எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான பேட்டரிகளை இந்தியாவிலேயே தயாரிக்க ஹோண்டா திட்டம்!! பக்காவாக போடப்பட்டுள்ள ப்ளான்!
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தைக்கான அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான நீக்கக்கூடிய பேட்டரியை நம் நாட்டிலேயே உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்தும், ஹோண்டாவின் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்தும் முழுமையான விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஹோண்டா இந்தியாவில் அதன் புதிய துணை நிறுவனத்தை ஹோண்டா பவர் பேக் எனர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்கிற பெயரில் நிறுவவுள்ளது. இந்த புதிய துணை நிறுவனம், தற்சமயம் இந்தியாவில் விரிவடைந்துவரும் மின்சார இயக்கத்திற்காக பேட்டரி தொகுப்புகளை தயாரித்து வழங்கவுள்ளது.

மேலும், விரைவில் இந்த ஜப்பானிய 2-வீலர்ஸ் பிராண்டில் இருந்து அறிமுகம் செய்யப்பட உள்ள எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு தேவையான பேட்டரி நீக்கம் தொழிற்நுட்பங்களுக்கும் பொறுக்கேற்கவுள்ளது. பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தில் செயல்பட உள்ள இந்த புதிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக கியோஷி இடோ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த துணை நிறுவனத்திற்கு ரூ.135 கோடிகளை ஹோண்டா முதலீடு செய்துள்ளது. ஹோண்டா பவர் பேக் எனர்ஜி இந்தியா தனியார் நிறுவனத்தில் 100% பங்கை ஹோண்டா கொண்டுள்ளது. நம் நாட்டில் லிமிடெட் ரேஞ்ச், நீண்ட சார்ஜிங் நேரம் மற்றும் பேட்டரிக்களுக்கான அதிக செலவு என்ற மூன்றும் தான் இவி தயாரிப்பு & விற்பனைக்கு தடைகளாக உள்ளன. இவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கத்திலேயே ஹோண்டா பவர் பேக் எனர்ஜி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் 2-சக்கர வாகனங்கள் மட்டுமின்றி, எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கும் நீக்கக்கூடிய பேட்டரிகளை வழங்க அடுத்த 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் இருந்து துவங்க இந்த நிறுவனத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் முதலாவதாக பெங்களூரில் மட்டுமே இந்த சேவை துவங்கப்படும் என கூறப்படுகிறது. அதன்பின் மற்ற இந்திய நகரங்களுக்கும் இந்த எலக்ட்ரிக் விநியோக சேவை விரிவுப்படுத்தப்படலாம்.

இந்த சேவையினை பெறும் வாடிக்கையாளர்கள் தங்களது சார்ஜ் காலியான பேட்டரியினை நகரத்தில் உள்ள பேட்டரி-நீக்கம் நிலையத்தில் கொடுத்து முழுவதுமாக சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியினை பெற்று கொள்ளலாம். ஹோண்டா இந்த பேட்டரியினை ‘ஹோண்டா மொபைல் பவர் பேக் (MPP) இ' என அழைக்கிறது. இந்த சேவையினை உபயோகப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் சார்ஜிங் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாக இருக்காது.

சார்ஜிங் நிலையத்திற்கு சென்று, காலி பேட்டரியை கொடுத்து நிர்ணயிக்கப்படும் தகுந்த கட்டணத்தை செலுத்தி சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியை பெற்று கொள்ளலாம். இவ்வாறு இந்திய வாடிக்கையாளர்களின் மத்தியில், ஒருவரிடம் இருந்து ஒருவரிடம் என சுழலவுள்ள இந்த பேட்டரிகளை இந்தியாவிலேயே தயாரிக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இவ்வாறு பயன்பாட்டிற்கு வரவுள்ள பேட்டரி தொகுப்பு தான் ஹோண்டா பென்லி இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட உள்ளது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள பென்லி இ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சாலைகளில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் கிடைத்த ஸ்பை படங்களின் மூலம், தினசரி பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, பொருட்களை எடுத்து செல்லும் வணிக பயன்பாட்டிற்கும் ஏற்றதாக பென்லி இ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விளங்கும் என்பதை அறிய முடிந்திருந்தது.

இந்த ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அடுத்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முதலாக 2019இல் நடைபெற்ற 46வது டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் பென்லி இ ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்படுகின்ற எலக்ட்ரிக் மோட்டார் ஆனது 48 வோல்ட், 20.8 ஆம்பியர் லித்தியம்-இரும்பு என்ற இரு பேட்டரிகளின் மூலம் ஆற்றலை பெறுகிறது.

பென்லி இ 1, பென்லி இ 1 ப்ரோ, பென்லி இ 2 மற்றும் பென்லி இ 2 ப்ரோ என்கிற 4 விதமான ட்ரிம் நிலைகளில் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் இந்த ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ட்ரிம் நிலைகளை பொறுத்து எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்படுகின்றன. பென்லி இ 1 மற்றும் 1 ப்ரோ ட்ரிம்-களில் 2.8 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது.

இது அதிகப்பட்சமாக 3.8 பிஎச்பி மற்றும் 13 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. அதிகப்பட்சமாக மணிக்கு 30கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த ட்ரிம்-களில் சிங்கிள்-முழு சார்ஜில் 87கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். மறுப்பக்கம், பென்லி இ 2 மற்றும் 2 ப்ரோ ட்ரிம்-களில் 4.2 கிலோவாட்ஸ் திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 5.7 பிஎச்பி மற்றும் 15 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை பெற முடியும்.

இவற்றில் மணிக்கு 60கிமீ வேகம் வரையில் பயணிக்க முடியும். ஆனால் இவற்றில் ரேஞ்ச் வெறும் 43கிமீ-ஆக மட்டுமே கிடைக்கிறது. இந்த ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக 30 கிலோ எடையுள்ள சரக்குகளுடன், 12 டிகிரி நிமிர்ந்த சாலைகளில் பயணிக்க முடியும் என்கிறது தயாரிப்பு நிறுவனம். அதுவே, ரிவர்ஸில் செல்லும் வசதி உடன் வழங்கப்படவுள்ள பென்லி இ 2 மற்றும் 2 ப்ரோ ஸ்கூட்டர்களில் 60 கிலோ வரையில் எடை கொண்ட பொருட்களை ஏற்றி செல்லலாமாம்.


Click it and Unblock the Notifications








