சீக்கிரம் வாங்கிடுங்கோ... ஏப்ரல் முதல் ஹீரோ பைக், ஸ்கூட்டர்களின் விலை உயருகிறது!
வரும் ஏப்ரல் 1 முதல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகன மாடல்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா பெருந்தொற்று பிரச்னை காரணமாக, கடந்த ஆண்டு வாகன விற்பனை அடியோடு முடங்கியது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில், சிறப்பு சலுகைகளை வாகன நிறுவனங்கள் அறிவித்ததுடன், விலை உயர்வையும் தவிர்த்து வந்தன.

இந்த நிலையில், வாகன விற்பனை நிலைத்தன்மைக்கு வந்திருக்கும் நிலையில், கடந்த ஜனவரியில் பெரும்பாலான வாகன நிறுவனங்கள் விலை உயர்வு அஸ்திரத்தை கையில் எடுத்தன. இந்த நிலையில், தற்போது காலாண்டு முடியும் தருவாயில் மீண்டும் விலை உயர்வு அதிஸ்திரத்தை பல நிறுவனங்கள் எடுக்கத் துவங்கி இருக்கின்றன.

அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1 முதல் பைக், ஸ்கூட்டர்களின் விலையை அதிகரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

இருசக்கர வாகன உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் விலை அதிகரித்துள்ளதால் வாகன விலையை அதிகரிக்க இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், வாடிக்கையாளர்களுக்கு அதிக சுமை இல்லாத வகையில் இந்த விலை உயர்வு இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மாடலுக்கு தக்கவாறு ரூ.2,500 வரை விலை உயர்த்தப்பட உள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை தொடர்ந்து பிற நிறுவனங்களும் விலை உயர்வு அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வு நடவடிக்கையால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








