வடசென்னை மக்களுக்காக 10 பைக் ஆம்புலன்சுகளை களமிறக்கிய அறக்கட்டளை... முழுக்க முழுக்க இலவச சேவை...
வடசென்னை மக்களுக்கு உதவும் வகையில் ஆட்டோவைத் தொடர்ந்து கடமை அறக்கட்டளை பத்து ஆக்சிஜன் வசதிகக் கொண்ட பைக் ஆம்புலன்ஸ் பைக்குகளை களமிறக்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கொரோனா வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை குறைய தொடங்கினாலும், ஆம்புலன்ஸ்களின் சைரன் அலறல் சத்தம் குறைந்தபாடில்லை. நிமிஷத்துக்கு ஒன்று அங்கு, இங்குமாய் அலைந்த வண்ணம் இருக்கின்றன. ஆகையால், இப்போதும் உயிர் காக்கும் வாகனத்தின் (ஆம்புலன்ஸ்) தட்டுப்பாடு நாடு முழுவதும் தலைவிரித்தாடிய வண்ணம் இருக்கின்றது.

இந்த நிலையைப் போக்கும் விதமாக சில தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் தங்களின் உதவிக் கரங்களை நீட்டி வருகின்றனர். கார் மற்றும் ஆட்டோக்களை தற்காலிக ஆம்புலன்ஸ்களாக மாற்றி உதவி புரிந்து வருகின்றனர்.

உயிர் காக்கும் ஆக்சிஜன் தொடங்கி பல முக்கிய கருவிகளுடன் அந்த வாகனங்கள் தற்போதும் சாலையில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில், கடமை அறக்கட்டளை பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை ஆக்சிஜன் வசதியுடன் பயன்பாட்டிற்கு களமிறக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவற்றுடன், புதிதாக தற்போது பைக் ஆம்புலன்ஸ்களையும் அறக்கட்டளை சேர்த்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தற்காலிக ஆம்புலன்ஸ் பைக்குகள் வட சென்னை மக்களின் பயன்பாட்டிற்கு களமிறக்கப்பட்டிருப்பதாக அது தெரிவித்துள்ளது.

இதற்காக 10 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்ட ஆம்புலன்ஸ் பைக்குகள் தயார் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே, நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸாக மாற்றப்பட்ட வாகனங்கள் நகரத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இருப்பினும், இதன் தட்டுப்பாடு அதிகமாக நிலவுகின்றது.

இந்தநிலையிலேயே பைக் ஆம்புலன்ஸ்களை கடமை அறக்கட்டளை களமிறக்கியிருக்கின்றது. 10 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் பைக் ஆம்புலன்சுகள் களமிறக்கப்பட்டுள்ளன. அவை பெரம்பூர், அயனாவரம், பாடி, மணலி, கொடுங்கையூர், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம், கொரட்டூர் ஆகிய பகுதி மக்களுக்காக மட்டுமே களமிறக்கப்பட்டிருக்கின்றன.

15 நிமிடத்தில் ஆக்சிஜனை வீடு தேடி வந்து தருவோம் என அறக்கட்டளை அறிவித்துள்ளது. இதற்காக பிரத்யேகமாக இரு எண்களை அறக்கட்டளை அறிவித்துள்ளது. 9003112322, 9840218142 என்ற இரு எண்களை சேவையை பெற அறிவித்துள்ளது. இதில் ஏதேனும் ஓர் எண்ணைத் தொடர்பு கொண்டு ஆக்சிஜன் சிலிண்டருக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த சேவையை முழுக்க முழுக்க இலவசமாக செய்ய இருப்பதாக அறக்கட்டளை அறிவித்திருப்பது வட சென்னை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடமை அறக்கட்டளை ஆட்டோக்கள் வாயிலாக இந்த சேவையை செய்ய தொடங்கியது. அப்போது, ஒரு நாளைக்கு 200க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையிலேயே தட்டுபாடில்லா சேவையை வழங்கும் பொருட்டு புதிதாக பைக்குகள் இச்சேவையில் களமிறக்கப்பட்டிருப்பதாக அறக்கட்டளையின் நிறுவனர் சி. வசந்தகுமார், கூறியுள்ளார். மேலும், மேலே கொடுக்கப்பட்ட எண்களைத் தொடர்பு கொண்டால் 15 நிமிடங்களுக்குள்ளாக உரிய சேவை வழங்கப்படும் என்ற உத்ரவாதத்தையும் அவர் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, "இப்போது, ஆம்புலன்ஸைப் பெறுவதற்கு மக்கள் அதிக நேரம் காத்திருக்கின்றனர். இனி இந்த நிலை இருக்காது. மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னரும் ஆக்ஸிஜன் தேவை சிலருக்கு இருக்கின்றது. அவர்களுக்ககான ஆதரவையும் நாங்கள் வழங்குவோம்" என்றார்.


Click it and Unblock the Notifications








