ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி வெளியான ஆச்சரிய தகவல்... சந்தோஷத்தில் மக்கள் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு!
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி வெளியாகியுள்ள புதிய தகவல், வாடிக்கையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு, இந்தியாவின் 1,000க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முன்பதிவுகளை பெற்றுள்ளது. ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் இந்த தகவலை இன்று (ஆகஸ்ட் 6) தெரிவித்துள்ளார். இந்தியாவை பொறுத்தவரை பெரும்பாலான நிறுவனங்கள் முக்கிய நகரங்களில் மட்டுமே தங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்கின்றன.

உதாரணத்திற்கு சென்னை, பெங்களூர், ஐதராபாத், மும்பை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முதலில் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதன் பின்னர்தான் படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் விற்பனை விரிவுபடுத்தப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வித்தியாசமாக செயல்படவுள்ளது.

இதன்படி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முதல் நாளில் இருந்தே இந்தியா முழுவதும் டெலிவரி செய்யவுள்ளது. அத்துடன் சர்வீஸ் சேவைகளையும் வழங்கவுள்ளது. இந்த தகவலையும் ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தற்போது தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஏனெனில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாற பலர் விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் வசிக்கும் நகரங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கிடைப்பதில்லை. எனினும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எடுத்த எடுப்பிலேயே முழு வீச்சில் களமிறங்கவுள்ளதால், அனைத்து நகரங்களை சேர்ந்தவர்களும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பெறலாம்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. சுதந்திர தினத்தன்று விற்பனைக்கு வரவுள்ள இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு குவிந்து வரும் முன்பதிவுகள் மூலம் வாடிக்கையாளர்கள் மத்தியில் எவ்வளவு எதிர்பார்ப்பு உள்ளது? என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவு தொடங்கப்பட்ட 24 மணி நேரத்திலேயே 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் வாங்க விரும்பினால், வெறும் 499 ரூபாய் செலுத்தி தற்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 10 வண்ண தேர்வுகளில் கிடைக்கும்.

விற்பனைக்கு வந்த பிறகு, பஜாஜ் சேத்தக், ஏத்தர் 450எக்ஸ் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போட்டியிடும். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 150 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடைமுறை பயன்பாட்டில் இதே அளவிற்கு கிடைக்காவிட்டாலும் கூட, இது மிகவும் சிறப்பான ரேஞ்ச் என்பதில் சந்தேகம் இல்லை. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சக்தி வாய்ந்த மோட்டாரும், லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பும் வழங்கப்படவுள்ளது.

இதன் பூட் பகுதியில் இரண்டு ஹெல்மெட்களை வைக்கும் அளவிற்கு இடவசதி உள்ளது. அத்துடன் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டெயில்லேம்ப் ஆகியவை வழங்கப்படவுள்ளன. மேலும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனலும் வழங்கப்படவுள்ளது.

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் தொழிற்சாலையில்தான் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்படவுள்ளது. முதல் கட்டத்தில், இந்த தொழிற்சாலையின் உற்பத்தி திறன் ஒரு ஆண்டுக்கு 2 மில்லியன் (20 லட்சம்) யூனிட்களாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகு இந்த தொழிற்சாலையில் ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியன் (1 கோடி) யூனிட்கள் உற்பத்தி செய்யப்படும். உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் டூவீலர் தொழிற்சாலை என்ற பெருமையை இது பெறவுள்ளது. இந்த பிரம்மாண்ட தொழிற்சாலை தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications








