பன்னாட்டு மின்சார வாகன நிறுவனமாக மாற பிரம்மாண்ட திட்டம்... கியா, ஜாகுவார் அதிகாரிகளை பிடித்து போட்டது ஓலா!
மின்சார வாகனத் தயாரிப்பில் உலகின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமாக மாறுவதற்கான பிரம்மாண்டத் திட்டத்துடன் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் காய்களை நகர்த்தி வருகிறது. இதற்காக, கியா இந்தியா மற்றும் ஜாகுவார் நிறுவனங்களை சேர்ந்த மூத்த உயர் அதிகாரிகளையும் தனது நிறுவனத்தின் உயர் பதவிகளில் நியமித்துள்ளது.

வாடகை டாக்சி சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஓலா விரைவில் மின்சார வாகனத் தயாரிப்பை துவங்க இருப்பது தெரிந்ததே. இருசக்கர, மூன்றுசக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்களை தயாரித்து உலக அளவில் விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளது.

முதலாவதாக மின்சார ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. வரும் ஜூலை மாதம் இந்த புதிய மின்சார ஸ்கூட்டர் சந்தைக்கு கொண்டு வருவதற்கு ஓலா திட்டமிட்டுள்ளது. மேலும், மின்சார வாகனத் தயாரிப்புக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் மிகப்பெரிய தொழிற்சாலையையும் அமைத்து வருகிறது.

இந்த நிலையில், தனது மின்சார வாகனங்களை இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்ல ஓலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. அதுவும், நடப்பு நிதி ஆண்டு காலத்திலேயே ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியை துவங்கவும் திட்டமிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கும் மின்சார வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, மிகப்பெரிய சர்வதேச வர்த்தகத் திட்டத்தை வகுத்து அதனை நடைமுறைப்படுத்தும் பணிகளிலும் இறங்கி இருக்கிறது.

அதாவது, உலக அளவில் மின்சார வாகன விற்பனை துறையில் மிக முக்கிய பன்னாட்டு நிறுவனமாக மாறுவதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளது. இதற்கு தக்கவாறு, பல்வேறு நாடுகளின் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு தனது புதிய மின்சார வாகனங்களை வடிவமைப்பதற்கும், அதனை சந்தைப்படுத்துவதற்கும் மிகப்பெரிய வாகன நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளை பணிக்கு அமர்த்தி உள்ளது.

ஆம். கியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வந்த 35 வயதாகும் யங்சங்க கிம்மை தனது நிறுவனத்தின் பன்னாட்டு விற்பனை மற்றும் வினியோகப்பிரிவு தலைவராக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நியமித்துள்ளது. இவர் ஹூண்டாய் நிறுவனத்திலும் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். மேலும், இந்தியா மற்றும் சர்வேத அளவில் பல்வேறு நாடுகளின் வாகன சந்தை குறித்த நல்ல அனுபவமுடையவர்.

அதேபோன்று, ஜாகுவார் நிறுவனத்தின் டிசைன் பிரிவு அதிகாரியாக பணிபுரிந்த வேன் பர்கெஸ்ஸை தனது மின்சார வாகனங்களின் வடிவமைப்புப் பிரிவு தலைவராக நியமித்துள்ளது ஓலா எலெக்ட்ரிக். பெங்களூர் மற்றும் லண்டனில் இருக்கும் ஓலா டிசைன் ஸ்டூடியோவில் நடைபெறும் அனைத்து பணிகளும் இவரது கண்காணிப்பில்தான் நடைபெற உள்ளது.

ஜாகுவார் நிறுவனத்தின் பிரபலமான எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் கார் மாடலை வடிவமைத்த குழுவின் தலைமை டிசைனராக பணியாற்றியவர். அத்துடன், ரோல்ஸ்ராய்ஸ், பென்ட்லீ, அஸ்டன் மார்ட்டின், ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்களிலும் பணிபுரிந்தவர். கார் வடிவமைப்புத் துறையில் 30 ஆண்டுகள் அனுபவமிக்க வேன் பெர்கெஸை தனது நிறுவனத்தின் புதிய மின்சார வாகனங்களின் வடிவமைப்புப் பிரிவு தலைவராக நியமித்துள்ளது ஓலா எலெக்ட்ரிக்.

குறிப்பாக, ஓலா எலெக்ட்ரிக் கார் வடிவமைப்பில் வேன் பர்கெஸ் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் விற்பனை செய்வதற்கு ஏதுவான பல்வேறு கட்டமைப்பு மற்றும் சிறப்பு தொழில்நுட்பங்களுடன் இந்த காரை உருவாக்க ஓலா நிறுவனத்திற்கு வாய்ப்பு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








