100 சதவீத விற்பனை வளர்ச்சியில் Hero Electric! அட தரமான சம்பவமா இருக்கே... 45 நாள்ல இத்தன யூனிட்டா!!
ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric) நிறுவனம் நூறு சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

எதிர்காலத்தில் இந்தியாவின் அனைத்து சாலைகளையும் மின்சார வாகனங்களே ஆளவிருக்கின்றன என்பது தற்போது எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி தெரிய வந்திருக்கின்றது. ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் மின் வாகன விற்பனை அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.

இதனைக் கருத்தில் கொண்டே வாகன துறை வல்லுநர்கள் விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் நமது நாட்டின் ஒட்டுமொத்த சாலைகளையும் ஆளுகை செய்ய இருக்கின்றன என யூகித்திருக்கின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை நாட்களின் போது வாகனங்களின் விற்பனை அதிகரித்து காணப்படும். ஆனால், நடப்பாண்டு மிகவும் மோசமான ஆண்டாக மாறியிருக்கின்றது.

ஆம், வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை வீழ்ச்சி எனும் மிகவும் மோசமான நிலையில் சிக்கியிருக்கின்றன. நிறுவனங்களின் இந்த நிலைமைக்கு எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் புதிய வாகனங்களின் விலையுயர்வுமே முக்கிய காரணமாக இருக்கின்றன.

அதேநேரத்தில், இந்த நிலை தற்போது புதிய எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை தூக்கி நிறுத்தியிருக்கின்றது. மின் வாகனங்கள் மீது சற்றே நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரபல மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் 100 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.

ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric) நிறுவனமே 100 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். நிறுவனம் 45 நாட்களில் 24,000 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருக்கின்றது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கி நவம்பர் 15ம் தேதி வரையில் பெற்ற விற்பனை எண்ணிக்கை இதுவாகும்.

கடந்த ஆண்டு இதே தேதிகளில் நிறுவனம் 11,339 யூனிட் வரை மட்டுமே விற்பனையாகி இருந்தன. இதனுடைன் ஒப்பிடுகையில் பல மடங்கு வளர்ச்சியடைந்திருப்பதை நம்மால் காண முடிகின்றது. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் நான்கு லட்சம் வாகன விற்பனை என்ற விற்பனை மைல்கல்லை எட்டியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதற்கு ஒன்றிய அரசின் ஃபேம்2 திட்டமும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது. அரசு இத்திட்டத்தின் வாயிலாக பெரும் தொகையை மானியமாக வழங்கி வருகின்றது. பேட்டரியின் திறனைப் பொருத்து மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், வரி சலுகை மற்றும் பதிவு சலுகை உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின் வாகனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருப்பதை தற்போதைய நிகழ்வு உறுதிப்படுத்துகின்றது. பிற நிறுவனங்களின் தயாரிப்புகளைக் காட்டிலும் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன.

தற்போது ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையின் லீடர் எனும் அந்தஸ்தை பெறும் நோக்கில் செயல்பட தொடங்கியிருக்கின்றது. நாட்டில் 1 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெறும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட தொடங்கியிருக்கின்றது. இதனடிப்படையில், நாட்டில் மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் ஹீரோ எலெக்ட்ரிக் ஈடுபட்டு வருகின்றது.

இதற்காக நிறுவனம் பிற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. முக்கிய நகரங்கள் மற்றும் மக்கள் அதிகம் புழங்கும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








