வாட்டி வதைக்கும் பெட்ரோல் விலை... ஹீரோ நிறுவன டூவீலர்களின் விற்பனை கிடுகிடுவென உயர்வு...
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப், கடந்த மார்ச் மாதத்திற்கான தனது சேல்ஸ் ரிப்போர்ட்டை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ஒட்டுமொத்தமாக 5,76,957 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனையில் 72.4 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஏனெனில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ஒட்டுமொத்தமாக 3,34,647 இரு சக்கர வாகனங்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது.

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ஹீரோ மோட்டோகார்ப் உள்பட பல்வேறு நிறுவனங்களின் இரு சக்கர வாகனங்கள் விற்பனை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. இதில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் முதன்மையானது. இரண்டாவது காரணம், ஊரடங்கு ஆகும்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில்தான், இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனையில் கடும் பாதிப்பை சந்தித்திருந்த நிலையில், நடப்பாண்டு மார்ச் மாதம் ஹீரோ மோட்டோகார்ப் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதற்கிடையே ஒட்டுமொத்த விற்பனையை போல், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடப்பாண்டு மார்ச் மாதம் சர்வதேச சந்தைகளில் 32,617 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 17,962 ஆக மட்டுமே இருந்தது.

இந்த வகையில் பார்த்தால் 82 சதவீதத்திற்கும் மேலான வளர்ச்சியை ஹீரோ மோட்டோகார்ப் பதிவு செய்துள்ளது. அதே சமயம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடப்பாண்டு மார்ச் மாதம் உள்நாட்டில் 5,44,340 இரு சக்கர வானங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 3,16,685 ஆக மட்டுமே இருந்தது.

இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே குறைவான மைலேஜ் தரக்கூடிய விலை உயர்ந்த பைக்குகளுக்கு பதிலாக, அதிக மைலேஜ் தரக்கூடிய அதே சமயம் குறைவான விலையில் கிடைக்க கூடிய சாதாரண கம்யூட்டர் பைக்குகள் மீது இந்திய வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பி வருகிறது.

இத்தகைய கம்யூட்டர் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதிகளவில் விற்பனை செய்து வருகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியடைந்து வருவதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. வரும் மாதங்களிலும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன இரு சக்கர வாகனங்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








