ஹீரோ மோட்டார்சைக்கிள்களுக்கு ரூ.12,500 வரையில் சலுகைகள் அறிவிப்பு!! புதிய பைக் வாங்க தீபாவளி தான் சரியான நேரம்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ள இந்த பண்டிகை காலத்திற்கான சிறப்பு சலுகைகள் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

பண்டிகை காலம் வந்தாலே ஆட்டோமொபைல் நிறுவனங்களை கையில் பிடிக்க முடியாது. வருடத்தில் வணிகத்தில் ஏதேனும் நஷ்டத்தினை சந்திருந்தால், அதனை பண்டிகை நாட்களின் மூலம் சரிச்செய்து கொள்ளவே அவை முயற்சிக்கின்றன.

ஏனெனில் இந்தியர்கள் எப்போதுமே ஒருவித செண்டிமெண்ட்டிற்கு கட்டுப்பட்டவர்கள். தங்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இணையவுள்ள புதிய வாகனங்களை சாதாரண நாட்களை காட்டிலும் பண்டிகை நாட்களில் டெலிவிரி எடுக்கவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

இதனை தெளிவாக புரிந்து வைத்து கொண்டுள்ள நிறுவனங்கள் வாகனங்களை விற்றுத்தள்ள இதுதான் சரியான நேரம் என அவற்றின் தயாரிப்புகளுக்கு ஒவ்வொரு வருடத்திலும் வருட இறுதி பண்டிகை காலங்களில் சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்த வகையில் தற்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் இருசக்கர வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக சில சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்தியா மட்டுமின்றி உலகளவில் மிக பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குவது நான் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன். இத்தகைய நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் அறிவித்துள்ள சலுகைகளில் பணம் தள்ளுபடி, பொருத்தமான முன்தொகை, குறைந்த வட்டி விகிதங்கள், விசுவாசத்திற்கான போனஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன.

இந்த அறிவிப்பின்படி, ஹீரோ மோட்டார்சைக்கிள்களை வாங்கும் எவர் ஒருவரும் அதிகப்பட்சமாக ரூ.12,500 வரையிலான தொகையை சேமிக்க முடியும். மேலும் இந்த சலுகைகளின் மூலம், ஹீரோ வாகனங்களுக்கான முன்தொகை வெறும் ரூ.6,999-இல் இருந்தே துவங்குகிறது. அதேபோல் வட்டி விகிதங்களும் 5.55% ஆக குறைக்கப்பட்டுள்ளன.

லாயலிட்டி (ஹீரோ பிராண்ட் மீதான விசுவாசம்) போனஸாக ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணம் தள்ளுபடியாக 2,100 ரூபாயையும், வங்கி கார்ட்டிற்கான உடனடி சலுகையாக 7,500 ரூபாயையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள விபரங்களின்படி பெறலாம்.

பொருளாதார நன்மைகளை பொறுத்தவரையில், ஹீரோ இருசக்கர வாகனங்களை வாங்கும்போது பிணையத்தொகை எதுவும் செலுத்த வேண்டியதில்லை. மேலும் வட்டியில்லா மாதத்தவணை திட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள ஹீரோ டீலர்ஷிப் மையத்தினை அணுகவும்.

இதுபோன்று சமீபத்தில் நவராத்திரி ஸ்பெஷலாக சில சலுகைகளை ஹோண்டா நிறுவனம் அறிவித்திருந்தது. மோட்டார்சைக்கிள்களுக்கு அல்ல, கார்களுக்கு. இந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரையில் அமலில் இருக்கவுள்ள இந்த சலுகைகளின்படி ஹோண்டா சிட்டி, ஜாஸ், டபிள்யூஆர்-வி மற்றும் அமேஸ் உள்ளிட்ட ஹோண்டா கார்களை ரூ.53,000 வரையிலான சலுகைகளுடன் வாங்கலாம்.

ஹீரோ மோட்டோகார்ப் மிக சமீபத்தில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்டீல்த் எடிசன் மோட்டார்சைக்கிளை சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1,16,660 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் முழுவதுமாக அடர் மேட் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளதை இந்த படங்களில் காணலாம்.

இதனுடன் இரட்டை டிஸ்க், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ், எல்இடி விங்கர்ஸ், சைடு ஸ்டாண்ட் போடப்பட்டிருந்தால் என்ஜின் ஸ்டார்ட் ஆகாத வசதி, ஒருங்கிணைக்கப்பட்ட யுஎஸ்பி சார்ஜர், எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் திரையின் வெளிச்சத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, கியர் இண்டிகேட்டர் உள்ளிட்டவையும் புதியதாக இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் ஆட்டோமொபைல் துறையில் உருவாகிவரும் இணைப்பு தொழிற்நுட்பங்களின் தேவையை அறிந்து, மேஸ்ட்ரோ எட்ஜ்125 ஸ்கூட்டரில் ஹீரோ கனெக்ட் வசதியினை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முதல்முறையாக இந்த இணைப்பு தொழிற்நுட்பத்தினை ஹீரோ அறிமுகம் செய்தது.

ஹீரோ கனெக்ட் என்கிற பெயரில் அழைக்கப்படுகின்ற இந்த தொழிற்நுட்பம் ஆரம்பத்தில் இந்தியாவில் சில நகரங்களில் உள்ள டீலர்ஷிப்களில் மட்டுமே கிடைத்து வந்தது. ரூ.4,999இல் வழங்கப்படும் ஹீரோ கனெக்ட் வசதி தற்சமயம் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்ட்ரீம் 160ஆர், டெஸ்டினி 125, பிளஷர்+ மற்றும் பிளஷர்+ பிளாட்டினம் உள்ளிட்டவற்றில் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








