நீங்களுமா? ஹீரோ நிறுவன டூவீலர்களின் விலை அதிரடியாக உயர்கிறது... எவ்ளோனு தெரியுமா?
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன இரு சக்கர வாகனங்களின் விலை அதிரடியாக உயரவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஹீரோ மோட்டோகார்ப். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெகு விரைவில் தனது வாகனங்களின் விலைகளை உயர்த்தவுள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஜனவரி 4ம் தேதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு இந்த விலை உயர்வு பொருந்தும்.

உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதன் காரணமாக இரு சக்கர வாகனங்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன இரு சக்கர வாகனங்களின் விலை 2 ஆயிரம் ரூபாய் வரை உயரவுள்ளது. இந்த விலை உயர்வு மாடல்களை பொறுத்து மாறுபடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

வரும் ஜனவரி மாதத்தில் இருந்து வாகனங்களின் விலை உயரவுள்ளது. பெரும்பாலான கார் நிறுவனங்கள் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்த வரிசையில் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்பும் தற்போது இணைந்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் துறை தடுமாறி வரும் நிலையில் இந்த விலை உயர்வு குறித்த அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.

இந்தியாவில் தற்போது வாகனங்களுக்கான தேவை அதிகளவில் உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொதுமக்கள் சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் விரும்புகின்றனர். பேருந்து போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிப்பதை மக்கள் பாதுகாப்பானதாக கருதுவது கிடையாது.

எனவே சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் பாதுகாப்பானது என மக்கள் நினைக்கின்றனர். குறிப்பாக தற்போது ஓமைக்ரான் அச்சம் அதிகளவில் காணப்படுகிறது. பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தால் ஓமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்படலாம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் காணப்படுகிறது.

எனவே சொந்த இரு சக்கர வாகனம் அல்லது விலை குறைவான கார்களில் பயணம் செய்வது ஏற்றது என்பது பொதுமக்களின் எண்ணமாக உள்ளது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு நேரத்தில் வாகனங்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக கார்களின் விலை நடப்பாண்டில் தொடர்ந்து உயர்ந்து கொண்டேவுள்ளது. மாருதி சுஸுகி போன்ற பல்வேறு நிறுவனங்கள் நடப்பாண்டில் பலமுறை கார்களின் விலைகளை உயர்த்தி விட்டன.

வரும் புத்தாண்டிலும் மாருதி சுஸுகி நிறுவனம் கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளது. இதேபோல் டொயோட்டா, ஃபோக்ஸ்வேகன், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹோண்டா போன்ற நிறுவனங்களின் கார்களின் விலைகளும் புத்தாண்டு முதல் உயரவுள்ளது. வரும் நாட்களில் இன்னும் பல்வேறு நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த விலை உயர்வு காரணமாக வாகனங்களின் விற்பனை குறையுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்தியாவில் ஏற்கனவே கார்களின் விற்பனை 'டல்' அடித்து கொண்டுள்ளது. இதற்கு செமிகண்டக்டர் சிப்களுக்கான பற்றாக்குறை மிக முக்கியமான காரணமாக உள்ளது. செமிகண்டக்டர் சிப் பற்றாக்குறை காரணமாக வாகன நிறுவனங்களால் கார்களை அதிகளவில் உற்பத்தி செய்ய முடிவதில்லை.

இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய முடிவதில்லை. எனவே கார்களின் விற்பனை பெரும் அளவில் குறைந்துள்ளது. செமிகண்டக்டர் சிப்கள்தான் நவீன கார்களின் மூளையாக கருதப்படுகிறது. இதன் பற்றாக்குறை குறையும் பட்சத்தில் கார்களின் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








