இ-ஸ்கூட்டர் தயாரிப்பிற்கு வந்துள்ள முன்னணி பேட்டரி தயாரிப்பு நிறுவனம்!! இரு ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது!
இந்தியாவின் முன்னணி பேட்டரி தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஒகாயா (Okaya) க்ரூப்பின் இவி பிரிவு எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் நுழைய உள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்காக சில இ-ஸ்கூட்டர்கள் இந்த நிறுவனத்தில் இருந்து வெளிவரவுள்ளன. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிப்பதற்காக ஹிமாச்சல பிரதேசத்திலும், ஹரியானாவிலும் தொழிற்சாலைகளை ஒகாயா க்ரூப் நிறுவி வருகிறது.

அதுமட்டுமின்றி 2023ல் இருந்து 2025ஆம் ஆண்டிற்குள் ராஜஸ்தானில் மூன்று கூடுதல் தொழிற்சாலைகளை நிறுவவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒகாயா எலக்ட்ரிக் வாகனங்கள் முதலாவதாக ஏவியன் ஐக்யூ சீரிஸ் & கிளாசிக் ஐக்யூ சீரிஸ் என்ற பெயர்கள் கொண்ட இ-ஸ்கூட்டர்களாக கொண்டுவரப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய போக்குவரத்து சூழலுக்கு தேவையான அனைத்து தொழிற்நுட்பங்களும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றின் விலைகள் ரூ.39,999-இல் இருந்து ரூ.60,000 வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒகாயாவின் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியா முழுவதும் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதுகுறித்து ஒகாயா பவர் க்ரூப்பின் நிர்வாக இயக்குனர் அனில் குப்தா கருத்து தெரிவிக்கையில், இந்தியா மற்றும் ஒரு வெளிநாட்டு சந்தைக்கான எலக்ட்ரிக் வாகனங்களுக்காக இரு ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையங்களுடன் இணைந்துள்ளோம்.

எதிர்காலத்தில் ஒகாயா இவி பிராண்டில் இருந்து நேர்த்தியான எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களும், பைக்குகளும் வெளிவரவுள்ளன. மேலும், இந்த வாகனங்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் ஷோரூம்கள் மற்றும் சேவை மையங்களை திறப்பதை நோக்கமாக கொண்டுள்ளோம்.

இந்த நடப்பு நிதியாண்டிற்குள் இந்த பிரிவில் நான்கு தயாரிப்பு வாகனங்களை களமிறக்குவதற்கான திட்டங்களை வைத்துள்ளோம். முழுக்க முழுக்க இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை வைத்து தயாரிக்கப்படவுள்ள இவை இந்திய அரசாங்கத்தின் ‘2025க்குள் இந்திய சாலையில் ஒரு கோடி இ-ஸ்கூட்டர்கள்' கனவிற்கு எங்களது பங்காக இருக்கும் என தெரிவித்தார்.

ஏவியன் ஐக்யூ மற்றும் கிளாசிக் ஐக்யூ இ-ஸ்கூட்டர்களின் அறிமுகத்துடன் டெல்லி மற்றும் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் இரு வாடிக்கையாளர்கள் அனுபவ மையங்கள் நிறுவப்பட்டு வருவதாகவும் ஒகாயா இவி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் எலக்ட்ரிக் 2-சக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் மூன்று முக்கிய பிரச்சனைகள் இருப்பதாக இந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தரமான உதிரி பாகங்கள் & சேவைகள் கிடைப்பதில்லை, சரியான உள்கட்டமைப்பு மற்றும் நிதி கிடைப்பதில்லை மற்றும் பெட்ரோல் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் இ-ஸ்கூட்டரை நோக்கி செல்வதை தடுத்தல் என்பவை ஒகாயா கூறும் அந்த 3 முக்கிய பிரச்சனைகள் ஆகும்.

இருப்பினும் தனது இ-ஸ்கூட்டர்களின் பேட்டரி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மென்பொருளில் ஒகாயா இவி நிறுவனம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. கிட்டத்தட்ட 35 வருடங்களாக பேட்டரி தயாரிப்பில் ஈடுப்பட்டு வரும் ஒகாயா குழுமத்திற்கு தமிழகத்திலும் தொழிற்சாலை உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








