சென்னை வாசிகளுக்கு அட்டகாசமான மிதிவண்டிகளை களமிறக்கிய ஸ்மார்ட் பைக்... நம்ம ஆளுங்க கொடுத்து வைச்சவங்க!
சென்னை வாசிகளுக்கு புதுரக மிதிவண்டிகளை ஸ்மார்ட்பைக் நிறுவனம் களமிறக்கியிருக்கின்றது. இந்த வாகனங்கள் பற்றிய சிறப்பு தகவலை இப்பதிவில் காணலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய பைக் வாடகை நிறுவனமான ஸ்மார்ட் பைக் நிறுவனம், உலக தரம் வாய்ந்த எலெக்ட்ரிக் மிதிவண்டி மற்றும் அடுத்த தலைமுறை மிதி வண்டிகளையும் சென்னையில் வாடகைக்குக் களமிறக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையின் முக்கியமான மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்நிறுவனத்தின் வாடகை வாகனங்களை நம்மால் காண முடியும். அலுவலகம் மற்றும் பிற பணியாளர்களின் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு இந்த சேவை கடந்த காலங்களில் தொடங்கப்பட்டது. இதனை விரிவாக்கம் செய்யும் வகையிலேயே தற்போது புதிய தரத்திலான வாகனங்களை ஸ்மார்ட்பைக் நிறுவனம் சென்னையில் களமிறக்கியிருக்கின்றது.

கடந்த 28ம் தேதியில் இப்பைக்குகள் சேவையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை மெரினா பீச்சில் உள்ள காமராஜர் சாலையில் வைத்து தமிழகத்தின் முதலமைச்சர் கே பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியின்போது பிற முக்கிய அமைச்சர்கள் மற்றும் சென்னையின் முக்கிய அதிகாரிகளும் இருந்தனர்.

தற்போது சென்னையின் முக்கியமான 10 இடங்களில் மட்டுமே இந்த வாகனங்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. விரைவில் 90க்கும் அதிகமான நகரத்தின் பிற பகுதிகளிலும் புதுமுக வாகனங்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. இதற்காக 1000க்கும் அதிகமான வாகனங்கள் தயார் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

தற்போது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் மின்சார இருசக்கர வாகனம் மணிக்கு 25 கிமீ எனும் அதிகபட்ச வேகத்தில் பயணிக்கக் கூடியது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மிக குறைந்த வாடகைக் கட்டணத்திலேயே இந்த வாகனங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

இதேபோன்று, அடுத்த தலைமுறை வாகனமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மிதிவண்டிகள் செயின்களே இல்லாமல் இயங்கக் கூடிய சைக்கிள்களாக இருக்கின்றன. இது மேக்னீசியம் அலாய் வீல் மற்றும் பஞ்சரே ஆகாத டயர்கள் என பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

ஸ்மார்ட் பைக் நிறுவனத்தின் இந்த சேவை ஸ்மார்ட் பைக் எனும் மொபைல் செயலியை மையமாகக் கொண்டு மட்டுமே இயங்குகின்றது. இந்த செல்போன் செயலியைக் கொண்டே வாகனத்தை வாடகைக்கு எடுப்பது, பயன்பாட்டிற்கு பின்னர் ஒப்படைப்பது மற்றும் கட்டணத்தை வழங்குவது என அனைத்துமே இதனை மையமாகக் கொண்டே இயங்குகின்றது.

ஸ்மார்ட் பைக் நிறுவனம் இந்தியாவில் சென்னையில் மட்டுமின்றி பிற நகரங்களிலும் இந்த சேவையை வழங்கி வருகின்றது. அந்தவகையில், தலைநகர் டெல்லி, ஹைதராபாத் மற்றும் சண்டிஹர் ஆகிய நகரங்களில் ஸ்மார்ட் பைக் நிறுவனத்தின் வாடகை வாகனங்கள் கிடைத்து வருகின்றன. விரைவில் மேலும் பல நகரங்களிலும் இந்த சேவையைத் தொடங்க நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அடுத்த தலைமுறை மிதி வண்டிகள் மற்றும் மின்சார மிதிவண்டிகள் வாடகை வாகன சேவையில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வாகனங்கள் ஐடி ஊழியர்கள் மற்றும் பிற துறை பணியாளர்களும் அதிக பயனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








