டிக்-டாக் வாயிலாக மின்சார ஸ்கூட்டரை வெளியீடு செய்த பிரபல டூ-வீலர் நிறுவனம்... செம்ம ஸ்டைலா இருக்கு!!
டிக்-டாக் வாயிலாக பிரபல நிறுவனம் அதன் மின்சார ஸ்கூட்டரை வெளியீடு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

உலக புகழ்பெற்ற பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பியாஜியோ அதன் ஒன் மின்சார ஸ்கூட்டரை வெளியீடு செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரை மே 28ம் தேதி அன்று சீனாவின் பெய்ஜிங் நகரத்தில் நடைபெற இருக்கும் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையிலேயே அறிமுகத்திற்கு முன்னதாகவே தனது புதுமுக மின்சார ஸ்கூட்டரை நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டிக்-டாக்கின் வாயிலாக இந்த வெளியீடு விழா இன்று (மே25) நடைபெற்றது. இந்த ஆப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இளம் தலைமுறையினரை குறி வைக்கும் வகையில் மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் மின்சார ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் ஸ்டைல் மட்டுமில்லைங்க அதில் இடம்பெற்றிருக்கும் அம்சங்களும் இளைஞர்களைப் பெரியளவில் கவரும் வகையில் அமைந்துள்ளது.

இந்த மிக ஸ்டைலான மின்சார ஸ்கூட்டரை முதலில் உலகின் மிகப்பெரிய மின்சார வாகன சந்தையான சீனாவிலேயே விற்பனைக்குக் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற உலக நாடுகளில் இந்த மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படுவது குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஆகையால், இந்தியா போன்ற நாடுகளில் உள்ள மின்சார வாகன பிரியர்கள் மத்தியில் இத்தகவல் பெரும் ஏக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பியாஜியோ ஒன் மின்சார ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கும் அம்சங்களிலேயே மிக முக்கியமானதாக அதன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இருக்கின்றது.

இந்த திரை மீதிருக்கும் பேனல் தானாகவே டிஸ்பிளேவின் வெளிச்சத்தை ஏற்றி, இறக்கும் வசதியைக் கொண்டிருக்கின்றது. அதாவது, நமது அசைவைக் கொண்டு டிஸ்பிளேவை பிரகாசமாகவும், பயன்படுத்தாத நிலையில் அதிக பிரகாச தன்மையைக் குறைக்கவும் அது செய்யும்.

இத்துடன், செல்போன் இணைப்பு, ரிமோட் டிராக்கிங் வசதி மற்றும் பிரச்னைகளைக் கண்டறியும் வசதி என பல்வேறு சிறப்பு வசதிகள் இந்த ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கின்றன பியாஜியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செல்போன் இணைப்பு வசதிக்காக பிரத்யேக செயலி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த செயலியைப் பயன்படுத்தி பிஜாஜியோ ஒன் மின்சார ஸ்கூட்டர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடித்துவிடலாம். ஆகையால், திருட்டை முற்றிலுமாக ஒழிக்க முடியும். இத்துடன், சாவியில்லாமல் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் வசதியும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றது.

தொடர்ந்து, அதிக இடைவெளி கொண்ட ஸ்டோரேஜ், சிறந்த ஹேண்ட்லிங் திறன் உள்ளிட்டவையும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்று இன்னும் எக்கசக்க அம்சங்களை பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தன்னுள் தாங்கியிருக்கின்றது.

இதன் விலை மற்றும் ரேஞ்ஜ் (ஒரு முறை சார்ஜ் செய்தால் பயணிக்கும் தூரம்) போன்ற முக்கிய விபரங்களை நிறுவனம் வெளியிடவில்லை. அறிமுக தினத்தின்போது இதுகுறித்த தகவல் நிச்சயம் வெளியிடப்படும். ஆகையால், இந்த அறிமுக தினத்தை நோக்கி உலக வாகன பிரியர்கள் அனைவரும் எதிர்நோக்க தொடங்கியிருக்கின்றனர்.

சீனாவைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் ஐரோப்பிய சந்தையில் இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்திய வருகைகுறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. அதேசமயம், இந்தியாவில் மின்சார மூன்று சக்கர வாகனங்களை நிறுவனம் விற்பனைக்கு களமிறக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








