பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் வருகிறது ஹோண்டா சிபி300ஆர் பைக்!
பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் ஹோண்டாவின் புதிய சிபி300ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவின் ஆரம்ப ரக பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் ஹோண்டாவின் சிபி300ஆர் பைக் மிக முக்கிய தேர்வாக இருந்து வந்தது. 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் ஸ்டைலான தோற்றம், சிறந்த எஞ்சின் ஆகியவை இந்த பைக்கிற்கு கூடுதல் மதிப்பாக கருதப்பட்டது. ஆனால், பிஎஸ்-6 விதிகள் வந்ததால், விற்பனையில் இருந்து விலக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது பிஎஸ்-6 எஞ்சினுடன் இந்த பைக் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ரஷ்லேன் தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

அதாவது, கடந்த மாதம் ஹோண்டா நிறுவனம் 8 சிபி300ஆர் பைக்குகளை இந்தியாவில் இறக்குமதி செய்துள்ளது விற்பனை தரவுகளின் மூலமாக தெரிய வந்துள்ளது. இந்த பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டால், ஹோண்டாவின் பிக்விங் டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும்.

மேலும், பிஎஸ்-4 மாடலில் இருந்த அதே எஞ்சின்தான் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு பொருத்தப்பட்டு இருக்கும். இதன் 286சிசி எஞ்சின் அதிகபட்சமாக 31.4 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

புதிய மாடலில் ஸ்லிப் அசிஸ்ட் க்ளட்ச் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ஹோண்டாவின் ரோடுசிங்க் புளூடூத் வசதிகளும் வழங்கப்படும் என தெரிகிறது.

எல்இடி ஹெட்லைட்டுகள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர், டிஸ்க் பிரேக்குகள், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

இந்த மோட்டார்சைக்கிள் ரூ.2.41 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டது. புதிய பிஎஸ்6 மாடல் சறறு கூடுதல் விலையில் வர வாய்ப்பு இருக்கிறது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது சற்று விலை அதிகமான மாடலாக கருதப்படுகிறது. பிஎம்டபிள்யூ ஜி310ஆர், டிவிஎஸ் அப்பாச்சி 310ஆர் ஆகிய மாடல்களுடன் போட்டிபோடும்.


Click it and Unblock the Notifications








