புது தொழிற்சாலையில் முதல் இ-ஸ்கூட்டரை தயாரித்து வெளியேற்றியது ஓலா!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
முதல் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலையில் இருந்து முழுவதுமாக தயாரிக்கப்பட்டு வெளியேறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள படங்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

மிக பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான எஸ்1 சமீபத்தில் சுதந்திர தின நன்னாளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொழிற்சாலையில் இருந்து முதல் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெற்றிக்கரமாக முழுவதுமாக தயாரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளது. இளம் சிவப்பு நிறத்தில் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முதல் எஸ்1 இ-ஸ்கூட்டர் தொடர்பான படங்களை ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில் முதல் எஸ்1 ஸ்கூட்டரின் படத்துடன், இன்று எங்கள் எதிர்கால தொழிற்சாலையில் முதல் ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டது! தற்போதைய தொற்றுநோய் காலத்திலும் பிப்ரவரியில் தரிசு நிலமாக இருந்த பகுதியினை ஆறு மாதங்களுக்குள் தொழிற்சாலையாக மாற்றியுள்ளோம். olaElectric குழு ஆச்சிரியமாக இருக்கிறது என குழுவை பாராட்டி குறிப்பிடப்பட்டுள்ளது.

பாவிஷ் அகர்வால் கூறியபடி, கடந்த ஆறு மாதங்களில் ஓலா தொழிற்சாலை கட்டமைக்கப்பட்டு, தற்போது முதல் ஓலா எஸ்1 ஸ்கூட்டரும் உருவாக்கப்பட்டுவிட்டது. இது உண்மையில் ஆச்சிரியமான விஷயமாகும். ஓலாவின் இந்த பிரம்மாண்ட தொழிற்சாலை வேறெங்கும் இல்லை, நமது தமிழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் உள்ளது.

எந்த அளவிற்கு பிரம்மாண்டம் என்றால், உலகிலேயே மிக பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு தொழிற்சாலையாக, வருடத்திற்கு 2 மில்லியன் யூனிட் வாகனங்களை தயாரிக்கும் அளவிற்கு திறனுடன் தங்களது எதிர்கால தொழிற்சாலை உருவாக்கப்பட்டு வருவதாக கடந்த மார்ச் மாதத்தில் பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருந்தார்.

கேப் ஒருங்கிணைப்பு நிறுவனமாக விளங்கிவரும் ஓலா, இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்துவரும் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டினால் ஈர்க்கப்பட்டு இ-ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கவுள்ளதாக கடந்த ஆண்டில் இருந்தே தெரிவித்து வந்தது. அதன்படி முதல் வேலையாக ஓலா க்ரூப்பில் ஓலா எலக்ட்ரிக் என்ற பிரிவு தனியாக பிரிக்கப்பட்டது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தமிழகத்தில் தொழிற்சாலையை உருவாக்க துவங்கியதால், நம் தமிழகத்தில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க துவங்கியது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எவ்வாறான சிறப்பம்சங்களுடன் வெளிவரவுள்ளதோ என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் ஒரு வழியாக ஓலா எஸ்1 கடந்த ஆகஸ்ட் 15ல் அறிமுகமாகிவிட்டது.

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் கிட்டத்தட்ட கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான டோக்கன் தொகையாக ரூ.499 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது திரும்ப பெறக்கூடிய தொகையாகும். அதாவது முன்பதிவை ரத்து செய்ய நேர்ந்தால் இந்த தொகை திரும்ப கிடைக்க பெற்றுவிடும்.

எஸ்1 மட்டுமில்லாமல் எஸ்1 ப்ரோ என்கிற வேரியண்ட்டிலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் எஸ்1 ப்ரோ என்பது சற்று விலை அதிகமான வேரியண்ட் ஆகும். ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை நாங்கள் ஏற்கனவே கூறியதுபோல் ரூ.99,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் எஸ்1 ப்ரோ வேரியண்ட் ரூ.1,29,999 என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் எந்த மாநிலத்தில் ஓலா எஸ்1 ஸ்கூட்டரை வாங்குகிறீர்கள் என்பதை பொறுத்து விலை சற்று மாறுபடும். அதாவது மேற்கூறப்பட்ட விலைகள் நமது தமிழகத்தில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகளாகும்.

அதுவே குஜராத் மாநிலத்தில் எஸ்1-வின் விலை ரூ.79,999 ஆகவும், எஸ்1 ப்ரோவின் விலை ரூ.109,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கும் மானியங்களை பொறுத்தே இந்த வித்தியாசங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி ஒன்றிய அரசாங்கம் ஃபேம்-2 திட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவந்தது.

இவற்றினால் தான் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலையினை ரூ.1 லட்சத்திற்குள்ளாக ஓலா நிறுவனத்தால் கொண்டுவர முடிந்துள்ளது. அதிகப்பட்சமாக மணிக்கு 90கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 121கிமீ தூரத்திற்கு இயங்கலாம்.மொத்தம் 10 வண்ண தேர்வுகளில் இந்த இ-ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








