நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
தண்டவாளத்தில் உசைன் போல்டாக மாறி குழந்தையை மீட்டெடுத்த மயூர் ஷெல்கேவிற்கு ஜாவா நிறுவனம் விலையுயர்ந்த பைக்கை பரிசாக வழங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

எதிரில் வருவது அதி-வேக ரயில் என்பது தெரிந்தும் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை தன் உயிரைப் பொருட்படுத்தாமல் மீட்டெடுத்தவர் பாயிண்ட்ஸ்மேன் மயூர் ஷெல்கே. அந்த சமயத்தில் ஆபத்தில் இருந்த குழந்தையை மீட்க அவர் உசைன் போல்டாக மாறியிருந்தார்.

மின்னல் வேகத்தில் ஓடி சென்று குழந்தையை அவர் மீட்டெடுத்த சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போதும் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. இந்த வீர-தீர செயலைத் தொடர்ந்து பல தரப்பட்ட மக்கள் அவரை வாழ்த்து மற்றும் பாராட்டு மழையால் நனைத்து வருகின்றனர்.

மேலும், நாட்டு மக்களின் மனதில் ஒரே நாளில் அவர் ஹீரோவாகவே மாறிவிட்டார். இந்த நிலையில்தான், சமூக வலைதளங்களில் வாயிலாக மயூர் ஷெல்கேவின் அசாத்திய செயல்குறித்த வீடியோவைக் கண்டிருக்கின்றார் ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இயக்குனர் அருண் தரேஜா.

இதன் பின்னர் மயூர் ஷெல்கே கவுரவிக்கும் வகையில் புத்தம் புதிய ஜாவா பைக்கை பரிசாக வழங்க இருப்பதாக அவர் அறிவித்தார். ஏப்ரல் 21ம் தேதி இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டநிலையில், இன்று (ஏப்ரல் 23) மயூர் ஷெல்கேவிற்கு ஜாவா மோட்டார்சைக்கிள் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இதுகுறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. ஜாவா மோட்டார்சைக்கிளையே நிறுவனம் மயூர் ஷெல்கேவிற்கு பரிசாக வழங்கியிருக்கின்றது. இந்த பைக் ரூ. 1,80,215 என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதிக் கொண்ட மாடலின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதிக் கொண்ட ஜாவா ரூ. 1,89,157 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்தகைய விலையுயர்ந்த பைக்கையே ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் மயூர் ஷெல்கேவிற்கு பரிசாக வழங்கியிருக்கின்றது. முன்னதாக, மயூர் ஷெல்கேவின் வீர-தீர செயலுக்கு பாராட்டு தெரிவித்து ரூ. 50,000 காசோலையை வழங்க இருப்பதாக ரயில்வே துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

பாயிண்ட்ஸ்மேன் மயூர் ஷெல்கேவின் செயலுக்கு இது மிக மிக குறைந்த சன்மானம் என்ற கருத்து மக்கள் எழும்பியது. இந்த மாதிரியான சூழ்நிலையில் அரசு சார்பில் அறிவித்த தொகையைக் காட்டிலும் பல மடங்கு அதிக மதிப்பிலான பரிசை ஜாவா வழங்கியிருக்கின்றது.

இது மயூர் ஷெல்கேவின் செயலுக்கு மேலும் மரியாதைச் செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஜாவா நிறுவனம் இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் ஓர் அங்கமாகச் செயல்பட்டு வருகின்றது. ஆகையால், இப்பரிசளிப்பு நிகழ்வில் மஹிந்திரா நிறுவனத்தின் பங்களிப்பும் உள்ளது.

மேலும், மயூர் ஷெல்கேவிற்கு ஜாவா மோட்டார்சைக்கிள் மட்டுமின்றி புத்தம் புதிய மஹிந்திரா தார் காரையும் மஹிந்திரா நிறுவனம் பரிசாக வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில் இதுகுறித்த தகவலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மஹிந்திரா நிறுவனம், அண்மையில் இந்திய கிரிக்கெட்டில் புதிதாக இணைந்து ஆஸ்திரேயாவிற்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய ஆறு இளம் வீரர்களுக்கு தார் எஸ்யூவி காரை பரிசாக வழங்கியது குறிப்பிடத்தகுந்தது. இக்காரை பரிசாக பெற்ற விளையாட்டு வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த டி.நடராஜனும் ஒருவர் என்பது கவனித்தக்கது.


Click it and Unblock the Notifications








