பிரபல நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்த ஓலா... தமிழகத்தில் அமைய இருக்கும் மிகப்பெரிய உற்பத்தி ஆலைக்காக அதிரடி!!
தமிழகத்தில் அமைய இருக்கும் மிகப்பெரிய உற்பத்தி ஆலைக்காக ஓலா நிறுவனம் பிரபல நிறுவனம் ஒன்றுடன் கூட்டணி சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நாட்டின் முன்னணி கால் டாக்சி சேவை நிறுவனங்களில் ஒன்றான ஓலா விரைவில் மின்வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதற்கான பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் மின்சார இருசக்கர வாகனங்களை நாட்டில் அறிமுகம் செய்வதற்காக சீமென்ஸ் (Siemens) நிறுவனத்துடன் இணைந்திருக்கின்றது.

இவர்கள் இருவரும் இணைந்தே நாட்டில் மிக அட்வான்ஸான மின்சார இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை அமைக்க இருக்கின்றனர். ஓலா நிறுவனத்தின் இந்த மின் வாகன உற்பத்தி ஆலை தமிழகத்திலேயே அமைய இருக்கின்றது. இதுகுறித்த தகவலை ஓலா மற்றும் தமிழக அரசு ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. இந்த ஆலை தமிழகத்தில் அமைய இருப்பதால் சுமார் 10 ஆயிரம் புதிய வேலை வாய்ப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே ஓலா மற்றும் சீமென்ஸ் நிறுவனங்களின் கூட்டணி தொடங்கியிருக்கின்றது. இவர்கள் இருவரும் இணைந்து ஆண்டு ஒன்றிற்கு சுமார் 2 மில்லியன் அலகு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யுமளவிலான தயாரிப்பு ஆலையை கட்டமைக்க இருக்கின்றனர். நவீன வசதிகளுடன் இந்த ஆலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே ஓலா சீமென்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருக்கின்றது.

இந்த உற்பத்தி ஆலையில் பணியாளர்கள் மட்டுமின்றி 5 ஆயிரம் ரோபோக்களும் பயன்படுத்தப்பட இருக்கின்றன. ஆகையால், உலக தரத்திலான மின்சார இருசக்கர வாகனங்களை ஓலா இந்தியாவில் தயாரிக்கும் என்பது எந்தவித சந்தேகமுமின்றி தெரிகின்றது. அதேசமயம், உலக நாடுகளுக்கு தேவையான மின் வாகனங்களை இங்கிருந்தே ஓலா உற்பத்தி செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோபோக்கள் மற்றும் டிஜிட்டல் வடிவமைப்பு ஆகியவற்றைச் செய்யக் கூடிய கருவிகளையே சீமென்ஸ் உருவாக்கி தர இருக்கின்றது. ஆகையால், இந்த ஆலையில் பல்வேறு பணிகள் டிஜிட்டல் முறையிலேயே நடைபெறும் என்பதும் தெளிவாக தெரிய வந்திருக்கின்றது.

ஓலா மின்சார ஸ்கூட்டர்:
நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த எடர்கோ மின்வாகன நிறுவனத்தை கையகப்படுத்தியதைத் தொடர்ந்தே இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உலகளவில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கின்றது. எடர்கோவின் பிரபல மாடல்களில் ஒன்றான ஆப்ஸ்கூட்டர் எனும் மின்சார ஸ்கூட்டரையே அது முதலில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இந்த மின்சார ஸ்கூட்டரில் ஸ்மார்ட் போன் இணைப்பு வசதி, ஜியோ ஃபென்சிங், 7 இன்ச் அளவிலான தொடுதிரை (அழைப்புகளை ஏற்கும் மற்றும் குறுஞ்செய்தியை படிக்கும் வசதிகளைக் கொண்டது) என பல்வேறு சிறப்பு வசதிகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலையும் மிக குறைவாகவே எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இதுவரை இந்த ஸ்கூட்டரின் விலை மற்றும் என்ன ரேஞ்ஜை வெளிப்படுத்தும் என்ற தகவலை ஓலா அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








