பெட்ரோல்-மின்சாரம் ரெண்டுத்துலையுமே ஓடும்... ஹைபிரிட் பைக்கை உருவாக்கும் பணியில் பிரபல நிறுவனம்!
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று மின்சாரம் மற்றும் பெட்ரோலால் ஓடும் திறன் கொண்ட பைக்கை உருவாக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. இதன் முன்னோட்டமாக தற்போது ஓர் மாதிரி மாடலை நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. இதுகுறித்த முழுமையான தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தத் தொடங்கிவிட்டன. மேலும், பல நிறுவனங்கள் தங்களின் எதிர்கால எலெக்ட்ரிக் வாகனங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், இதுவரை எந்த ஒரு இருசக்கர வாகன உற்பத்தியாளர்களும் செய்யாத ஓர் செயலை ஓர் பிரபல நிறுவனம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின்சாரம் மற்றும் பெட்ரோலால் இயங்கக் கூடிய வசதிக் கொண்ட ஹைபிரிட் இருசக்கர வாகனத்தை விரைவில் உருவாக்க இருப்பதாக ஓர் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கவாஸாகி நிறுவனமே பெட்ரோல் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் வாகனத்தை உருவாக்க இருக்கின்றது. உலகளவில் இரு சக்கர வாகன உற்பத்தியில் கொடி பறக்கும் நிறுவனங்களில் கவாஸாகியும் ஒன்று.

இந்த நிறுவனம் 2035ம் ஆண்டிற்குள் பெட்ரோலால் இயங்கும் அனைத்து வாகனங்களின் உற்பத்தியையும் கைவிட்டுவிட்டு முழுவதுமாக மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை தயாரிக்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இந்த நிலையில், மின்சாரம் மற்றும் பெட்ரோலால் இயங்கக்கூடிய வாகன தயாரிப்பிலும் நிறுவனம் ஈடுபட இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இந்த தகவல் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும்கூட எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனைச் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக அரிதினும் அரிதாக தென்பட்டு வந்த எலெக்ட்ரிக் கார்கள் தற்போது அதிகளவில் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளன. இந்த மாதிரியான சூழ்நிலையில் இருசக்கர வாகன பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மின்சாரம் மற்றும் பெட்ரோலால் இயங்கும் வாகனத்தின் உற்பத்தி பணியில் கவாஸாகி களமிறக்கியிருக்கின்றது.

இதனடிப்படையில் ஓர் கான்செப்ட் மாடலை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. அந்த இருசக்கர வாகனத்தில் ஓர் ஐசிஇ எஞ்ஜினும், சிறிய மின்சார மோட்டாரும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. தனது புகழ்வாய்ந்த இருசக்கர வாகன மாடலான நிஞ்ஜா 400 பைக்கை தழுவியே பெட்ரோல் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகனத்தை உருவாக்கி இருக்கின்றது கவாஸாகி. தற்போது கான்செப்ட் மாடலாக மட்டுமே இந்த வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. மிக விரைவில் இதனை உற்பத்திக்கு அனுமதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

48V பேக் மின் மோட்டார் மற்றும் பாரல்லல் ட்வின் எஞ்ஜின் இந்த இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இரு மோட்டார்களும் இணைந்து அல்லது தனி-தனியாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், இதுவரை கிடைத்திராத ஓர் அனுபவத்தை இந்த வாகனம் அதன் பயனர்களுக்கும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெட்ரோல் மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டாலும் இயங்கும் திறனை இவ்வாகனம் கொண்டிருக்கின்ற காரணத்தினால் பெட்ரோலோ அல்லது மின்சாரமோ இரண்டில் எது ஒன்று குறைந்தாலும், ஒன்றில்லை என்றால் மற்றொன்றின் வாயிலாக எந்தவொரு பயமும் இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது, பேட்டரி பவர் குறைந்துவிட்டால் உடனடியாக பெட்ரோலை நிரப்பி அதன்வாயிலாக பயணித்துக் கொள்ள முடியும்.

தேவைப்பட்டால், பேட்டரியைச் சார்ஜ் செய்து அதனைக் கொண்டும் இருசக்கர வாகனத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். கவாஸாகி நிறுவனம் மிக விரைவில் 10 மின்சார மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. 2025ம் ஆண்டிற்குள் இரு சக்கரவாகனத்தை அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் திறன் முதலில் கார்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இந்த திறன் கொண்ட கார்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றன. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் விலையுயர்ந்த மற்றும் ஆடம்பர கார்களிலேயே இதுமாதிரியான வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாருதி சுசுகி நிறுவனம் ஸ்மார்ட் ஹைபிரிட் எனப்படும் வசதியை அதன் குறிப்பிட்ட சில கார் மாடல்களில் வழங்கி வருகின்றது. இது எரிபொருளை சிக்கனப்படுத்த உதவும். முழுமையான ஹைபிரிட் வசதிக் கொண்ட காரை போல் இது செயல்படாது.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே முழுமையான ஹைபிரிட் வசதிக் கொண்ட இருசக்கர வாகன உற்பத்தியில் கவாஸாகி களமிறங்கி இருக்கின்றது. நிறுவனம் 2025ம் ஆண்டிற்கு பின்னர் ஒவ்வொரு ஆண்டும் 16 புதிய மின்சார இருசக்கர வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இது சாத்தியமான அறிவிப்புதானா என்பதை 2025ம் ஆண்டு வரை நாம் பொருத்திருந்தே பார்க்க வேண்டும். அதேவேலையில், தற்போது முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கி ஆரம்ப நிலை வாகன உற்பத்தி நிறுவனங்கள் வரை புதுமுக வாகனங்களை தீவிரமாக அறிமுகம் செய்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








