காஸ்ட்லியான பைக்காக உருமாறியது ஹோண்டாவின் முதல் ரெட்ரோ கிளாசிக் பைக்... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரியுமா?
ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் விலை உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வளவு விலையுயர்வை இப்பைக் பெற்றிருக்கின்றது என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

ஹோண்டா நிறுவனத்தின் புதுமுக இருசக்கர வாகனமாக ஹைனெஸ் சிபி350 இருக்கின்றது. இப்பைக்கின் விலையையே ஹோண்டா உயர்த்த இருப்பதாக அண்மையில் தகவல் வெளியிட்டது. இந்த நிலையில், பைக்கின் விலை கடந்த 4ம் தேதி அன்றே உயர்த்தப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து எச்டி ஆட்டோ தளம் வெளியிட்டுள்ள செய்தியில், ரூ. 2,500 வரை ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் உயர்ந்திருப்பதாக கூறியிருக்கின்றது. ஹோண்டா இருசக்கர வாகன விற்பனையாளர் ஒருவர் கூறியதன் அடிப்படையில் இத்தகை வெளியிட்டிருப்பதாகவும் அது தெரிவித்திருக்கின்றது.

ஆகையால், ஹோண்டா சிபி350 பைக்கின் விலை ரூ. 2500 வரை உயர்ந்திருப்பது தெரியவந்திருக்கின்றது. இப்பைக் இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதில், உயர்நிலை தேர்வில் கிடைக்கும் டிஎல்எக்ஸ் ப்ரோ வேரியண்டின் விலை ரூ. 2,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோன்று ஆரம்ப நிலை வேரியண்டான டிஎல்எக்ஸ் தேர்வின் விலை ரூ. 1,500 வரை உயர்த்தப்பட்டிருப்பது டீலர் கூறியதன் அடிப்படையில் தெரியவந்திருக்கின்றது. உற்பத்தி செலவு உயர்ந்ததைக் காரணம் காட்டி வாகன உற்பத்தி நிறுவனங்கள் விலையுயர்வைச் செய்து வருகின்றது.

இந்த நிலையிலேயே இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டாவும் அண்மையில் இதுகுறித்த தகவலை வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது ஹோண்டாவின் புதுமுக பைக் சிபி350யின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கின்றது என்கிற தகவல் வெளியாகியிருக்கின்றது.

இப்பைக்கை கடந்த வருடம் அக்டோபர் மாத்திலேயே ஹோண்டா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்தது. அப்போது இதன் ஆரம்ப விலை ரூ. 1.85 லட்சமாக இருந்தது. ஆனால், தற்போது இதன் விலை அதிகரிக்கச் செய்யப்பட்டுள்ளது. இதனால் சற்று காஸ்ட்லியான பைக்காக இது உருமாறியிருக்கின்றது. மேற்கூறிய விலை வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் முதல் ரெட்ரோ கிளாசிக் ரகத்திலான பைக்கே இந்த ஹைனெஸ் சிபி350. இப்பைக்கை ராயல் என்ஃபீல்டின் இடத்தைப் பிடிக்கும் நோக்கில் ஹோண்டா இந்தியாவில் களமிறக்கியிருக்கின்றது.

இதில், 350 சிசி திறன் கொண்ட 4 ஸ்ட்ரோக், ஓஎச்சி சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை பிஜிஎம்-எஃப்ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 21 பிஎஸ் பவரையும், 30 என்எம் டார்க்கையும் வெளியேற்றக் கூடியது.


Click it and Unblock the Notifications








