தேசத்திற்கே பெருமை... உற்பத்தியில் '100 மில்லியன்' சாதனை படைத்த ஹீரோ... 6 ஸ்பெஷல் எடிசன் மாடல்களும் அறிமுகம்!
நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், இருசக்கர வாகன உற்பத்தியில் 100 மில்லியன் (10 கோடி) என்ற புதிய மைல்கல்லை தொட்டு மாபெரும் சாதனை படைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, இன்று சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியதுடன், 6 ஸ்பெஷல் எடிசன் மாடல்களையும் வெளியிட்டுள்ளது.

இன்று நடந்த நேரலை நிகழ்வில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான பவன் முஞ்சால் ஷாரூக்கானுடன் இணைந்து இந்த வரலாற்று சாதனையை எட்டியது குறித்தும், ஹீரோ நிறுவனம் இந்த மைல்கல்லை அடைவதற்கான காரணங்கள் மற்றும் கடந்து வந்த பாதை குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
மேலும், இன்று 100வது மில்லியன் இருசக்கர வாகனத்தை உற்பத்தி செய்வதற்காக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் குர்கான், நீம்ரானா மற்றும் ஹரித்வாரில் உள்ள ஆலை பணியாளர்களுக்கு இடையில் போட்டி வைக்கப்பட்டது.

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கவுரவ் நீம்ரானா ஆலையில் இருந்தும், சிபானி குர்கான் ஆலையில் இருந்தும், சமீர் கோச்சார் ஹரித்வார் ஆலையில் இருந்தும் நேரலையில் பணியாளர்கள் நூறாவது மில்லியன் இருசக்கர வாகனத்தை உருவாக்குவதற்கு எந்தளவு மும்முரமாக பணியாற்றுகின்றனர் என்பதை நேரலையில் காட்டி பார்வையாளர்களையும் சிலிர்க்க வைத்தனர்.

இறுதியில் ஹரித்வாரில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் ஆலையில் நூறாவது மில்லியன் இருசக்கர வாகனத்தை உருவாக்கி உற்பத்தி பிரிவில் இருந்து வெளிக்கொண்டு வந்தது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நூறாவது மில்லியன் இருசக்கர வாகனமாக ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் உற்பத்தி பிரிவில் இருந்து வெளிவந்தது. அப்போது பணியாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான பவன் முஞ்சால் நெகிழ்ச்சியடைந்தார். மேலும், இந்த சாதனையை எட்டுவதற்கு உறுதுணையாக இருந்த வாடிக்கையாளர்கள், பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை ஸ்தாபகம் செய்த தனது தந்தையையும் நினைவுகூர்ந்தார்.

இதனிடையே, இன்று 100 மில்லியன் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்துள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அடுத்த ஒரு வாரத்தில் விற்பனையிலும் 100 மில்லியனை எட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. மேலும், 100 மில்லியன் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்துள்ள இந்த மாபெரும் தரணத்தை கொண்டாடும் விதமாக, 6 ஸ்பெஷல் எடிசன் இருசக்கர வாகனங்களையும் ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்துள்ளது.

தனது எக்ஸ்ட்ரீம் 160ஆர், கிளாமர், ஸ்பிளென்டர், பேஷன் புரோ ஆகிய பைக் மாடல்கள், டெஸ்ட்டினி மற்றும் மேஸ்ட்ரோ ஆகிய ஸ்கூட்டர்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல்களையும் இன்று நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.

மேலும், மேடைக்கு கொண்டு வரப்பட்ட ஹீரோ நிறுவனத்தின் 6 ஸ்பெஷல் எடிசன் இருசக்கர வாகனங்களிலும், நடிகர் ஷாரூக்கான் ஆட்டோகிராஃப் போட்டார். இதில் சிலவற்றை பொக்கிஷமாக பாதுகாக்கப்படும், சிலவற்றை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்க இருப்பதாக பவன் முஞ்சால் குறிப்பிட்டார்.

1984ம் ஆண்டு ஜனவரி 19ந் தேதி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் துவங்கப்பட்டது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு உற்பத்தியில் 50 மில்லியன் மைல்கல்லையும், 2017ம் ஆண்டு 75 மில்லியன் மைல்கல்லையும் கடந்தது. இந்த நிலையில், தற்போது 100 மில்லியன் மைல்கல்லை கடந்து தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

சிறந்த டிசைன், அதிர்வுகள் இல்லாத எஞ்சின், மென்மையான ஓட்டுதல் அனுபவம், அதிக எரிபொருள் சிக்கனம், சவாலான விலையில் கிடைப்பதால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தயாரிப்புகள் நாட்டின் பெருநகரங்கள் முதல் பட்டிதொட்டி வரை பெரிய அளவிலான வாடிக்கையாளர்கள் வட்டத்தை பெற்றுள்ளது. எதிர்கால சந்தைக்கு தக்கவாறு பல்வேறு புதிய இருசக்கர வாகனங்களையும், மாற்று எரிபொருள் வகை வாகனங்களையும் உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக பவன் முஞ்சால் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications








