ஹோண்டாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் எப்போது? HMSI தலைவர் அட்சுஷி ஒகடா பதில்!!
மற்ற பிராண்ட்களுக்கு போட்டியாக, ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய சந்தையில் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு மிகவும் மெதுவாகவே அதிகரித்து வருகிறது. ஆனால் எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் சாலைகளை ஆட்சி செய்யும் என்பதை உணர்த்து வகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்சமயம் விற்பனையாகி வருகின்றன.

ஏனெனில் தற்போதைக்கு எலக்ட்ரிக் மோட்டார் உடன் ஸ்கூட்டருக்கே அதிக வாடிக்கையாளர்கள் குவிக்கின்றனர். உண்மையில் மற்ற வெளிநாட்டு சந்தைகளிலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இருந்தே எலக்ட்ரிக் வாகன பயன்பாடு அந்தந்த நாடுகளில் அதிகரித்துள்ளன.

இதை புரிந்துக்கொண்ட மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் இ-ஸ்கூட்டர்களை தயாரிக்க முன்வரும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு சலுகைகளையும் மானியங்களையும் வாரி வழங்கி வருகின்றன. அதேநேரம் எரிபொருள் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களும் இந்த சலுகை பயன்படுத்தி கொள்ள தயாராகி வருகின்றன.

இந்த வகையில் அதிகளவில் இந்தியாவில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நம் நாட்டு சந்தையில் 2022-23ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை HMSI நிறுவனத்தின் தலைவர் அட்சுஷி ஒகடா உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும் ஹோண்டாவின் இந்த முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த விபரங்கள் எதுவும் தற்போதைக்கு கிடைக்க பெறவில்லை. ஹோண்டா 2-வீலர்ஸ் நிறுவனம் தற்சமயம் பென்லி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதனை செய்து வருவது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

இருப்பினும் பென்லி தான் ஹோண்டா பிராண்டில் இருந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரா என்பது உறுதியாகவில்லை. 2019 டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த பென்லி, கமர்ஷியல் பயன்பாட்டிற்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இந்த நிகழ்ச்சியில் நிறுத்தப்பட்டு இருந்தது.

இதனால் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கமர்ஷியல் பயன்பாட்டிற்கானதாக இந்தியாவில் அறிமுகப்படுத்த ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விரும்பாது என்றே நினைக்கிறோம். உலகளவில் ஜப்பானை சேர்ந்த ஹோண்டா 2-வீலர்ஸ் நிறுவனம் 2024ஆம் ஆண்டிற்குள் தனிப்பயன்பாட்டிற்கான 3 புதிய எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வெளியீடு செய்ய தயாராகி வருகிறது.

இந்திய வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைத்து ஹோண்டா 2-வீலர்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவரும் என கூறப்படுகிறது. இந்த வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்ற வெளிநாட்டு சந்தைகளுக்கும் கொண்டு செல்லப்படலாம்.

விலையை குறைவாக நிர்ணயிக்க வேண்டி, இந்தியாவிலேயே எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க திட்டமிட்டு வருகின்ற ஹோண்டா நிறுவனம் இதற்காக பல்வேறு உள்நாட்டு விநியோகஸ்தரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உள்நாட்டில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உலகளவில் கொண்டு செல்வதற்கான திட்டங்கள் உள்ளதினால் தான் இந்திய சந்தைக்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகையில் சற்று தாமதம் ஏற்படுவதாக ஒகடா தெரிவித்துள்ளார்.

இந்திய சந்தைக்கென்று மட்டும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க தாங்கள் திட்டமிட்டு இருந்தால், தங்களது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த 2021ஆம் ஆண்டிற்குள்ளாகவே அறிமுகமாகி இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிப்பதில் ஹோண்டா 2-வீலர்ஸ் நிறுவனத்திற்கு உள்ள சாதகமான காரணி என்னவென்றால், அதன் அனுபவம் தான்.

சில வெளிநாட்டு சந்தைகளில் கமர்ஷியல் & தனிப்பயன்பாடு என இரண்டிற்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஹோண்டா தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் முதலாவதாக அறிமுகப்படுத்தப்படும் ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் ஹோண்டா மொபைல் ஆற்றல் தொகுப்பு (MPP) பயன்படுத்தப்படலாம்.

எம்பிபி என்பது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தொழிற்நுட்ப கண்டுப்பிடிப்பாகும். ஏனெனில் இது சூரிய ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து மின்சார ஆற்றலை வழங்குகிறது. இந்த மொபைல் ஆற்றல் தொகுப்பை எதிர்காலத்தில் தேவை என்றால் இ-ரிக்ஷாக்களில் கூட பயன்படுத்தலாம் என்கிறது ஹோண்டா 2-வீலர்ஸ் நிறுவனம்.
Note: Images are representative purpose only.


Click it and Unblock the Notifications








