மேட்-இன்-இந்தியா இசைக்கிளுக்கு செம்ம ரெஸ்பான்ஸ்! ஒரே வாரத்துல இத்தன அலகுகளுக்கு புக்கிங்கா? ஆச்சரியமா இருக்கே!
நஹக் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதுமுக மின்சார மிதிவண்டிக்கு எதிர்பார்த்திராத வகையில் மிக அமோகமான வரவேற்பு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நஹக் மோட்டார்ஸ் நிறுவனம் மிக சமீபத்தில் அதன் புதுமுக மின்சார மிதிவண்டிகளை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. கருடா மற்றும் ஜிப்பி என்ற பெயர்களில் களமிறங்கியிருக்கும் இந்த மின்சார மிதிவண்டிகள் முழுக்க முழுக்க நாட்டிலேயே வைத்து தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதில், கருடா இ-சைக்கிளுக்கு ரூ. 31.999 என்ற விலையையும், ஜிப்பி இ-சைக்கிளுக்கு ரூ. 33,499 என்ற விலையையும் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த இ-மிதிவண்டிகளுக்கு தாங்கள் எதிர்பார்த்திராத வகையிலான வரவேற்பு தற்போது நிலவி வருவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரு இ-மிதிவண்டிகளையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஒரே ஒரு வாரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகளுக்கு புக்கிங் குவிந்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்தே, நிறுவனம் தங்களின் புதுமுக இ-சைக்கிள்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதாக தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் தென்பகுதியில் இருந்தே பெரும் பங்கு புக்கிங் இ-சைக்கிள்களுக்கு கிடைத்திருக்கின்றது. அதாவது, நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும் 38 சதவீதம் புக்கிங் நாட்டின் தென்மாநிலங்களிடத்தில் இருந்தே கிடைத்திருக்கின்றது.

அதேசமயம், இந்தியாவில் இருந்து மட்டுமின்றி சர்வதேச சந்தையில் இருந்தும் பலர் இந்த இ-சைக்கிள் மீது விருப்பம் தெரிவித்திருப்பதாக நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கின்றது. ஜெர்மன், யுகே மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 100க்கும் அதிகமான ஆர்டர்கள் கிடைத்திருக்கின்றன.

இந்த அமோக வரவேற்புகுறித்து நிறுவனத்தின் தலைவர் பிரவத் நஹக் கூறியதாவது, "எங்களின் 100சதவீத மேட்-இன்-இந்தியா தயாரிப்பிற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு வாரத்திற்குள் ஆயிரம் ஆர்டர்கள் கிடைத்திருப்பது ஊக்கமளிக்கிறது. எங்களிடம் ஏற்கனவே 3 கோடி ரூபாய்களுக்கான வணிக மதிப்பு உள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பெரும்பாலானோர் ஆன்லைன் வாயிலாகவே தங்களுக்கான ஆர்டரை செய்திருக்கின்றனர். இன்னும் ஒரு சில நாட்கள் வரை மட்டுமே புக்கிங் திறந்திருக்கும். ஆகையால், வரும் 11ம் தேதி வரை வாடிக்கையாளர்களால் புக்கிங் செய்ய முடியும்" என்றார்.

ரூ. 2,999 என்ற முன்தொகையில் இ-சைக்கிளுக்கான முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றது. அவ்வாறு புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு எப்போது வாகனம் டெலிவரி கொடுக்கப்படும் என்ற தகவல் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக அறிவிக்கப்பட்டு வருகின்றது.

டெலிவரி பணிகள் 13ம் தேதியில் இருந்து தொடங்கப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மிக சிறப்பு சேவையாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வீடு தேடி சென்று இ-மிதிவண்டியை டெலிவரி கொடுக்கப்பட இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

இ-சைக்கிளை முழுமையாக சார்ஜ் செய்தால் 40 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். இதில், எல்சிடி திரை, பெடல் சென்சார் தொழில்நுட்பம், வீட்டிலேயே வைத்து சார்ஜ் செய்து கொள்ளும் வசதி என எக்கசக்க சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications







