உலகின் மிகப்பெரிய அனைத்து மகளிர் தொழிற்சாலை!! தமிழகத்தில் கட்டமைத்துவரும் ஓலா எலக்ட்ரிக்!
உலகின் மிக பெரிய அனைத்து மகளிர் தொழிற்சாலையாக ஓலா கட்டமைத்து வரும் தொழிற்சாலை விளங்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தமிழகத்தில் விறுவிறுப்பாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது தொழிற்சாலையை நிறுவி வருகிறது. உலகின் மிக பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பு தொழிற்சாலையாக இது விளங்கவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

இந்த நிலையில் தற்போது ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால், இந்த தொழிற்சாலை உலகிலேயே அதிக பெண் பணியாளர்களை கொண்ட தொழிற்சாலையாகவும் விளங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது கூற்றுப்படி பார்க்கும்போது, ஓலா தொழிற்சாலையில் 10,000க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

இதுகுறித்த பாவிஷ் அகர்வாலின் டுவிட்டர் பதிவில், சுயசார்பான தேசம், சுயசார்பான பெண்களை வேண்டுகிறது! ஓலா வருங்கால தொழிற்சாலை முழுக்க முழுக்க 10,000+ பெண்களால் செயல்படும் என்பதை பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன்! இது உலகின் மிக பெரிய அனைத்து பெண்கள் தொழிற்சாலையாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவர், முக்கிய உற்பத்தி திறன்களை பயிற்றுவிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் நாங்கள் கணிசமாக முதலீடு செய்துள்ளோம். ‘ஓலா எதிர்கால தொழிற்சாலை'-யில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு வாகனத்தின் முழு உருவாக்கத்திற்கும் அவர்கள் பொறுப்பாவார்கள். பொருளாதார வாய்ப்புகளை பெண்களுக்கு வழங்குவது அவர்களின் வாழ்க்கை மற்றும் குடும்பத்தை மட்டுமல்ல, முழு சமூகத்தையும் மேம்படுத்துகிறது எனவும் கூறினார்.

ஓலா எலக்ட்ரிக்கின் இந்த முதல் தொழிற்சாலை ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்களின் பிறப்பிடமாக விளங்குகிறது. தொழிற்சாலையை கட்டமைக்கும் முதற்கட்ட பணிகள் தற்போதைக்கு நிறைவு பெற்றுள்ளன. தொழிற்சாலை முழுவதுமாக கட்டப்பட்டுவிட்டால், வருடத்திற்கு 2 மில்லியன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தாராளமாக தயாரிக்கலாம் என்கிறது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்.

ஆனால் இதற்கு பல நாடுகளில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தேவை ஏற்பட வேண்டும். இவ்வாறு உலகளவில் தனது எஸ்1 ஸ்கூட்டர் மாடலை கொண்டு செல்ல ஓலா நிறுவனம் பணியாற்றி வருகிறது. இதன்படி ஓலா எஸ்1 இ-ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் அடுத்த 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து துவங்கப்படலாம் என ஏற்கனவே கூறியிருந்தோம்.

கடந்த ஆண்டு இறுதியில் தமிழக அரசுடன் ஏற்படுத்தி கொண்ட ஒப்பந்தத்தின்படி, சுமார் 2,400 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் இந்த ‘ஓலாவின் எதிர்கால தொழிற்சாலை' 500 ஏக்கர் பரப்பில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்துதல் பணிகள் எல்லாம் கடந்த ஜனவரி மாதத்தில் முடிந்தன.

அதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தொழிற்சாலையை உருவாக்கும் பணிகள் துவங்கின. முழுவதும் பெண்களுடன், 5,000 ரோபோட்கள் மற்றும் தானியங்கி வாகனங்கள் இந்த தொழிற்சாலையில் பணியாற்றவுள்ளதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக கொண்டுவரப்பட்டுள்ள எஸ்1 கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. ரூ.1 லட்சம் என்ற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

டெலிவிரி பணிகள் வருகிற அக்டோபர் மாதத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குதலில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் டீலர்களை கொண்டிருக்க போவதில்லை, ஆதலால் ஸ்கூட்டர்களை நேரடியாக தொழிற்சாலையில் இருந்து ஓலா நிறுவனமே வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு டெலிவிரி செய்யவுள்ளது.

ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முறையே 120கிமீ மற்றும் 180கிமீ ரேஞ்ச் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மணிக்கு 40கிமீ வேகத்தை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடலாம் என கூறும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இதனை அதிகப்பட்சமாக மணிக்கு 115கிமீ வேகத்தில் இயக்கலாம் என்கிறது.

மொத்தம் 10 விதமான நிறத்தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஓலா எஸ்1 ஸ்கூட்டரின் பேட்டரியை ஓலா ஹைப்பர்சார்ஜர் மையங்களில் வெறும் 18 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்யதுவிடலாமாம். இதற்கு அதிக செலவழிக்க வேண்டியிருக்கும் என்பதால், பார்க்கிங் பகுதிகளில் அமைக்கப்பட உள்ள விலை-குறைந்த சார்ஜிங் வசதிகளையே ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பெரிதும் நம்பியுள்ளது.


Click it and Unblock the Notifications








