வன துறையினருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மின்சார பைக்... சார்ஜ் செய்ய சூரிய ஒளி ஒன்னே போதும்!
வனத்துறையினருக்கு உகந்த வசதிகளுடன் ஓர் மின்சார பைக் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி என்ன வசதிகளுடன் அந்த எலெக்ட்ரிக் பைக் உருவாக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் காணலாம், வாங்க.

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் கர்நாடகா (National Institute of Technology)-வில் பயின்று மாணவர்கள் இணைந்து ஓர் எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கி இருக்கின்றனர். வனத்துறையினரின் பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக இந்த இருசக்கர வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் வனத்துறையினர் ஏற்ற அம்சங்கள் பல எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

பிரத்யேகமாக வனத்துறையினரின் பயன்பாட்டிற்கு ஓர் வாகனம் வடிவமைக்கப்பட்டிருப்பது வரலாற்றுலேயே இதுவே முதல் முறையாகும். வனத்துறையினர் அதிக அடர்ந்த காட்டுக்குள்ளும் பணியாற்றும் நிலை நிலவுகின்றது. அங்கு மின்சார விநியோகம் என்பது கேள்விக்குறியேய இத்தகைய நிலையைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் இருசக்கர வாகனத்திற்கு சோலார் வாயிலாக சார்ஜ் செய்யும் வசதியை வழங்கியிருக்கின்றனர்.

இதைக் கொண்டு மின்சாரம் இல்லா பகுதிகளிலும் சூரிய ஒளியை மட்டுமே வைத்துக் கொண்டு எலெக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இத்துடன், வாக்கி-டாக்கியை சார்ஜ் செய்து கொள்ளும் வசதி, செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ளும் வசதி மற்றும் ஜிபிஎஸ் டிராக்கர் போன்ற நவீன கால அம்சங்கள் பலவும் இதில் வழங்கப்பட்டுள்ளன.

பொதுவாக, செல்போன்களை சார்ஜ் செய்யவே சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு வருகின்றது. ஆகையால், வாக்கி-டாக்கியை சார்ஜ் செய்யும் வசதியைப் பெறும் முதல் வாகனமாகவும் இது காட்சியளிக்கின்றது. தொடர்ந்து, இதன் ஹெட்லைட்டை தனியாக கழட்டி கையொடு எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவசர காலங்களில் சார்ஜ் டார்ச் லைட்டாக உதவுவதற்காகவே இந்த வடிவமைப்பை மாணவர்கள் ஹெட்லைட்டிற்கு வழங்கியிருக்கின்றனர். இதில், குறிப்பிட்ட நேரம் வரை மின் விளக்கை எரிய செய்யக் கூடிய வகையில் பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது, மின்சார வாகனத்துடன் இணைந்திருக்கும் தேவையான சார்ஜை ஏற்றிக் கொள்ளும்.

தொடர்ந்து, சில முக்கிய பொருட்கள, ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் வகையில் ஸ்டோரேஜ் வசதியும் இருசக்கர வாகனத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது வனத்துறை அதிகாரிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், தண்ணீர் மற்றும் உணவு பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் வகையிலும் வசதிகள் இந்த வாகனத்தில் செய்யப்பட்டு கொடுத்துள்ளன.

இது, காட்டின் மையப்பகுதியில் கண்கானிப்பு பணிகளில் ஈடுபடும்போது மிகுந்த பயன்பாட்டை அளிக்க உதவும். இந்த இருசக்கர வாகனம், குட்ரேமுக் தேசிய பூங்காவில் பணிபுரிந்து வரும் வனத்துறை அதிகாரிகளின் தேவையை மனதில் கொண்டு இந்த பைக் உருவாக்கப்பட்டிருப்பதாக குறித்து தேசிய தொழில்நுட்ப நிறுவனம் கர்நாடகாவின் நீர்வளம் மற்றும் கடல்சார் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் ப்ருத்விராஜ் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, இன்னும் பல முக்கிய தகவல்களையும் இருசக்கர வாகனம் பற்றி அவர் பகிர்ந்துக் கொண்டார். அந்தவகையில், இருசக்கர வாகனத்தில் சுமார் 75கிமீ பயணத்தை ஒற்றை முழுமையான சார்ஜில் இயக்கிக் கொள்ள முடியும் என தெரிவித்தார். இந்த மின்சார பைக்கில் பிஎல்டிசி மோட்டார் மற்றும் 2.0 kw, 72 வோல்ட், 33 ஏச் திறன் பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

வித்யுக் 4.0 (VIDH YUG 4.0) என்ற பெயர் மின்சார இருசக்கர வாகனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்க ஒட்டுமொத்தமாக 3 மாதங்கள் ஆகிவிட்டதாக பேராசிரியர் ப்ருத்விராஜ் தெரிவித்தார். எலெக்ட்ரிக் பைக்கை எளிதில் ரீசார்ஜ் செய்துகொள்வதற்கு ஏதுவாக 400 வாட் மோனோ க்ரிஸ்டாலின் சோலார் பேனல்கள் மற்றும் 1.5 யுபிஎஸ் யூனிட் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற இன்னும் பல அம்சங்களை வித்யுக் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவை அனைத்தும் வனத்துறையினர் பயன்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு வழங்கப்பட்டிருக்கின்றன. அம்சங்கள் மட்டுமின்றி உடல் அமைப்பும் காட்டு வழி பயணத்தைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு லேசான அட்வென்சர் தோற்றமே காரணமாக அமைந்துள்ளது. இத்துடன், வனத்துறையினர் அணியும் ஆடையின் நிறம் இருசக்கர வாகனத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இது அந்த இருசக்கர வாகனத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








