ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு இலவச எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... தரமான அறிவிப்பை வெளியிட்ட Hero Electric!
ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric) நிறுவனம் வரும் பண்டிகை தினத்தில் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் அதிரடி திட்டத்தை அறிவித்திருக்கின்றது. இதுகுறித்த முக்கிய விபரங்களைக் கீழே காணலாம், வாங்க.

நாட்டின் முதன்மையான மின்சார வாகன உற்பத்தி நிறுவனமாக ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric) விளங்குகின்றது. இந்நிறுவனம் பன்முக தேர்வில் அதன் மின் வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. நிறுவனத்தின் ஆப்டிமா (Optima), ஃபோட்டான் (Photon) மற்றும் ஆப்டிமா எச்எக்ஸ் (Optima HX) ஆகியவை மிகவும் பிரபலமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் ஆகும்.

இந்நிலையில், நிறுவனம் தற்போது வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் புதிய திட்டங்களை அறிவித்திருக்கின்றது. 30 நாட்களுக்கு 30 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இலவசம் என்ற திட்டத்தை நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. நாட்டில் உள்ள 700க்கும் மேற்பட்ட டச் பாயிண்டுகள் வாயிலாக வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

அக்டோபர் 7ம் தேதி அன்றே இந்த திட்டத்தை ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது. இது வரும் நவம்பர் ஏழாம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். ஹீரோ எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களில் ஒருவர் ஒவ்வொரு நாளும் லக்கி டிராவ் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாக இ-ஸ்கூட்டர் வழங்கப்பட இருக்கின்றது.

அதாவது, வாடிக்கையாளர்கள் வாங்கிய எக்ஸ்-ஷோரூம் விலைக்கான தொகை அப்படியே முழுவதுமாக திருப்பி வழங்கப்படும். இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு இந்த போட்டியை நிறுவனம் தொடங்கி வைத்திருக்கின்றது. தொடர்ந்து, இத்-தீபாவளி பண்டிகையை மாசில்லா பண்டிகையாகக் கொண்டாடவும் தனது வாடிக்கையாளர்களை ஹீரோ எலெக்ட்ரிக் ஊக்குவிக்க தொடங்கியுள்ளது.

நமது இந்திய அரசு நாட்டில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு ஃபேம்2 திட்டத்தின்கீழ் மானியம் மற்றும் வரி சலுகை ஆகியவற்றை வழங்கி வருகின்றது. இந்த நிலையில், தனியார் மின் வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ எலெக்ட்ரிக் தனது பங்காக மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இலவசம் என அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இணையம் அல்லது விற்பனையகம் என இவையிரண்டின் வாயிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் இச்சலுகைப் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து, சுலப மாதத் தவணை, ஐந்து வருடங்கள் கூட்டப்பட்ட வாரண்டி என பல சலுகைகளையும் நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

இந்த வாரண்டி பேட்டரி மற்றும் சார்ஜர்களுக்கு நான்கு மற்றும் ஐந்தாம் ஆண்டில் பொருந்தாது என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து, தனது வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு ஹீரோ எலெக்ட்ரிக் பூஜ்ஜியம் கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனத்தை வீடு தேடி வந்து டெலிவரி செய்யும் சேவையையும் செய்து வருகின்றது.

இதுமாதிரியான சிறப்பு சலுகைகளை நிறுவனம் அறிவிப்பது இது முதல் முறையல்ல. சலுகை மற்றும் பிற திட்டங்களினால் நிறுவனத்தின் விற்பனை பல மடங்கு அதிகரித்திருக்கின்றது. அந்தவகையில், நடப்பாண்டு நிதியாண்டின் முதல் ஆறு மாதத்தில் விற்பனை பல மடங்கு உயர்ந்து காணப்படுகின்றது. விற்பனை 15 ஆயிரம் யூனிட்டாக உயர்ந்திருக்கின்றது. ஏப்ரல் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில் கிடைத்த விற்பனை எண்ணிக்கை இதுவாகும்.

இதுவே கடந்த ஆண்டில் இதே மாதங்களில் பார்த்தோமேயானால் நிறுவனம் வெறும் 3,270 வரை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது. நடப்பாண்டில் கிடைத்திருக்கும் விற்பனை வளர்ச்சியானது, ஒட்டுமொத்த இந்திய மின்வாகன விற்பனையில் 40 சதவீதம் ஆகும். இத்தகைய அமோக வளர்ச்சி பாதையிலேயே ஹீரோ எலெக்ட்ரிக் தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்றது.

இதனை இரட்டிப்பாக்கும் வகையிலேயே ஒரு நாளுக்கு ஒரு நபருக்கு இலவச மின்சார ஸ்கூட்டரை நிறுவனம் தொடங்கியிருக்கின்றது. தொடர்ந்து, தனது உற்பத்தி திறனையும் 1 லட்சத்தில் இருந்து 5 லட்சம் யூனிட்டாக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும் 2022 மார்ச் மாதத்திற்குள் இந்த இலக்கை எட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








