ஓலா இ-ஸ்கூட்டர்களுக்கு நெதர்லாந்தில் இருந்து வந்துள்ள ஆர்டர்!! ஸ்பெஷலாக ஆரஞ்ச் நிறத்தில் தயாராகுகின்றன
நெதர்லாந்து தூதரகத்தில் இருந்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து தர வேண்டி ஆர்டர் கிடைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வேகமாக வளர்ந்துவரும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி மிக பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அறிமுகப்படுத்தியது. எஸ்1 & எஸ்1 ப்ரோ என்ற இரு விதமான வேரியண்ட்களில் களமிறக்கப்பட்டுள்ள இவை பலத்தரப்பட்ட மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதனால் இந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக நமது செய்திதளத்தில் கூட அவ்வப்போது தெரிவித்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது சிறப்பு ஆர்டராக தனிப்பயனாக்கப்பட்ட ஒன்பது எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்களை நெதர்லாந்து தூதரகத்திற்கு வழங்கவுள்ளதாக ஓலா அறிவித்துள்ளது.

இந்த 9 ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்கள் இந்தியாவில் நெதர்லாந்து தூதரக பணியாளர்களின் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமான ஆரஞ்ச் நிறத்தில் இந்த எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்கள் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளதை இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள படத்தில் காணலாம்.

ஆரஞ்ச், நெதர்லாந்து நாட்டின் அதிகாரம் சார்ந்த நிறம் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். இந்த ஆரஞ்ச் பெயிண்ட்டினை ஓலா நிறுவனம் 'டச்சு ஆரஞ்ச்' என அழைக்கிறது. மேலும் இந்த ஸ்பெஷல் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்களில் நெதர்லாந்து நாட்டின் முத்திரையும் பொறிக்கப்பட்டுள்ளன. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகளை இன்னும் சில வாரங்களில் துவங்கவுள்ளது.

அதன் பின்பே தற்சமயம் தயாரிப்பு பணிகளில் உள்ள இந்த 9 எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்கள் டெல்லி, மும்பை & பெங்களூரில் உள்ள நெதர்லாந்து நாட்டு தூதரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஓலா நிறுவனரும், சிஇஓ-வுமான பாவிஷ் அகர்வால் கூறுகையில், "நெதர்லாந்து நாட்டு தூதரகத்திற்காக இந்த தனிப்பயன் ஸ்கூட்டர்களை உருவாக்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

மேலும் 2025க்கு பின் இந்தியாவில் பெட்ரோல் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட போவதில்லை என்பதை உறுதிப்படுத்தும் எங்கள் மிஷன் எலக்ட்ரிக்கில் நெதர்லாந்து இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். மேம்பட்ட வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செயல்முறை சில நாட்களுக்குள் தனிப்பயனாக்கப்பட்ட ஸ்கூட்டரை உருவாக்கவும், சோதிக்கவும் எங்களுக்கு உதவியது.

எதிர்காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயன் பெயிண்ட் பூச்சுகளை வழங்குவதையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் இதன் மூலமாக அவர்கள் தங்கள் ஓலா எஸ்1 ஸ்கூட்டரை தனித்துவமாக உருவாக்க முடியும்" என்றார். நெதர்லாந்து நாட்டிற்கான இந்திய தூதராக உள்ள மார்டின் வான் டென் பெர்க் இதுகுறித்து பேசுகையில், "தனிப்பயனாக்கப்பட்ட இந்த ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்களை வாங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

நெதர்லாந்து நாட்டின் லோகோ உடன் டச்சு ஆரஞ்சு நிறத்தில் இவை அழகாக வடிவமைக்கப்பட்டு தனிப்பயனாக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி, எஸ்ஜிடி-களை அடைவதற்கு அவசியமான மாசு உமிழ்வு குறைப்பிற்கான எங்கள் உறுதிப்பாட்டின் முக்கிய பகுதியாக ஓலா எஸ்1-ஐ தேர்ந்தெடுத்தோம். நகர்புற சூழலில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மின்சார வாகனத்தில் பயணிப்பது மிகவும் முக்கியமானது.

எங்கள் அலுவலகத்தில் இருக்கும் ஸ்கூட்டர்களுக்கு பதிலாக ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்த நாங்கள் ஆவலாக உள்ளோம்" என்றார். இந்தியாவில் இளம் தலைமுறையினரை கவர்ந்துள்ள எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வரும் காலங்களில் வெளிநாட்டு சந்தைகளுக்கும் கொண்டு செல்ல ஓலா திட்டமிட்டு வருகிறது.
இதில் இங்கிலாந்து உள்பட ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியா உள்ளிட்டவை அடங்குகின்றன. இத்தகைய வெளிநாட்டு ஏற்றுமதிகளினால் ஓலாவின் உள்நாட்டு உற்பத்தி எந்த விதத்திலும் பாதிக்காது. இன்னும் சொல்ல போனால், அதிகரிக்கவே செய்யும். இந்தியாவில் நமது தமிழகத்தில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 'எதிர்கால தொழிற்சாலை' என அழைக்கும் அதன் தொழிற்சாலையை நிறுவி உள்ளது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஒருபக்கம் ஏற்று கொள்ளப்பட்டு கொண்டிருக்க, மறுப்பக்கம் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர்களை டெஸ்ட் ட்ரைவ் கொடுக்கும் பணிகளையும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. டெஸ்ட் ட்ரைவ் எடுத்த வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்லப்படியான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








