மத்திய அரசின் தடாலடி அறிவிப்பு... மின்சார இருசக்கர வாகனங்களின் விலை கணிசமாக குறைந்தது
மின்சார இருசக்கர வாகன விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் அதிரடி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனால், மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனையில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பு எழுந்துள்ளது.

பெருநகரங்களில் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை எட்டி இருக்கிறது. எனவே, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக புகை வெளியேற்றாத மின்சார வாகனங்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, பெருநகரங்களில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, ஃபேம்-2 என்ற மின்சார வாகனங்களுக்கான மானியத் திட்டத்தின் கீழ் ஒரு அதிரடி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியம் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால், மின்சார இருசக்கர வாகனங்களின் விலை கணிசமாக குறைய இருக்கிறது. ஏத்தர் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த அறிவிப்பு வந்த உடனே, மானியத்தை கணக்கில்கொண்டு விலையை ரூ.14,500 வரை குறைப்பதாக அறிவித்துள்ளன. மேலும், சில முன்னணி நிறுவனங்களும் விலை குறைப்பு அறிவிப்புகளை வெளியிடத் துவங்கி இருக்கின்றன.

இதனால், மின்சார ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விலையில் கூடுதல் பலன் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இது மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கும் மகிழ்ச்சியை தரும் வகையில் அமைந்துள்ளது.

ஃபேம்-2 திட்டத்தின் கீழ் மின்சார இருசக்கர வாகனங்களின் பேட்டரியில் ஒவ்வொரு kWh திறனுக்கும் ரூ.10,000 மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது ஒரு kWh திறனுக்கு ரூ.15,000 என்ற அடிப்படையில் மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, மானியம் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்புக்கு ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் சிஇஓ தருண் மேத்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மின்சார இருசக்கர வாகனங்கள் மீதான மானியம் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது சிறப்புமிக்க முடிவாக கருதுகிறோம். இது நிச்சயம் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்கு உதவும்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, மின்சார இருசக்கர வாகன விற்பனை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு நிச்சயம் விற்பனையை அதிகரிக்க உதவும். வரும் 2025ம் ஆண்டில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை 6 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

சிம்பிள் எனெர்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுகாஸ் ராஜ்குமார் கூறுகையில்,"மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியம் வெகுவாக அதிகரிக்கப்பட்டு இருப்பது பெரு மகிழ்ச்சியை தருகிறது. எங்களை போன்ற மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர்களுக்கு இது நிச்சயம் பேருதவியாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

ஃபேம்-2 திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ.8,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் ஏற்றும் கட்டமைப்பை நிறுவதற்காக ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 10 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்களையும், 5 லட்சம் மின்சார மூன்று சக்கர வாகனங்களையும், 55,000 மின்சார கார்களையும், 7,000 மின்சார பஸ்களையும் விற்பனை செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களின் நச்சுப் புகையால் மூச்சு திணறி வரும் பெரு நகரங்களில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிப்பதற்கு இந்த ஃபேம்-2 திட்டம் பேருதவியாக அமையும். குறிப்பாக, மின்சார இருசக்கர வாகனங்களுக்கும், பெட்ரோல் இருசக்கர வாகனங்களின் விலைக்கும் இடையிலான பெரிய வித்தியாசத்தை குறைக்க இந்த மானியத் திட்ட அறிவிப்பு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால், மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை அதிகரிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications







