ஜாவா பிரியர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு மகிழ்ச்சியான செய்திகள் வெளியானது
ஜாவா மோட்டார்சைக்கிளை வாங்க விரும்புவோருக்கு மகிழ்ச்சியை தரும் இரண்டு செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த செய்திகள் குறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் வர்த்தகத்தை மஹிந்திரா கீழ் செயல்பட்டு வரும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் கையாண்டு வருகிறது. இந்த நிலையில், ராயல் என்ஃபீல்டு சந்தையை குறிவைத்து களமிறக்கப்பட்ட ஜாவா மோட்டார்சைக்கிள்களின் சந்தையை வலுப்படுத்தும் முயற்சிகளில் கிளாசிக் லெஜென்ட்ஸ் ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே ஜாவா மோட்டார்சைக்கிள்களின் டெலிவிரிப் பணிகள் மிகவும் மந்தமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் மத்தியில் புகார் இருந்து வருகிறது. உற்பத்தியை அதிகரித்து, டெலிவிரிப் பணிகளை துரிதப்படுத்தும் முயற்சிகளில் கிளாசிக் லெஜென்ட்ஸ் ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில், வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான சேவையை வழங்கும் விதத்தில், அடுத்த 12 மாதங்களில் டீலர்களின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது. தற்போது 150 நகரங்களில் 175 டீலர்களுடன் ஜாவா செயல்பட்டு வருகிறது.

இதனை 500 ஆக உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் டீலர்கள் எண்ணிக்கையை 275 ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. மேலும், டெலிவிரிப் பணிகளையும் வேகப்படுத்துவதற்கான திட்டங்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால், ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கான காத்திருப்புக் காலம் குறைவதுடன், வாடிக்கையாளர்களின் மிக நெருக்கமான சேவையை எளிதாக பெற வாய்ப்பு ஏற்படும்.

தற்போது சில மாநிலங்களில் கொரோனா பிரச்னையும், லாக்டவுன் போன்ற தடங்களும் உள்ளது. ஆனால், அடுத்த சில மாதங்களில் நிலைமை சீரடைந்து வர்த்தகம் வெகுவாக மேம்படும் வாய்ப்பு இருக்கிறது. அதற்குள் டீலர்கள் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

ஜாவா பைக் மாடல்களுக்கான வரவேற்பு பலமாகவே இருப்பதால், கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் லாக்டவுன் முடிந்தவுடன் வர்த்தகப் பணிகளை முடுக்கிவிடுவதற்கு கிளாசிக் லெஜென்ட்ஸ் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, வலுவான வர்த்தகத்தை பெறும் முனைப்பில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








