறக்க இருக்கிறது. குண்டான டயர்கள் வசதியுடன் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் இந்தியாவில் களமிறங்குவது இதுவே முதல் முறையாகும். ஆகையால், இந்த மின் வாகனம் மின் வாகன ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கியுள்ளது.

அதிக குண்டான டயர் கொண்ட எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் ஹோவர் (Hover) எனும் பெயரில் விற்பனைக்கு வர இருக்கின்றது. ஆனால், இந்த எலெக்ட்ரிக் பைக் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விற்பனைக்குக் கிடைக்காது. இந்தியாவின் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனத்தை விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

தலைநகர் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் புனே ஆகிய நகரங்களிலேயே முதல் கட்டமாக எலெக்ட்ரிக் வாகனம் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. மேலும், இந்த நகரவாசிகளுக்கு மட்டும் நிறுவனம் புக்கிங் பணிகளையும் தொடங்கியிருக்கின்றது. ரூ. 1,100 என்ற கட்டணத்தில் எலெக்ட்ரிக் வாகனத்தின் முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றது.

புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் நவம்பர் 25ம் தேதி முதல் டெலிவரி கொடுக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. புக்கிங் பணிகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் விற்பனையாளர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஹோவர் எலெக்ட்ரிக் வாகனம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பயன்படுத்தலாம். மிக துள்ளியமாகக் கூற வேண்டும் என்றால் 12 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்கள் வரை இயக்கும் வகையில் மிகவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஓர் குறைந்த வேகத்தில் ஓடும் எலெக்ட்ரிக் வாகனமாகவும் இருக்கின்றது.

ஆகையால், சிறுவர்கள் வாகனத்தை இயக்கும்போது சட்ட பிரச்னை ஏதும் ஏற்படாது. குறிப்பாக, இவ்வாகனத்தை இயக்க ஓட்டுநர் உரிமம் தேவைப்படாது என நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறுவர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும் கவரும் வகையில் இவ்வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், கோவா மற்றும் ஜெய்பூர் போன்ற பகுதிகளில் இருக்கும் சுற்றுலா தளங்களில் பார்வையாளர்கள் பயன்படுத்தும் வகையில் இவ்வாகனம் நிலை நிறுத்தப்பட இருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக எலெக்ட்ரிக் வாகனம் சிவப்பு, மஞ்சள், நீலம், இளஞ்சிவப்பு, பர்பில் மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், வாடிக்கையாளர்களுக்கு சில மாற்றங்களையும் செய்து தர இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இந்த வாகனத்தில் முழுமையாக 250 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும்.

இத்துடன், இரட்டை டிஸ்க் பிரேக், ட்யூப்லெஸ் டயர்கள் மற்றும் இரட்டை ஷாக் அப்சார்பகள் ஆகியவை சிறந்த பயண அனுபவத்திற்காக வழங்கப்பட்டுள்ளன. மிகக் குறைந்த வேக திறன் எலெக்ட்ரிக் வாகனத்திலேயே இத்தனை வசதிகளா எனும் வியக்க வைக்கும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

எலெக்ட்ரிக் வாகனத்தின் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கடன் திட்டங்களை வழங்கவும் நிறுவனம் வழி வகை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன், சந்தா திட்டத்தின் வழங்கவும் நிறுவனம் நடவடிக்கை எடுக்க இருக்கின்றது. மேலும், பை-பேக் திட்டமும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது.

மிக சிறந்த மதிப்பில் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் திரும்பிப் பெற்றுக் கொள்ளும் வகையில் இத்திட்டம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது. இந்திய வாகன இயக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் கோர்ரிட் எலெக்ட்ரிக் இந்த வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் இணை நிறுவனர் மயூர் மிஸ்ரா இதுகுறித்து கூறியதாவது, "இந்தியாவின் பரந்த ஆட்டோமொபைல்துறையில், "டீனேஜர்களுக்கான வாகன தேர்வு மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. எனவே, பதின் பருவம் கொண்டவர்களுக்கு பலனளிக்கும் வகையில் இவ்வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. பள்ள செல்லும் சிறுவர்களுக்கு இது மிகுந்த பயனளிக்கும்" என்றார்.

இணை நிறுவனரின் இந்த பதிலால் ஹோவர் எலெக்ட்ரிக் வாகனம் பதின் பருவம் கொண்ட சிறுவர்களை மையப்படுத்தி மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனம் தனது ஆர்&டி மையத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. நிறுவனத்தின் மின் வாகன உற்பத்தி ஆலை தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








