டக்கார் ராலியில் மற்றொரு இந்திய வீரர் விபத்தில் சிக்கியதால் அதிர்ச்சி!
டக்கார் ராலியில் நடந்த விபத்தில் சிக்கிய இந்திய வீரர் சி.எஸ்.சந்தோஷ் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்றொரு இந்திய வீரர் ஆசிஷ் ராவ்ரேனும் விபத்தில் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டக்கார் ராலியில் தனிநபர்களுக்கான பிரிவில் கலந்து கொண்ட முதல் வீரர் என்ற பெருமையை ஆசிஷ் ராவ்ரேன் பெற்றிருந்தார். டக்கார் ராலியின் முதல் நான்கு சுற்றுகளில் மிகச் சிறப்பான இடத்தை பதிவு செய்து வந்த அவர் நேற்று நடந்த ஐந்தாவது ஸ்டேஜ் பந்தயத்தில் துரதிருஷ்டவசமாக விபத்தில் சிக்கினார்.
ஐந்தாவது ஸ்டேஜ் பந்தயத்தில் துவக்கத்தில் சிறப்பாக முன்னேறி வந்த ஆசிஷ் ராவ்ரேன் 75வது வே பாயிண்ட் பகுதியில் விபத்தில் சிக்கினார். மணல் குன்று ஒன்றை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து ராவ்ரேன் தூக்கி வீசப்பட்டார்.

இதனால், அவரது தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பைக்கில் மீண்டும் பயணத்தை தொடர முயன்றுள்ளார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால், மயக்கம் மற்றும் வலி ஏற்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து பைக்கை ஓட்டும்போது கீழே விழுந்தால் பின்னால் வரும் வாகனங்கள் மோதிவிடும் அபாயம் இருந்ததையடுத்து, போட்டியை கைவிட்டு, அவசர மருத்துவ உதவிக் குழுவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவர் ஹெலிகாப்டர் மூலமாக அருகிலுள்ள முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், பெரிய அளவிலா பாதிப்புகள் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

அவர் நலமாக இருப்பதாகவும், குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அடுத் 24 முதல் 48 மணிநேர மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அதன்பிறகே அவரது உடல் நிலை பற்றி முழுமையானத் தகவல்கள் வெளிவரும் என்று தெரிகிறது.

டக்கார் ராலியில் பல்வேறு பிரிவுகளில் வீரர்கள் குழுவாகவும், தனியாகவும் கலந்து கொள்கின்றனர். இதில், மல்லே மோட்டோ என்ற தனிநபர் பிரிவில் தான் துணிச்சலுடன் ஆசிஷ் ராவ்ரேன் கலந்து கொண்டார். இந்த பிரிவு மற்றைய பிரிவுகளைவிட மிகவும் கடினமானது.
உதவிக்காக குழுவினர் யாரும் இருக்கமாட்டார்கள். வீரர் தனது வாகனத்தின் துணையை நம்பி மட்டுமே இந்த பிரிவில் கலந்து கொள்ள முடியும். இந்த பிரிவில் கலந்து கொண்ட முதல் வீரராக ஆசிஷ் ராவ்ரேன் பெருமை பெற்றிருந்தார். இந்தநிலையில், காயம் காரணமாக, ஆசிஷ் ராவ்ரேன் 2021 டக்கார் ராலியில் இருந்து வெளியேறிவிட்டார்.


Click it and Unblock the Notifications








