மஹிந்திரா உடனான நல்லுறவை முறிக்கும் ஃபோர்டு... ஆறு மாதங்கள் வரை தள்ளி போகும் புதுமுக கார்களின் அறிமுகம்!
மஹிந்திரா நிறுவனத்துடனான நல்லுறவை முறித்துக் கொள்ள ஃபோர்டு நிறுவனம் தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ஃபோர்டு நிறுவனம், மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கும் எஞ்ஜின்களையே தனது குறிப்பிட்ட சில தயாரிப்புகளுக்கு பயன்படுத்தி வருகின்றது. இந்த பகிர்மானத்திற்காக போடப்பட்ட உறவையே (ஒப்பந்தத்தை) ஃபோர்டு நிறுவனம் விரைவில் முறிக்க இருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கின்றது.

தொடர்ந்து, தனது வாகனங்களுக்கான எஞ்ஜினை தானே தயாரிக்க இருப்பதாகவும் நிறுவனம் கூறியிருக்கின்றது. மஹிந்திரா மற்றும் ஃபோர்டு ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையே கடந்த 2017ம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது.

இதன் வாயிலாக இரு நிறுவனங்களும் இணைந்தன. தொழில்நுட்பம், எஞ்ஜின், இணைப்பு வசதி, மின்சார வாகனங்கள் மற்றும் சிலவற்றை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

இதனடிப்படையில், 5 ஆண்டுகளாக இரு நிறுவனங்களுக்கும் இடையில் சுமூகமாக பல்வேறு தொழில்நுட்ப பரிமாற்றங்கள் நடைபெற்றன. அதேசமயம், இடையில் ஒரு சில பகிர்மானங்களை இரு நிறுவனங்களும் நிறுத்தின. ஆனால், எஞ்ஜின் மற்றும் இணைப்பு தொழில்நுட்பம் போன்ற பிற பரிமாற்றங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தன.

இந்த நிலையிலேயே எஞ்ஜின் பரிமாற்றத்திற்கு முற்று புள்ளி வைக்க இருப்பதாக ஃபோர்டு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஃபோர்டின் இந்த அதிரடி முடிவால் எதிர்கால தயாரிப்புகள் இரண்டின் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளது.

ஃபோர்டு நிறுவனம் பிஎக்ஸ்744 மற்றும் பிஎக்ஸ்772 ஆகிய இரு புதிய மாடல்களை களமிறக்க திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், எஞ்ஜின் உற்பத்தியை தானே எடுத்த நடத்த இருப்பதாக அறிவித்திருப்பதால் இவ்விரு வாகனங்களின் தயாரிப்பு பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா மற்றும் கியா சொனெட் ஆகிய கார்களுக்கு போட்டியளிக்கும் வகையில் பிஎக்ஸ்772 மாடலையும், சப்-4 மீட்டர் ரக கார்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பிஎக்ஸ்744 மாடலையும் நாட்டில் களமிறக்க ஃபோர்டு திட்டமிட்டிருந்தது.

இக்கார்கள் 2022-2023 ஆண்டுகளுக்கு உள்ளாக களமிறங்கிவிடும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையிலேயே எஞ்ஜின் தயாரிப்பு திட்டத்தை ஃபோர்டு கையிலெடுத்துள்ளது. எனவே, இவ்விரு கார்களின் உற்பத்தி பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆகையால், இரு புதுமுக மாடல்களின் அறிமுகமும் கூடுதலாக ஆறு மாதங்கள் தள்ளிப் போகியிருக்கின்றன. இந்தியாவில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஃபோர்டு நிறுவனம் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

இதனடிப்படையிலேயே புதுமுக மாடல்களைக் களமிறக்கும் பணியில் நிறுவனம் இறங்கியிருக்கின்றது. தொடர்ந்து, தற்போது, தனது கார்களுக்கான எஞ்ஜின்களைத் தானே தயாரிக்க இருப்பதாகவும் அது கூறியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








