ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக விபரம்!
நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வரும் விபரம் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு அதிக வரவேற்பு எழுந்துள்ளது. இந்த சந்தையில் பல புதிய நிறுவனங்கள் களமிறங்கி ஆதிக்கம் செலுத்தத் துவங்கி இருக்கின்றன. இந்த நிலையில், எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள்தான் வர்த்தகத்திற்கு பெரிதும் துணையாக இருக்கும் நிலை உருவாகி இருப்பதால், பெரிய ஜாம்பவான் நிறுவனங்களும் மின்சார இருசக்கர வாகனங்களை களமிறக்கி வருகின்றன.

பஜாஜ், டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு கொண்டு வந்துவிட்ட நிலையில், நாட்டின் மிகப்பெரிய இருசக்கர உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் இதுவரை எந்த ஒரு மின்சார வாகன மாடலையும் அறிமுகம் செய்யவில்லை.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் குடும்பத்தில் ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், முஞ்சால் குடும்பத்தை சேர்ந்த வேறு ஒரு தலைமையின் கீழ் ஹீரோ எலெக்ட்ரிக் பிராண்டில் மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யயப்பட்டு வருகின்றன. இதனால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில், தற்போது சந்தை நிலவரத்தையும், எதிர்காலத்தையும் கருதி, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹோண்டாவிடம் இருந்து பிரிந்து தனி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்டதன் 10ம் ஆண்டு கொண்டாட்ட விழாவில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த மாடலை தற்போது தயாரிப்பு நிலைக்கு உகந்த மாடலாக மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த சூழலில், வரும் மார்ச் மாதத்தில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தைக்கு கொண்டு வருவதற்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஆலையில் உற்பத்தி செய்யப்படும்.

மேலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான பேட்டரி உள்ளிட்ட அனைத்து முக்கிய பாகங்களையும் தயாரிப்பதற்கும், சோதனை செய்வதற்கும் பிரத்யேகமாக உருவாக்குவதற்கும் திட்டமிட்டுள்ளது. இதனால், விலையையும் மிக சவாலாக கொண்டு வருவதற்கான திட்டத்த ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் கான்செப்ட் மாடலில் முன்பகுதியில் 12 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 10 அங்குல சக்கரமும் பொருத்தப்பட்டு இருக்கிறது. தயாரிப்பு நிலை மாடலிலும் இதே அளவு சக்கரங்கள் தக்க வைக்கப்படலாம். இந்த ஸ்கூட்டர் தைவான் நாட்டின் கோகோரோ நிறுவனத்தின் கழற்றி மாட்டும் வசதி கொண்ட பேட்டரி தொழில்நுட்பத்தையும் பெற்றிருக்கும். மேலும், ஃபாஸ்ட் சார்ஜர் வசதியையும் ஹீரோ மோட்டோகார்ப் வழங்கும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








