ஜூனில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகிறது... விலை மிக சவாலாக இருக்கும்!
இன்னும் இரண்டு மாதங்களில் புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன. இதனை ஓலா நிறுவனத்தின் ஸ்தாபகர் பவிஷ் அகர்வால் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும், விலையும் அசர வைக்கும் வகையில் இருக்கும் என்று அவர் கூறி இருக்கிறார்.

ஓலா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எல்லோரின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. அசத்தும் தொழில்நுட்ப அம்சங்களுடன் மிக சவாலான விலையில் இந்த புதிய ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும், ஓசூரில் ஓலா நிறுவனத்தின் பெருந்திட்ட வளாகத்தில் உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்னும் இரண்டு மாதங்களில் வருவதற்கான வாய்ப்பு இருப்பதை அந்நிறுவனத்தின் ஸ்தாபகர் பவிஷ் அகர்வால் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,"மாசு உமிழ்வு இல்லாத சூழலை உருவாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக எங்களது திட்டம் அமைந்துள்ளது. பெட்ரோல் இருசக்கர வாகனங்களில் இருந்து விரைவாக மின்சார வாகனங்களுக்கு வாடிக்கையாளர்களை இழுக்கும் வகையில் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறோம்.

எங்களது ஓசூர் தொழிற்சாலையின் முதல்கட்ட கட்டுமானப் பணிகள் வரும் ஜூனில் நிறைவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். ஆலை பணிகள் நிறைவு பெறும்போது, முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வர உள்ளோம்.

எங்களது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்கனவே அசெம்பிள் செய்யப்பட்டு சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, தொழிற்சாலையில் உற்பத்தி துவங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்ட உடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

எங்களது ஸ்கூட்டருக்கான பேட்டரி, மின் மோட்டார், பேட்டரி மேலாண்மைக்கான மென்பொருள் தொழில்நுட்பம் மற்றும் இதர செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை சொந்தமாகவே உருவாக்கி இருக்கிறோம். எனவே, உற்பத்தி செலவு குறைவாக இருக்கும் என்பதால், விலையை மிக சவாலாக நிர்ணயிக்க முடிவு செய்துள்ளோம்.

எங்களது தயாரிப்பு சந்தையில் 'டாப் க்ளாஸ்' அம்சங்களை பெற்று இருக்கும். வாடிக்கையாளர்களிடம் நேரடியாக விற்பனை செய்வதற்கும் திட்டமிட்டுள்ளோம். இது நிச்சயம் பெரிய அளவிலான வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம்.

இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் எங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்ல இருக்கிறோம். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு ஓரிரு மாதங்களில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் பணிகள் துவங்கும். அடுத்த ஆண்டு மத்தியில் ஓசூர் தொழிற்சாலையில் முழு அளவிலான உற்பத்திப் பணிகள் நடைபெறும்.


Click it and Unblock the Notifications








