சைக்கிளையே ஓட்டலாக மாற்றிய நபர்... தோசை முதல் பீட்சா வரை... 13 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற வீடியோ!!
சைக்கிளையே ஓர் இளைஞர் உணவகமாக மாற்றியிருக்கின்றார். இதுகுறித்த சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம்.

ஃபுட் கோர்ட் எனும் பெயரில் மினி லோடு வேன் அல்லது மினி பேருந்துகளில் உணவகங்கள் செயல்படுவதை நாம் கண்டிருப்போம். இங்கு சற்று வித்தியாசமாக ஓர் நபர் சைக்கிளில், நடமாடும் உணவகத்தை நடத்தி வருகின்றார். தோசையை மட்டுமே பிரதான உணவாக இவர் விற்பனை செய்து வருகின்றார்.

இதுதவிர வடை பாவ் போன்ற உணவுகளையும் அவர் விற்பனைச் செய்து வருகின்றார். இதற்காக, பிரத்யேகமாக தோசைக் கல் (தவா) மற்றும் சிறிய அடுப்பு ஆகியவற்றைக் கொண்ட சைக்கிளை அவர் பயன்படுத்தி வருகின்றார். அடுப்பு மற்றும் தோசைக் கல் சைக்கிளின் பின்பக்க கேரியரில் இடம்பெற்றிருக்கின்றன.

இதனைக் கொண்டே தன்னை நாடி வரும் வாடிக்கையாளர்களுக்கு சுட சுட தோசை மற்றும் வடை பாவ் போன்ற உணவுகளை அவர் வழங்கி வருகின்றார். இவரின் பெயர் பற்றிய விபரம் தெரிய வரவில்லை. இருப்பினும், இவருக்கு 'சைக்கிள் தோசை வாலா' என்ற பெயர் மக்கள் மத்தியில் இருக்கின்றது.

வெகு நீண்ட காலமாக இவர் இத்தொழிலைச் செய்து வருகின்ற காரணத்தினால் இவரை பலர் இவ்வாறு அழைக்கின்றனர். இந்த நபர் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என கூறப்படுகின்றது. சுமார் 25 வருடங்களுக்கும் அதிகமாக தோசை வியாபாரத்தில் அவர் ஈடுபட்டு வருகின்றார்.

எனவேதான் இவரின் பெயர் முழுமையாக மழுங்கி தற்போது சைக்கிள் தோசை வாலா என மாறியிருக்கின்றது. வருமானத்தை ஈட்ட வேறு வழி இல்லாத காரணத்தினால் இவர் சைக்கிளை இதுபோன்று உணவகமாக மாற்றி விநோதமான வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

அதேசமயம், இவர் விற்பனைச் செய்து வரும் உணவுகளுக்கும் தனி பெயர்கள் இருக்கின்றன. இவரின் தோசையை மும்பை வாசிகள் 'ஃப்ளையிங் தோசா' என்றும் வடை பாவை 'ஃப்ளையிங் வடா பாவ்' என்றும் மக்கள் அழைத்து வருகின்றனர். இதுதவிர, இவரிடத்தில் பீட்சா வடிவத்திலான தோசையும் விற்பனைக்குக் கிடைப்பதாகக் கூறப்படுகின்றது.

இதனை சீஸ், குடைமிளகாய், ஸ்பெஷல் மசாலா ஆகியவற்றைக் கொண்டு அவர் தயார் செய்கின்றார். இது அவரிடத்தில் கிடைக்கும் ஸ்பெஷல் ஐடம்களில் ஒன்று ஆகும். ஆகையால், இதன் விலை சற்று கூடுதல். ரூ. 60 தொடங்கி 100 ரூபாய் வரையிலான விலையில் உணவுகள் விற்கப்படுகின்றன.

பெரும்பாலும் இவரிடத்தில் சிறுவர்களே அதிகம் உணவை வாங்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். மேலும், அலுவலகத்திற்கு செல்வோர் மற்றும் கல்லூரி மாணவர்களும் இவரின் பீட்சா தோசைக்கு தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர். அதேசமயம், சில இல்லதரசிகளும் இவரின் ருசியான தோசைக்கு பிரியராக இருக்கின்றனர்.

மும்பையின் என்எல் கல்லூரியை மையமாகக் கொண்ட பகுதியில் மட்டுமே இவர் சுற்றி சுற்றி வியாபாரம் மேற்கொண்டு வருகின்றார். ஆகையால், இப்பகுதி வாசிகள் இவரை காண்பது மிக சுலபம். தான் வருவதை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக தோசைக் கல்லில் கரண்டியை வைத்து தட்டி அறிவிப்பு செய்து வருகின்றார்.
Image Courtesy: Aamchi Mumbai
அவ்வாறு, அவர் ஓசை எழுப்பும்போது வெளியே வருபவர்களில் அதிகமானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர்குறித்த வீடியோவை ஆம்சி மும்பை எனும் யுட்யூப் தளம் வெளியிட்டிருக்கின்றது. இந்த வீடியோவை இதுவரை 13 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டிருக்கின்றனர். தொடர்ச்சியாக இவ்வீடியோ வைரலாகிக் கொண்டே வருகின்றது.


Click it and Unblock the Notifications








